3 ஆண்டு உழைப்புக்கு பிறகு ஒரு வழியாக வந்து விட்டான் எந்திரன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர், கலாநிதி மாறன் என மிக பிரம்மாண்ட கூட்டணியாக இருப்பதால் எந்திரன் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு பற்றி நாங்கள் எழுத தேவையில்லை.
தமிழ் திரைப்படங்களுக்கு மிகவும் பழக்கப் பட்டுப் போன கதைதான் எந்திரன் படத்தினுடைய கதை. அதாவது, விஞ்ஞானி ரஜினியும், ஐஸ்வர்யா ராயும் காதலிக்கின்றனர். விஞ்ஞானி ரஜினியால் உருவாக்கப் படும் எந்திரன் ரஜினியும், ஐஸ்வர்யா ராயை காதலிக்கிறது. உருவாக்கியவருக்கே மிகப் பெரிய தலைவலி ஏற்படுத்துகிறது. இந்த முக்கோணக் காதல் கதையின் பிரம்மாண்ட முடிவு என்ன என்பதை திரையரங்கில் அறிந்துக் கொள்ளலாம்.
நல்ல நடிகரான ரஜினியை, ஸ்டைல் என்ற குறுகிய வட்டத்தில் சுருக்கி விட்டார்களே என்ற ஆதங்கம் பலருக்கும் பல ஆண்டுகளாக இருக்கலாம். தன் வழக்கமான ஸ்டைல்களோ, பஞ்ச் வசனங்களோ, அரசியல் வசனங்களோ இல்லாமல், எந்திரன் படத்தில் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார் ரஜினிகாந்த். விஞ்ஞானி ரஜினிக்கு இந்தப் படத்தில் ஒரு சின்ன சண்டை கூட இல்லை என்பது ஆச்சரியம். ரஜினியை இவ்வளவு இளமையாகவும், புதுமையாகவும் காண்பித்திருப்பதற்கு படக் குழுவினருக்கு நன்றி.
சிட்டி(எந்திரன்) கதாபாத்திரத்தில் நடிக்காமலேயே நடித்துள்ளார் ரஜினிகாந்த். சமைப்பது , சண்டை போடுவது , நடனம் ஆடுவது, கார் ஓட்டுவது முதல் காதலிப்பது வரை பல சாகசங்கள் செய்து ரசிகர்களை, குறிப்பாக, குட்டீஸ்களை பரவசப் படுத்துகிறது சிட்டி ரோபோ (ரஜினி). காமெடிக்கென கருணாஸ், சந்தானம் இருந்தாலும், எந்திரன் ரஜினி அவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்துள்ளார். முதல் பாதியில், காமெடியில் கலக்கியிருக்கும் எந்திரன் ரஜினி, இரண்டாம் பாதியில் வில்லத் தனம் செய்யும் எந்திரனாக மாறி, நடிப்பின் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளார். எந்திரன் ரஜினியின் ஒப்பனையும் மிகவும் சிறப்பாக உள்ளது. Fancy dress competition போல வேஷம் கட்டி வராமல், ரஜினியையே, ரோபோ கதாபாத்திரத்துக்கு பொருந்துவது போல ஒப்பனை செய்யப் பட்டிருப்பதை உளமார பாராட்டலாம்.
நடிப்புக்கு அத்தாரிட்டி போல, பல ஆண்டுகளாக ஃபிலிம் காட்டி வரும் சில நடிகர்களை, ஓவர்டேக் செய்ய ரஜினிகாந்த்திற்கு எந்திரன் படம் போதும்.
ஐஸ்வர்யா ராய், ராவணன் படத்தில் இருந்ததை விட அழகாக இருக்கிறார். வெறும் அழகு பதுமையாக மட்டும் வந்து போகாமல் ஓரளவு நடிக்கவும் செய்கிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஏற்ற திரை ஜோடி என சொல்லலாம்.
கருணாஸ் மற்றும் சந்தானம் பற்றி பெரிதாக குறிப்பிட எதுவும் இல்லை. பாதி படத்தில் திடீரென அவர்கள் தலைமறைவாவது ஏனோ?
சுஜாதா அவர்களின் வசனம் சுருக்கமாகவும் அழகாகவும் உள்ளது. 'நக்கலா?' எனக் கேட்டால் 'இல்லை..நிக்கல்' என சொல்வது, 'காதல் வந்தால் நட்டு கழண்டிடும்னு சொல்வாங்க. பாருங்க எனக்கும் நட்டு கழண்டிடுச்சு.' என எந்திரன் ரஜினி பேசும் வசனங்களில் சுஜாதா அப்பட்டமாக தெரிகிறார். படத்தின் திரைக்கதையிலும் சுஜாதாவின் ஈடு இணையற்ற பங்களிப்பை உணர முடிகிறது. வீ மிஸ் யூ சுஜாதா.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்த பாடல்களும், அவை படமாக்கப் பட்ட விதிமும் அட்டகாசம். படத்தின் பாடல்களை விட பின்னணி இசையில் அதிகம் கவர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
ரத்னவேல் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும், சாபு சிரில் கலை இயக்கமும் பரம திருப்தி அளித்துள்ளது.
எந்திரன் படத்தின் உச்சக்கட்டக் காட்சி பிரம்மாண்டத்தின் உச்சக் கட்டம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் எந்திரன் படம் நிச்சயமாக சக்கைப் போடு போடும். சி சென்டர்களில்?
எது எப்படியோ, ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவு படம் செய்யக் கூடிய தொழில்நுட்ப கலைஞர்கள் தமிழில் உள்ளனர் என்பதை நினைத்து பெருமைதான்.
மணியோசை கணிப்பு: 65/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|






Endhiran is a fantastic movie.