செ
ன்ற பகுதி ஆரம்பத்தில் ‘ கதையிலிருந்து திரைக்கதையை உருவாக்கலாம், ஆனால் கதையையே உருவாக்காக் கூடாது’ என்று சொல்லிவிட்டு பின்னர் கடைசியில் பழையக் கதைகளிலிருந்து புதுக் கதையை உருவாக்குவது பற்றி கூறியிருப்பது முரணாக இருக்கிறது அல்லவா?
அதாவது கதைக் கரு என்பது சட்டென்று நம் மனதில் தோன்றும்
ஒரு ‘பொறி.’ பின்னர் நாம் நம் வசதிக்கேற்ப அதன் கதை, திரைக்கதையை மெருகேற்றிக் கொள்ளலாம். ஆனால் அந்த கருவையே, பொறியையே கதாநாயகனின் இமேஜுக்கு ஏற்ப யோசித்து, ஏதாவது இரானிய பட டிவிடியை பார்த்து அதிலிருந்து சில சீன்களை சுட்டு, அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் தட்டி சரி செய்து அரைக்குறையாக உருவாக்குவது தரமான கதைக் கருவாகாது.
சரி. சென்ற வாரக் கடைசியில் சொன்ன விஷயத்துக்கு வருவோம். பழையக் கதையிலிருந்து புதுக்கதையா? நல்லக் கதையாக இருக்கிறதே?!? அது எப்படி? காப்பியடிக்க சொல்கிறீர்களா? காப்பியும் இல்லை; கீப்பியும் இல்லை. ’நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு...’ என்பதுப் போல கதையை மாத்தி யோசித்தால் புதுக் கதை கிடைக்கும்.
உதாரணத்திற்கு கதாநாயகன் கதாநாயகியை சந்தித்து தன் காதலை சொல்கிறான். உடனே அவளும் அதை ஏற்றுக் கொண்டுவிடுகிறாள்....... கதை இவ்வாறாக செல்கிறது. சரி கொஞ்சம் மாத்தி யோசிப்போம். நாயகி காதலை ஏற்கவில்லையென்றால்...? நிலைமை தலைகீழ். காட்சிகளே மாறிவிடும். நாயகன் அவள் காதலைப் பெறுவதற்காக தவமிருக்கத் தொடங்கிவிடுவான். அவள் எங்கெல்லாம் செல்கிறாளோ அங்கெல்லாம் பின் தொடர்ந்து, இல்லாத சர்க்கஸெல்லாம் செய்து அவள் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்பான். ஒரு சின்னத் திருப்பத்தினால் கதையும், காட்சிகளும் மாறிவிடுகின்றன.
‘புதிய வார்ப்புகள்’ என்றொரு படம். இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளிவந்தது. நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். நாயகியின் வீட்டில் அவளை வலுக்கட்டாயமாக வேறிடத்தில் திருமணம் செய்துவிடுகின்றனர். அவள் கணவனோ கொடுமைக்காரன். அவளைப் பாடாய்படுத்துகிறான். இறுதியில் அவள் வேறுவழியின்றி அவனைக் கொன்றுவிட்டு காதலனுடன் இணைகிறாள்.
இதையே சற்று மாத்தி யோசிப்போம். வழக்கம்போல் நாயகனும் நாயகியும் காதலிக்கின்றனர். நாயகியின் வீட்டில் அவளை வலுக்கட்டாயமாக வேறிடத்தில் திருமணம் செய்துவிடுகின்றனர். இங்கேயும் கணவன் கொடுமைக்காரனாக இருந்துவிட்டால் புதிய வார்ப்புகளுக்கும் இதற்கும் வித்தியாசமில்லை. ஆனால், இங்கேயோ கணவன் சிறந்த குணவான். பண்புள்ளவன். மனைவியை மதிப்பவன். அப்புறமென்ன? நாயகி நல்ல கணவனுடன் ஒற்றுமையாய் குடும்பம் நடத்திவிட்டால் அதில் கதை என்ன இருக்கிறது? நாயகியால் தன் காதலனை மறக்க முடியவில்லை. திருமணமானாலும் காதலனுடன் இணையவே விரும்புகிறாள்.
