’வாடா...’, ‘கமான்...’ என தலையை விரித்துக் கொண்டு ஹை பிட்ச்சில் வில்லன் கர்ஜனை செய்துக் கொண்டுவரும் படங்களே பெரும்பாலும் வந்துக்கொண்டிருக்கும் போது விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் ஒரு ஆறுதல்தான்.
பஞ்ச் டயலாக்குகள் இல்லை, ஹீரோயிஸம் காட்டுவதற்காக லாஜிக் இல்லாத காட்சிகள் இல்லை, ஹீரோ பில்டப்புகள், 'intro' பாடல் இல்லை, கவர்ச்சி இல்லை, குத்துப்பாடல் இல்லை, அட.... சிம்புவின் வழக்கமான விரல் வித்தைக் கூட இல்லை. இவ்வளவு ’இல்லை’கள் இருந்தால் படம் பார்க்க ஆவல் வராதா என்ன?
கவுதம் வாசுதேவ மேனன் யதார்த்தமான ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார். மிடில் கிளாஸ் ஹீரோ, ஹீரோயின். மாடி வீட்டுப் பெண்ணை உருகி உருகிக் காதலிக்கும் கீழ்வீட்டுப் பையன் என நம் பக்கத்துவீட்டுக் கதைப் போல சிம்பிளாக இருக்கிறது. சிம்பு, திரிஷாவும் நம் பக்கத்துவீட்டு இளைஞர்களையே ஞாபகப்படுத்துகிறார்கள். காதல் கதை என்பதால் யாரும் சொல்லாததை சொல்ல வேண்டும் என்று ஏதோ சொல்லவில்லை. இன்று அன்றாடம் பல காதலர்கள் சந்திக்கும் சங்கடங்கள், பிரச்சினைகள், வலிகள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அதுவும் கிளைமாக்ஸ் காட்சி நீண்டுக் கொண்டேப்போகிறது. படம் முடிந்துவிட்டது என நினைத்து எல்லோரும் எழுந்தால் சாவகாசமாகப் பாடல் ஆரம்பிக்கிறது.
புது பரிமாணத்தில் சிம்பு. யங் சூப்பர் ஸ்டார் பெயருடன் வெளிவரும் முதல் படம் ஹீரோயிஸம் இல்லாது கதைக்கும், நடிப்புக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் முதல் படமும் கூட. அவரது ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்திருக்கலாம். ஆனால் படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே குடும்பத்தோடு அனைவரும் படம் பார்க்க வருவது சிம்புவிற்கு நிச்சயம் திருப்புமுனையே.
அடுத்து திரிஷாப் பற்றி எதுவும் சொல்லாமல் சினிமா விமர்சனம் எழுதினால் சினிமா ரசிகர்கள் என்னை மன்னிக்கவே மாட்டார்கள். ஒரு படம் முழுக்க அதன் கதாநாயகி கவர்ச்சிக் காட்டாமல் (கதைக்குத் தேவைப்பட்டது என்ற பெயரில் கவர்ச்சியை கட்டவிழ்த்து விடுவது இன்றைய ஸ்டைல்) தழைய தழைய சேலைக் கட்டி வருவது இதம். பாலிவுட் தாக்கமோ என்னவோ ஏகத்துக்கும் மெலிந்திருக்குப் பொண்ணு.
ஆஸ்கார் வென்றப் பின் ஏ.ஆர்.ரகுமான் தமிழில் இசையமைக்கும் முதல் படம். ஒருசில பாடல்கள் மெலடியாகவே இருந்தாலும் பாடல்கள் தமிழா, ஆங்கிலமா என்று குழப்பமாகவே உள்ளது. இனி ஏ.ஆர்.ரகுமானால் சராசரி தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இசையமைக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. படத்தில் உண்மையாகவே தாலாட்ட வைப்பது மனோஜ் பரம்ஹம்சனின் ஒளிப்பதிவுதான். அப்பப்பா ஆலப்புழாவும், கோவாவும், சென்னைத் தெருக்களும் கூட பரம அழகு.
படத்தின் நீளத்தைக் குறைத்திருந்து கிளைமாக்ஸ் வசனங்களை இன்னும் சற்றுத் தெளிவாகப் புரியும்படி (காதில் விழும்படி) செய்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். ஏ.ஆர்.ரகுமான் சற்று ’விண்ணை’தாண்டி வந்திருந்தால் இப்படம் இன்னும் மனதில் இடம் பெற்றிருக்கும்.
மணியோசை கணிப்பு 40/100.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



I like trisha