கதை எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை; ஹீரோயிசம் இருந்தால் போதும் என்ற மூடநம்பிக்கையுடன் எடுக்கப் பட்டிருக்கும் படம் 'ரெளத்திரம்'. பழைய மசாலா படங்களை, அவற்றின் கொஞ்சம்நஞ்ச நல்ல விஷயங்களையும் கழித்துகட்டிவிட்டு புதிய திரைப்படமாக எடுத்துள்ளனர்.
படம் 20 வருடத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் ஆரம்பிக்கிறது. வயதான பிரகாஷ்ராஜ் பலரை விளாசி தள்ளுகிறார். அதை அவரது பேரன் பயத்துடன் பார்க்கிறான். சண்டையை முடித்து விட்டு, தீமைகளை தைரியமாக தட்டிக் கேட்க வேண்டும் என பேரனுக்கு உபதேசம் செய்கிறார்.
தாத்தாவின் பேச்சை தட்டாமல் வளரும் சிறுவன்தான் ஜீவா. சாலையில் எங்கு தீமைகளை பார்த்தாலும் பொங்கி எழுகிறார். தமிழ் சினிமாவின் நியதிப் படி, சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரேயாவுக்கு, அடிதடி ஆசாமி ஜீவா மீது காதல் மலர்கிறது.
அடிதடி வம்பை விலைக்கு வாங்கும் ஜீவாவால், அவரது குடும்பத்தினருக்கு நிம்மதி போகிறது. குடும்பத்தில் பிரச்சினைகள் எழ வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஜீவா. இதற்கிடையே ஜீவாவும், காவல் ஆணையரின் மகள் ஸ்ரேயாவும் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.
ஜீவாவால் பாதிக்கப் பட்ட வில்லன் கோஷ்டியினர் அவரை போட்டுத்தள்ள துடிக்கின்றனர். வில்லன் கோஷ்டியினரின் எண்ணம் பலித்ததா, தீயவர்களை ஜீவா எப்படி எதிர்கொள்கிறார் என்பதே ரெளத்திரம் படத்தின் உச்சக்கட்டம்.
நல்லவராக இருந்தாலும் தீமைகளை கண்டு பொங்கி எழுந்து வன்முறையில் ஈடுபடும் இளைஞன் கதாபாத்திரத்திற்கு ஜீவா கன கச்சிதமாக பொருந்தியுள்ளார். ஸ்ரேயாவுடனான காதல் காட்சிகளிலும் மென்மையாக நடித்து நம்மைக் கவர்ந்துள்ளார் ஜீவா. தன்னால் பாதிக்கப் படும் தன் தங்கையைப் பார்த்து கண் கலங்கும் சென்டிமென்ட் காட்சியிலும் ஜீவா நடிப்பு அடடே போட வைக்கிறது.
ஸ்ரேயா, 'ஆறுதல் பரிசு' போல் வந்து விட்டு போகிறார். சட்டக்கல்லூரி மாணவி என்கிறார்கள். ஒரே ஒரு காட்சி தவிர அவர் கல்லூரி பக்கம் போனதாக தெரியவில்லை. படம் முழுக்க பதுமை போல் அலுங்காமல் குலுங்காமல் வரும் ஸ்ரேயா உச்சக்கட்ட காட்சியில் ரத்தம் சிந்தி நடித்துள்ளார்!!
மிகவும் லோ பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய கட்டாயம் போலிருக்கிறது. பிக்பாக்கெட் அடிப்பவர்களைப் போல் இருப்பவர்களையெல்லாம் பெரிய்ய்ய்ய தாதாக்கள் போல் காட்டியுள்ளனர். படத்தின் கடைசி ரீல் வரை வெரைட்டி வெரைட்டியாக வில்லன்கள் வரிசைக் கட்டி வருகின்றனர். பல காட்சிகள் இவர்கள் வில்லன்களா அல்லது காமெடியன்களா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது!
ரெளத்திரம் படத்தின் மிகப் பெரிய பலம் அறிமுக ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு. திருவல்லிக்கேணியின் சந்துபொந்துகளாகட்டும், ராயபுரத்தின் திகிலூட்டும் காட்சிகளாகட்டும், பாடல் காட்சிகள் ஆகட்டும் ஒவ்வொரு ஃபேரமிலும் அவரது அசாத்திய உழைப்பு தெரிகிறது. ஆனால் மோசமாக திரைக்கதை மூலம் அவரது உழைப்பு விழலுக்கு இரைத்த நீர் ஆகிவிட்டது.
முதல் பாதி சென்டிமென்ட், காதல், ஆட்ஷன் என ஓரளவு சரியான கலவையில் உள்ளது. இரண்டாம் பாதி சுத்தியலை வைத்து நடு மண்டையில் பொளேர் என குட்டுவது போல் படு மொக்கையாக இருக்கிறது. அதிலும் குண்டு வில்லன் பாடுவது போன்ற ஒரு குத்துப் பாட்டு வருகிறது.. அய்யோ, எழுத வார்த்தைகளே கிடைக்கவில்லை!!
மற்ற பாடல்களும் ரொம்ப ரொம்ப சுமார்தான்.
இயக்குனர் கோகுலுக்கு ஒரு அன்பு அறிவுரை. தமிழ் திரைப்பட ரசிகர்களின் தரம் மிக மிக உயர்ந்து விட்டது. பழைய ஃபார்முலாவில் எடுத்தால்தான் படம் ஓடும் என நினைக்க வேண்டாம். நல்ல கதை இருந்தால், ஜிகினா வேலைகள் இல்லாமல் இருந்தாலும் படம் வெற்றி பெறும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
ரெளத்திரம் - உபத்திரவம்
மணியோசை கணிப்பு: 42 / 100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