வேறு விதமாக சிந்தித்ததில் உதயமான புதியக் கதை இது. தன் மனைவியை அவள் காதலனுடன் சேர்த்து வைக்க கணவன் முயற்சிக்கிறான். கடைசியில் தாலி செண்டிமன்ட் அது, இதுவென பல காரணங்களால் கணவனின் அருமை உணர்கிறாள் மனைவி. இந்த புதுக் கதை 1981ம் ஆண்டு ’அந்த 7 நாட்க’ளாக வெளிவந்து வெற்றியும் பெற்றது.
இந்த யுக்தியே 12b படத்தின் மையக்கருவும் கூட. ஹீரோ 12b பஸ்ஸில் ஏறிவிட்டால் அவன் வாழ்க்கை ஒருவாறிருக்கும். ஏறாவிட்டால் வேறு விதமாக இருக்கும். இந்த இரு விதமானக் கதைகளையும் ஒரேப் படத்தில் கூறியிருப்பது இப்படத்தின் புதிய முயற்சி. (இயக்குனர்: மறைந்த ஓளிப்பதிவாளர் ஜீவா)
இப்படி கதையின் டர்னிங் பாயிண்ட்டை மாத்தி யோசித்து புதுக்கதை உருவாக்குவது ஒரு வகை. இன்னொரு வகை பழையக் கதையை காலத்திற்கேற்றாவாறு மாற்றி யோசித்தல் ... உதாரணத்திற்கு சத்தியவான் சாவித்திரி கதையை எடுத்துக் கொள்வோம். எமனிடம் போராடி அவன் பிடியிலிருந்து கணவனை மீட்டு வருகிறாள் சாவித்திரி. இப்பொழுது அதேக் கதையை பளபளக்கும் ஜிகினா க்ரீடம், நகைகள் அணிந்து, எருமை மேல் அமர்ந்த எமன், அவனுடன் தன் ‘நாதனு’க்காகப் போராடும் சாவித்திரி என படமெடுத்தால் ஒரு ஈ, எறும்பு கூட இல்லாமல் தியேட்டரை சுத்தமாக பராமரிக்கலாம்.
அதனால் அதே கணவன், மனைவி. ஆனால் எமனுக்கு பதிலாக, எமனுக்கு நிகரான தீவிரவாதிகள். மரணத்திற்கு பதிலாக மரண மிரட்டலுடன் கடத்தல். தீவிரவாதிகள் கணவனை கடத்திவிட போராடி மீட்டு வருகிறாள் இளம் மனைவி. காலத்திற்கேற்ப மாற்றி யோசித்ததில் இயக்குனர் மணிரத்னத்தின் வெற்றி க்ரீடத்தில் ‘ரோஜா’ என்ற ஒரு மயிலிறகு ஏறியது.
இதுப்போல எத்தனை புராண கதாப்பாத்திரங்கள். துரியோதனனும் கர்ணனும் மம்மூட்டி ரஜினி ஆகி அவர்கள் நட்பு தளபதியானது. ராமாயணத்தில் ராவணனல் கடத்தப்பட்ட சீதையை ராமன் மீட்கிறான். ‘செல்லமே’ படத்தில் பரத்தால் கடத்தப்பட்ட மனைவி ரீமாசென்னை கணவன் விஷால் மீட்கிறான். இப்படத்தில் ரீமாவின் பெயர் மைதிலி. விஷால் பெயர் ரகு என கதாப்பாத்திரங்களின் பெயரும் இராமாயண கதாப்பாத்திரங்களின் பெயராகவே இருப்பதை கவனித்திருப்பீர்கள்...
நல்லக் கதைக் கிடைத்தாயிற்று. அதை எப்படி சுவாரஸ்யமான சினிமாவாக்குவது........?
| < Prev | Next > |
|---|











