பெரிய கதையையோ, மெசேஜையோ எதிர்பார்க்காமல், இரண்டரை மணி நேரம் பொழுதுபோனால் சரி என நினைத்து படத்துக்கு போபவராக இருந்தால், பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு தாராளமாக போகலாம்.
கும்பகோணத்தில் பல ஆண்டுகளாக அரியர்ஸ் எழுதி வரும் மாணவன் ஆர்யா. ஒரு பொறுப்பும் இல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றி வரும் அவர், தன் அண்ணியின் தங்கை நயன்தாராவை காதலிக்கிறார். அவரோ எம்.எஸ்.சி வரை படித்தவர். போதாதக் குறைக்கு, ஆங்கிலப் பேராசிரியை வேறு! பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் உனக்கு என் தங்கையை எப்படி கட்டி வைப்பது என அண்ணி விஜயலட்சுமி (பிரண்ட்ஸ் படத்தில் சூர்யா ஜோடியாக வருவாரே) கேட்க, ரோஷப் பட்டுக் கொண்டு, உழைத்து சம்பாதித்துக் காட்டுகிறேன் என வைராக்கியத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஆர்யா. வைராக்கியத்துடன் வீட்டை விட்டு செல்லும் ஆர்யா, வாழ்க்கையில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் கதை.
ஆர்யா ஜோராக இருக்கிறார். பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் வாலிபானாக வரும் போதும் சரி, அரைகுறை ஆங்கிலத்தில், நயன்தாராவிடம் பீட்டர் விடும் போதும் சரி, சுயதொழில் செய்து கல்லா கட்டும் போதும் சரி, மனிதர் தூள் கிளப்புகிறார். குரல் ஏற்ற இறக்கத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆங்கிலப் பேராசிரியையாக நயன்தாரா, சோகையாக வருகிறார். நகைச்சுவையாக நடிக்கவும் முயற்சித்துள்ளார். கதை ஓட்டத்தில் முக்கிய பங்கு இருந்தும், அவர் வரும் காட்சிகள் அழுத்தம் இல்லாமல் அமைக்கப் பட்டிருப்பதால், அவரது நடிப்பு அவ்வளவாக மனதில் பதியவில்லை.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் ரியல் ஹீரோ சந்தானம். தல-தளபதி என்கிற வித்தியாசமான பெயரில் சலூன் வைத்து நடத்தும் அவர், ஆர்யா வரும் 90 சதவீத காட்சிகளில் வருகிறார். வழக்கமாக இரட்டை அர்த்த வசனங்கள் பேசிய படி வரும் சந்தானம், இந்தப் படத்தில் அதை தவிர்த்து விட்டு, அனைவரையில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். முரட்டு, கந்து வட்டி ஆசாமியிடம் கியாரண்டி கையெழுத்து போட்டு ஆர்யாவுக்கு கடன் வாங்கி தந்து விட்டு, ஆர்யாவின் தொழில் நொண்டி அடிப்பதை பார்த்து, ஏற்படப் போகும் பின்விளைவுகளை நினைத்து அவர் வாய் விட்டு அழும் காட்சிகளில் முழுக்க முழுக்க சந்தானம் ஆதிக்கம்தான்.
ஆர்யாவின், பிராணிகள் மருத்துவரான அண்ணன், டிவி காம்பியர் ஆகும் ஆசையில் இருக்கும் தங்கை என பலரும் சின்னத்திரை இறக்குமதி. ஆனால், அழுவாச்சி சீரியல்களில் பார்த்த முகங்கள் கல கலவென வருவது ஆறுதல்!
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான டுடோரியல் பள்ளி நடத்தும் ஆர்யா, கண் பார்வையற்ற ஆசிரியையை பணிக்கு அமர்த்தி, அதன் மூலம் வெற்றி பெறுவது போல் காண்பித்திருப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப் பட்டிருக்கும் கெளரவம்.
யுவன்சங்கர் ராஜா இசையில் , அயிலே அயிலே, யார் அந்த பெண் ஆகிய பாடல்கள் கேட்கும் படி உள்ளன. படம் முடிந்து விட்டது என நினைக்கும் போது திடும்மென பாடல் வருவது அலுப்பு.
உச்சக் கட்டக் காட்சியில் திடீரென ஒரு பெரிய நடிகர் கெளரவ தோற்றத்தில் வருவது, அவருக்கும் ஆர்யாவுக்கும் சண்டை வருவது, கெளரவ நடிகருடன், படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்போனில் பேசுவது, கெளரவ நடிகர் சொல்லும் மெசேஜ் என பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் காட்சிகளை தேவையில்லாமல் வள வளவென வளர்த்துள்ளனர்.
தன் முதல் படமான சிவா மனசுல சக்தி படம் போலவே, இந்தப் படத்தையும் கதையே இல்லாமல், அதே சமயம் நகைச்சுவை ததும்ப எடுத்திருக்கும் இயக்குனர் ராஜேஷுக்கு பாராட்டுகள். ஆனால், படம் முழுக்க காமெடியாகவே நகர்வதால், முக்கியமான திருப்புமுனை காட்சிகளிலும் ஒன்ற முடியவில்லை.
பாஸ் என்கிற பாஸ்கரன் - சூப்பர் பாஸ்
மணியோசை கணிப்பு: 42/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


