‘சினிமா பார்ப்பது எப்படி?’ என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதப் போகிறேன் என்றதுமே, என் நண்பர்கள், ‘இது என்ன பெரிய விஷயம்? கண்ணால்தானே பார்க்கப்போகிறோம் என்று ஜோக்கடித்தனர்.வாஸ்தவந்தான்.ஆனால் நல்ல சினிமாவைப் பார்க்க கண் மட்டும் போதாது. சிறிது திரைப்படங்கள் பற்றிய அடிப்படை அறிவும்,ரசனையும் தேவை.
இது வரை, சினிமா எடுப்பதற்கு வழிகாட்டும் நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல வந்துள்ளன. அந்த நூல்களில் கூட ஆங்கில படங்களிலிருந்தோ, இரானிய படங்களிலிருந்தோ எடுத்துக்காட்டுகள் இடம் பெற்றிருக்கும். அப்படியிருக்க, நல்ல சினிமாவை எப்படி ரசிப்பது (Film appreciation) எப்படி என விளக்கும் முழுமையான ஆய்வு தொடர் தமிழில் வந்ததில்லை.
நாம் நல்ல சினிமாவை பார்க்காத வரை, அல்லது, திருட்டு சி.டி.யில் பார்க்கும் வரை, நல்ல படங்கள் வெளி வருவதில்லை என சினிமா எடுப்பவர்களை குற்றம் சாட்ட முடியாது.
இன்று சினிமா நம் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஒரு அங்கம் ஆகிவிட்டது. சற்று ஓய்வு நேரம் கிடைத்தால், ‘சரி ஏதாவது ஒரு சினிமாவுக்கு போய்ட்டு வரலாம்...’ என்று கிளம்பி விடுகிறோம். அல்லது எந்த சேனலில் என்ன படம் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தோடு ரிமோட்டை கையில் எடுக்கிறோம். அதுவும் குறிப்பாக இன்றைய கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் குழுமும், இடங்களில் சினிமா தியேட்டர்களும் முக்கியமான ஒன்று.
அப்படி நாம் விரும்பி பார்க்கும் சினிமா ஜஸ்ட் லைக் தட் எடுக்கப்படுவதில்லை. நாம் நொடிப்பொழுதே காணும், கேட்கும் விஷயத்தைப் படமாக்கக் கூட எத்தனைப் பேர் உழைக்கிறார்கள்! ரசூல் பூக்குட்டிக்கு ஒலிக் கலவைக்காக ஆஸ்கார் விருது கிடைக்கும் வரையில் அப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்?
ஒரு ரயில் நிலையத்தில் காதலனும், காதலியும் சந்திக்கும் காட்சியை மெய்மறந்து பார்க்கும் எத்தனை பேர் அதன் பின்னனியில் வரும் ரயில் நிலைய சூழலை உருவாக்கும் சிறிய ஒலிகளை ரசித்திருக்கப் போகிறார்கள்?
இது மட்டுமே இல்லை. சினிமாவில் அடிப்படையான விஷயங்களில் கூட நாம் ரசிக்க எத்தனையோ அம்சங்கள் உள்ளது. இயக்குனர்கள் தான் சொல்ல விரும்பும் கதையை பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாகக் கொடுக்க எத்தனையோ சின்னசின்ன யுக்திகளை பயன்படுத்துகிறார்கள். அதை திறம்பட கையாளும் இயக்குனர்கள் வெற்றிப் பெறுகிறார்கள்.
சரி.இந்த சங்கதிகளெல்லாம் இயக்குனர்களுக்கு தெரிந்திருந்தால் போதாதா? நாம் ஏன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? ஒருப் படத்தின் வெற்றியும் தோல்வியும் ரசிகர்கள் கையில்தானே இருக்கிறது? ஓவியத்தின் அருமைத் தெரிந்தவந்தானே சிறந்த ஓவியத்தை தேர்ந்தெடுத்து வாங்குவான்?
சினிமா தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணத்தை திருப்பி எடுக்க பெரிதும் உறுதுணையாக இருக்கும் இன்றைய இளைஞர்கள் நல்ல சினிமாவை அடையாளம் கண்டுவிட்டால், ‘ஹீரோவுக்காக மட்டும்...’ என்று நினைத்து படம் பார்க்கும் நிலைமாறி, நாலு சாங், நாலு ஃபைட், ஒரு பஞ்ச் டயலாக் விகிதம் வரும் படங்கள் குறையும், நல்ல தரமான திரைப்படங்கள் வெற்றிப் பெற ஆரம்பிக்கும். தமிழ் சினிமா உலக சினிமாக்களுக்கு முன்னோடியாக இருக்கும் பொற்காலம் தோன்றும்.
அது மட்டுமின்றி.திரைப்படத்தின் அஸ்திவாரமான சின்னசின்ன சுவைகளை நாம் ரசிக்க ஆரம்பித்துவிட்டால், ஏதோ ஒரு வௌவால் பறக்கும் தியேட்டரில் திருட்டுத்தனமாக படம்பிடித்துக் கொண்டு வந்து விற்கப்படும் திருட்டு விசிடியில் படத்தை பார்க்க மனம் வராது.
அடுத்த இதழிலிருந்து முழுக்க முழுக்க தமிழ் சினிமா உதாரணங்களிலிருந்தே சினிமாவை ரசிக்க ஆரம்பிப்போம்.
Want to write for Maniyosai?
| < Prev |
|---|



