
குள்ளநரி கூட்டம் என்ற படத்தின் தலைப்பை கேட்டதும் முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்குமோ என பயப் பட வேண்டாம். நீங்கள் நினைப்பது போல எந்த குறிப்பிட்ட அரசியல்வாதியையும் மனதில் வைத்து இந்தப் படம் எடுக்கப் படவில்லை.
காதலுக்காக காவல் துறையில் சேரும் ஒரு இளைஞனின் கதைதான் குள்ளநரி கூட்டம். தேர்வு காலமாக இருப்பதாலும், உலக கோப்பை கிரிக்கெட் காரணமாகவும் அவ்வளவாக படங்கள் வெளிவராமல் இருக்கும் நிலையில் ஆறுதல் பரிசு வெளிவந்து நம்மை மகிழ்வித்திருக்கும் படம்தான் குள்ளநரி கூட்டம்.
மதுரையில் எம்.பி.ஏ. படித்து விட்டு வேலை வெட்டி இல்லாமல் சுற்றி வரும் இளைஞன் விஷ்ணு. தன் செல்போனை ரீசார்ஜ் செய்ய விஷ்ணுவிடம் அவர் அப்பா பணத்தைக் கொடுக்க, செல்போன் கடை பெண்ணின் அலட்சியத்தால் வேறு எண்ணுக்கு தவறுதலாக ரீசார்ஜ் ஆகி விடுகிறது. நிலைமையை விளக்கி ரீசார்ஜ் பணத்தை பெற்று கொள்ள தவறுதலாக ரீசார்ஜ் செய்ய பட்ட எண்ணுக்கு விஷ்ணு தொடர்பு கொள்ள, ரம்யா நம்பீசனுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அந்த பரிச்சயம் காதலாக கனிகிறது. தன் அண்ணனை அழைத்து கொண்டு பெண் கேட்க செல்லும் விஷ்ணுவிடம், காவல் துறையில் சேர்ந்தால்தான் பெண் கொடுக்க முடியும் என சொல்லி விடுகிறார் காவல் அதிகாரியான ரம்யா நம்பீசனின் தந்தை. விஷ்ணுவின் தந்தைக்கோ போலீஸ் என்றாலே அலர்ஜி. தந்தையை டபாய்த்து விட்டு போலீஸ் தேர்வில் கலந்து கொள்கிறார் விஷ்ணு. அவர் நினைத்தது போல போலீஸ் ஆகி ரம்யா நம்பீசனை கை பிடித்தாரா, போலீஸ் மீது வெறுப்பு கொண்டிருக்கும் தன் தந்தையை விஷ்ணு சமாளித்தாரா என பல கேள்விகளுக்கு விடை அறிந்து கொள்ள நீங்கள் தியேட்டருக்கு செல்லுங்கள்.
அப்பாவிடம் தினம்தோறும் 10 ரூபாய் பேட்டா வாங்கி காலம்தள்ளும் அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்துக்கு விஷ்ணு கனகச்சிதமாக பொருந்துகிறார். ரீசார்ஜ் பணத்தை வசூலிக்க ரம்யா நம்பீசனுக்கு மிஸ்டு கால் கொடுத்து கெஞ்சும் காட்சிகளில் விஷ்ணு ஜோர். தேவையில்லாத பராக்கிரம செயல்களோ, சம்மந்தமில்லாத குத்து வசனங்களோ (பன்ச் டயலாக்!!) இல்லாமல் யதார்த்தமாக கதையுடன் பொருந்திருப்பது பாராட்ட தக்கது.
ரம்யா நம்பீசன் பாந்தமாக உள்ளார். தொப்புள் காட்டும் கவர்ச்சி கண்றாவிகள் இல்லாமல் அடுத்த வீட்டு பெண் (ச்சும்மா பேச்சுக்கு!!) போல எளிமையாக இருப்பது இனிமை. கதையோட்டத்துக்கு அனாவசியமான கதாபாத்திரம் இல்லையென்றாலும் சொல்லி கொள்ளும் அளவு அவருக்கு ஆழமான காட்சிகள் எதுவும் இல்லை.
அசந்தால் ஸ்க்ரீன் வெளியே அருவா வந்து விழுமோ என அஞ்ச வைக்கும் வன்முறையோ, டாடா சுமோவில் உதார் விட்ட படி ஊரை சுற்றி வரும் வில்லன் கோஷ்டியோ, திகட்டும் வட்டார மொழியோ இல்லாமல் மதுரையை காட்டியதற்கு இயக்குனர் ஸ்ரீபாலாஜிக்கு கைகுலுக்கலாம். விஷ்ணு, ரம்யா நம்பீசன் காதலில் உயிரோட்டம் இல்லாததுதான் ஏனென்று தெரியவில்லை. அதனால், விஷ்ணு போலீஸ் ஆவாரா ஆக மாட்டாரா என்ற பதற்றம் நமக்கு ஏற்பட மாட்டேன் என்கிறது.
அது போல, விஷ்ணுவின் தந்தைக்கு போலீஸை கண்டால் அப்படி என்ன வெறுப்போ புரியவில்லை! பாஸ்போர்ட் சரி பார்த்தலுக்கு போலீஸ் வீட்டுக்கு வந்தால் கூட கோபித்து கொள்ள கூடிய அவர் அதற்கு காரணமாக 'நான் பார்த்த போலீஸ்லாம் கெட்டவங்களாதான் இருந்தாங்க.' என ஒரு காட்சியில் 'ஜஸ்ட் லைக் தட்' விளக்கமளிப்பது ஏற்று கொள்ளும் படி இல்லை.
பல கதாபாத்திரங்கள் நாடக தனமாக வசனம் பேசுவதை தவிர்த்திருக்கலாம்.
குள்ளநரி கூட்டம் படத்தில் கவனிக்க வைத்த ஒரு முக்கியமான அம்சம் கிளைட்டனின் வசனங்கள். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே, தொகுதி மக்களை சந்தித்து, 'எம்.எல்.ஏ.வை பார்க்க முடியாது. அவர் பிசியா இருக்கார்.' என சொல்லி விட்டு, 'நான் தொகுதி பக்கம் போய் அஞ்சு வருஷம் ஆகுது, அதான் யாருக்கும் அடையாளம் தெரியலை.' என்று சொல்லும் வசனம் அட்டகாசம்.
செல்வகணேஷ் இசையில் 'விழிகளிலே' , 'காதல் என்பதை' ஆகிய பாடல்கள் ரம்மியம்.
ஆங்காங்கே சிற்சில குறைகள் இருந்தாலும், ஆபாசமோ, வன்முறையோ துளி கூட இல்லாமல் ஒரு படத்தை நீண்ட நாட்கள் பிறகு கொடுத்ததற்கு குள்ளநரி கூட்டத்தினரை (படக் குழுவினர்!!) மனதார பாராட்டலாம்.
மணியோசை கணிப்பு: 45 / 100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


