
நீண்ட நாட்களுக்கு பிறகு பஞ்ச் வசனங்களும், நம்ப முடியாத வீர தீர சாகசங்களும் இல்லாத ஒரு கதையை தேர்வு செய்து நடித்திருப்பதற்கு விஜய்யை முதலில் மனதார பாராட்ட வேண்டும்.
மலையாளத்தில் 'பாடிகார்ட்' என்ற பெயரில் சூப்பர் ஹிட் ஆன படத்தை விஜய்க்கு தகுந்த மாதிரி லேசான மாற்றங்கள் செய்து தமிழ் படுத்தியிருக்கிறார்கள்.
பொறுப்பில்லாமல் ஜாலியாக இருக்கும் இளைஞன் விஜய். அவரது தந்தை நிழல்கள் ரவி,அவரை முன்னாள் தாதா ராஜ்கிரண் வீட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறார். விஜய்யை பிடித்து போகவே, அவரை கல்லூரி செல்லும் தன் மகள் அசினுக்கு பந்தோபஸ்தாக (Bodyguard) ஆக்குகிறார் ராஜ்கிரண்.
காவலனாக விஜய் தன்னை பின் தொடர்வதை விரும்பாத அசின், தன் குரலை மாற்றிக் கொண்டு விஜய்க்கு ஃபோன் செய்து, அவரைக் காதலிப்பதாக கதைக்கிறார். முகம் தெரியாத அந்த ஃபோன் காதலியை உண்மை என நம்பி விடுகிறார் விஜய். தான் விளையாட்டுக்கு செய்ததை விஜய் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டதை நினைத்து பச்சோதாபப் படும் அசின், விஜய்யிடன் உண்மையை சொல்ல நினைக்கிறார்.
அதற்கிடையே, விஜய்யும், அசினும் காதலித்து, ஊரை விட்டு ஓடி போகப் போவதாக நினைக்கும் ராஜ்கிரண், வெகுண்டு எழுந்து அவர்கள் இருவரையும் வீட்டு சிறைக்குள் அடைக்கிறார். தனக்காக தன் காதலி ரயில் நிலையத்தில் காத்திருப்பார் என ராஜ்கிரணுடன் விஜய் கெஞ்சுகிறார். விஜய்யை விடுவிக்கும் படி அசின் சிபாரிசு செய்ய, விஜய்யை விடுவிக்கிறார் ராஜ்கிரண். ஒரு வேளை, ரயில்நிலையத்தில் விஜய் காதலி வரவில்லையென்றால், அவரை போட்டுத் தள்ளும் படி தன் அடியாட்களுக்கு உத்தரவிடுகிறார் ராஜ்கிரண். பிறகு என்ன ஆனது என்பதே உச்சக்கட்டம்.
கதையோட்டம் தெளிவாக இருப்பதால், திரைக்கதையும் குழப்பமில்லாமல் அமைந்துள்ளது. இது காவலன் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாய்ண்ட்.
நாம் முதலிலேயே சொன்னது போல, இது முழுக்க முழுக்க 'விஜய் படம்'. தன் அலட்டல் இல்லாத நடிப்பால் படம் நெடுக கைதட்டல் பெறுகிறார் விஜய். அச்சுபிச்சான படங்களில் நடிக்காமல், கதை என்ற வஸ்து இருக்கும் படங்களில் தொடர்ந்து நடித்தால் விஜய்க்கும் நல்லது, திரைப்பட ரசிகர்களுக்கும் நல்லது.
காவலன் படத்தில், அசினுக்கு சொல்லிக் கொள்வது போன்ற ரோல் இல்லை. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார் அசின்.
காவலன் படத்தின் மற்றொரு ஹைலைட், வடிவேலு காமெடி. இந்தப் படம் வடிவேலுவுக்கு ஒரு மறு பிரவேசம் என்றே சொல்ல வேண்டும்.
காவலன் படத்தில், ரோஜா, எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி என பல திறமை மிகு நடிகர்கள் இருந்தும், விஜய் என்ற சுனாமிக்கு எதிரே யாராலும் தாக்குபிடிக்க முடியவில்லை.
காவலன் படத்தில் மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருப்பவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.ஒரு பாடலும் மனதில் பதியவில்லை.
படத்தில் ஒரு சில லாஜிக் தடுமாற்றங்கள் இருந்தாலும், விஜய் தனம் இல்லாத விஜய் படம் கொடுத்ததற்கு இயக்குனர் சித்திக்கை தாராளமாக பாராட்டலாம்.
மணியோசை கணிப்பு: 48/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



