கிராமத்து ஸ்டைலில் வந்திருக்கும் இன்னொரு படம். கதையிலும் ஒரு புதுமையும் இல்லை. வழக்கமான காதல் கதை. கிராமத்து முரட்டு ஹீரோ வித்தார்த். அவனை வெறித்தனமாக காதலிக்கும் ஹீரோயின் அமலா என நாம் ஏற்கெனவே பலமுறை பார்த்துப் பழகிப் போன காதல் கதைதான். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன் தனது தனித்தன்மையால் படத்தை சற்று வித்யாசப்படுத்தியிருக்கிறார்.
பிரபு சாலமனின் முந்தையப் படங்களான கொக்கி, லீ, லாடம் போன்ற படங்கள் வெற்றிப் பெறாவிட்டாலும் புதுமையாக கையாளப்பட்டிருந்ததைப் போல இதிலும் செய்திருக்கிறார். மிக எளிமையான கதை. நேரடியான அணுகுமுறை என்பதில் பிரபு சாலமனைப் பாராட்ட வேண்டும்.
படிப்பறிவில்லாத முரட்டு இளைஞன் ஹீரோ வித்தார்த் (சுருளி). கைவிட்ட குடிக்கார தந்தை, நிராதரவாக நின்று சிறுவனான கதாநாயகனின் உதவியுடன் மகளைப் (கதாநாயகி) படிக்க வைக்கும் தாய் என மிக கஷ்ட ஜீவனம் நாயகி அமலாவுக்கு (மைனா).
சிறுவயது முதல் சுருளியும், மைனாவும் உருகி உருகி காதலிக்கின்றனர். அவர்களது காதலுக்கு எதிரி எல்லாப் படங்களையும் போல நாயகியின் அம்மாதான். அதனால் அவரைத் தாக்க வித்தார்த் முயற்சிக்கும் போது கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்படுகிறார் சுருளி.
விடுதலைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் வேளையில் மைனாவின் திருமணத்தை நிறுத்துவதற்காக சிறையிலிருந்து தப்பிக்கிறார் சுருளி. அவரை தேடிக் கிளம்பும் போலீசாராக சேதுவும், தம்பி ராமையாவும். காதலர்களை பார்த்து மனம் மாறி
அவர்களை சேர்த்து வைக்க அவர்களே உதவுகின்றனர். ஆனால் கடைசியில் யாரும் எதிர்ப்பாராத திடுக் கிளைமாக்ஸ் படத்தை வித்யாசப்படுத்துகிறது.
ஏற்கெனவே ’கொக்கி’ படத்தில் சிறு கதாப்பாத்திரத்திலும் ’தொட்டுப்பார்’ படத்திலும் நடித்திருக்கும் வித்தார்த் மிக ஆரவாரமாக இல்லாவிட்டாலும் தனக்கு தந்த கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். படத்தின் தலைப்பு உணர்த்துவதுப் போல இது கதாநாயகியை மையமாகக் கொண்டப் படம். இதற்கு சிந்து சமவெளி அனகா பாந்தமாகப் பொருந்துகிறார். மருந்துக்கும் மேக்கப் இல்லாத ஹீரோயின் கிராமத்துப் பெண்களை தத்ரூபமாக பிரதிபலித்தாலும் சற்று அலுப்பூட்டுகிறது.
நாயகன் நாயகியை தவிர மற்ற கதாப்பாத்திரங்களும் செம்மையாக உள்ளது. பல படங்களில் வடிவேலுவின் எடுபிடியாக வந்து சென்ற தம்பி ராமையாவிற்கு தன்னை பலரும் திரும்பி பார்க்க செய்ததில் இது ஒரு முக்கியமான படம். ’எதிர்நீச்சல்’ படத்தில் வரும் ‘இருமல் தாத்தா’ கதாப்பாத்திரத்தைப் போல இப்படத்தில் தம்பி ராமையாவின் மனைவி கதாப்பாத்திரம் தொலைப்பேசியில் பேசுவதாகக் காட்டப்படுவதைத் தவிர கடைசி வரை திரையில் வருவதே இல்லை. இதுப் போல ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் படைப்பிலும் சற்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர்.
ஹீரோவின் இளமைக் காலம், நாயகனை விட தைரியமான நாயகி என பல இடங்களில் பருத்திவீரன் எட்டிப்பார்க்கிறான். ஹீரோ கைது, போலீசார் உதவுவது என பல இடங்களில் பாலுமகேந்திராவின் ‘அது ஒரு கனாக்காலம்’ வாசனையும் சேர்ந்துக் கொள்கிறது. இதுப் போல பலப் படங்களை பார்த்த நமக்கு இதில் எந்த புதுமையும் தோன்றவில்லை.
இப்படத்தில் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டிய விஷயம் சுகுமாரின் ஒளிப்பதிவு. தமிழக கேரள எல்லைப் பகுதியில் இருக்கும் குரங்கணியை அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார். இமானின் இசையும் வழக்கமான இரைச்சல் இல்லாமல் சற்று இனிமையாகவே இருக்கிறது. ‘நீயும் நானும்...’ பாடல் மனதில் பதிகிறது.
மைனா கமர்ஷியல் படங்களுக்கு சவாலாக வந்திருக்கும் ஒரு இயல்பான வாழ்க்கையை சித்தரிக்கும் படம். இதுவரை கேமராவின் கண்களுக்கு எட்டாத இடமாக இருக்க வேண்டும் என வெளிநாட்டில் தேடித் தேடிப் பிடித்த லொகேஷன்கள் இல்லை. பிரமாண்ட செட்கள் இல்லை.நட்சத்திர அந்தஸ்தும் இல்லை. கதையையும், திரைக்கதையையும் மட்டுமே நம்பி வந்திருக்கும் படம். ஆனால் இதுப் போன்ற லோ பட்ஜெட் படங்களைக் கூட உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கவனித்து அதன் மதிப்பை உணர்ந்து வாங்கி வழங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஆரோக்கியமான விஷயம். நல்ல சினிமாக்களின் வருகைக்கு ஒரு நல்ல அறிகுறி.
மைனா நமக்கு பலப் படங்களை நினைவூட்டுவதாலும் மறுபடியும் ஒரு கிராமத்து காதல் கதை என்பதாலும் இளைஞர்கள் மத்தியில் எடுபடுமா என்று சந்தேகமாக இருந்தாலும் இயக்குனரின் புதுமையான அணுகுமுறைக்காக ஒருமுறை பார்க்கலாம்.
மணியோசை கணிப்பு - 41/100
மைனா ட்ரைலர்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


