
மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற தலைவலிகளை மறந்து, ஒரு திரைப்படம் சென்று பொழுதைப் போக்க நினைப்பவர்கள் நிச்சயம் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்திருக்கும் ‘பெண் சிங்கம்’ படத்துக்கு செல்லலாம்.
பராசக்தி,மனோகரா போன்ற கலைஞரின் படங்களை ‘மறக்க முடியுமா’? அந்தப் படங்களுக்கு வசனம் எழுதும் போது கலைஞருக்கு இருந்த தமிழ் ஆளுமையும், வேகமும் இன்னும் குறையவில்லை.
சொல்லப் போனால், வசனங்களின் இளமை இன்னும் கூடியிருக்கிறது.
வனத் துறை அதிகாரி உதய்கிரண். அவரது தாய் ரோகிணி ஒரு நீதிபதி. உதய்கிரணுடன் வேலை பார்க்கும் ஏழை பெண்ணான மீரா ஜாஸ்மின் ஐபிஸ் படிக்க ஆசை படுகிறார். அதற்கு உதய்கிரண் உதவுகிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது.
உதய்கிரண் வேலை செய்யும் ஊரில் மரங்களை சட்ட விரோதமாக வெட்டி கடத்தி வரும் தொழிலை செய்து வருகிறார் ராதாரவி.அதை, நியாயமான அதிகாரியான உதய்கிரண் கண்டிக்கிறார். இருவருக்குள்ளும் மோதல் ஏற்படுகிறது.
இது ஒரு புறமிருக்க, உதய்கிரணின் நண்பர் ரிச்சர்ட் பெண் விடுதலை பற்றி மேடைகளில் பேசி வருகிறார். அவர் பேச்சைக் கேட்டே (பேச்சைக் கேட்டே நம் மக்கள் ஏமாந்ததை போல!) அவரைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் சுதர்சனா சென். திருமணத்துக்கு பிறகே, ரிச்சர்டின் உண்மையான முகம் தெரிகிறது. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நினைக்கிறார், இருவருக்கும் பொது நண்பரான உதய்கிரண். சுதர்சனா சென் திடீரென சுட்டுக் கொல்லப் பட கொலை பழி உதய்கிரண் மீது விழுகிறது. உதய்கிரண் கைது செய்யப் படுகிறார்.
இதற்கிடையே மீரா ஜாஸ்மின் ஐபிஎஸ் அதிகாரி ஆகி விடுகிறார்.உதய்கிரண் வழக்கை விசாரிக்க மீராஜாஸ்மின் நியமிக்கப் படுகிறார்.உதய்கிரண் தாய் ரோகிணியும் தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு, மகனுக்காக வழக்கறிஞராகி வாதாடுகிறார்.
இந்தப் பெண் சிங்கங்களால், நிரபராதியான உதய்கிரணைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே கதை.
உதய்கிரண், துடிப்பான வன அதிகாரி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். தெலுங்கு நடிகரான இவர், தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் பொய் என்ற படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார். பாலசந்தரின் பார்வை பட்டவர்கள் சோடை போக மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார் உதய்கிரண்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கதாநாயகிக்கும் சொல்லிக் கொள்ளும் அளவு கதாபாத்திரம் ‘பெண் சிங்கம்’ படத்தில். மீரா ஜாஸ்மின் தேர்ச்சி பெற்றுள்ளார்.
எதிர்மறையான கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் மிளிர்கிறார்.
ஜே.கே.ரித்தீஷும், ரம்பாவும் கெளரவ வேடத்தில் வருகிறார்கள். வழக்கறிஞராக ரித்தீஷ் தோன்றும் காட்சிகள் சிறப்பு.
ராதாரவி, வாகை சந்திரசேகர், ரித்தீஷ் போன்ற திமுக அனுதாபிகளுக்கே பெரும்பான்மையான வாய்ப்பு அளிக்கப் பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.
தேவாவின் இசையில் பாடல்கள் உண்மையாகவே தேனிசை. கலைஞர் எழுத்தில் உருவான,”வீணையில் எழுவது வேணு கானமோ” பாடல் இனிமை.
இனிய தமிழில் வசனங்களைக் கேட்டு வெகு நாட்கள் ஆகின்றன. நகைச்சுவை உணர்வோடும், குறும்போடும் வசனங்களில் ராஜாங்கம் செலுத்தியுள்ளார் கலைஞர். ஆனால், தமிழில் வசனம் இருப்பது என்னவோ சரிதான். ஆனால், பல இடங்களில் விடாப்பிடியாக தமிழிலேயே பேசுவது செயற்கையாக உள்ளது.
கலைஞரின் கதை,வசனம் சிறப்பாக இருந்தும், திரைக்கதையிலும்,காட்சி அமைப்பிலும் இயக்குனர் பால ஸ்ரீரங்கம் அதிக கவனம் செலுத்தாதது துரதிருஷ்டமே.
இந்தப் படம் 30 ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தால் இன்னும் வெகுவாக ரசித்திருக்கலாம்.
பெண் சிங்கம் - வசனங்களுக்காக ஒரு முறை பார்க்கலாம்.
மணியோசை கணிப்பு - 40/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|






Thank you for this unbiased review