என் கையில் கோடிக்கணக்கில் பணமிருக்கிறது. அதை வைத்து எனக்கு 10 கோடியில் பிரமாண்டமாய் ஒரு வீடுக் கட்டி அதை 100 கோடிக்கு விற்றுவிட ஆசை. ஒரு கொத்தனாரை அழைத்து மளமளவென்று விசாலமான அறைகள் கட்டி தேக்கில் ஜன்னல், கதவுகள் பொருத்தி, தரையில் பளபளக்கும் கிரானைட் கற்கள் பதித்து, சுவர்களுக்கும் நான் விரும்பிய நிறத்தில் டிஸ்டெம்பர் பூசி... வீடு முழுக்க அலங்கார விளக்குகள், குஷன் சோபாக்கள்.... வெளியேத் தோட்டம்... அடடா வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். வீடு இருக்கும் ஏரியாவும் நகரத்தின் மத்தியில் இருக்கிறது. 100 கோடி என்ன, அதற்கு மேலேயே விலைப் போகும்....
ஆனால் நடந்தது என்ன?....போட்ட காசைக் கூடத் திரும்பப் பெற முடியவில்லை. ஏன்...? என்னத்தான் பிரமாண்டமாய், அழகாய் வீடு கட்டியிருந்தாலும் அவசரத்தில் அஸ்திவாரம் போட மறந்துவிட்டேன். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ, அதுப்போலத்தான் ஒருத் திரைப்படத்திற்கு கதை என்பதும். நல்ல கதை இல்லாமல் என்னத்தான் ஸ்டார் வால்யூ, சூப்பர் ஹிட் பாடல்கள் என்றிருந்தாலும் அஸ்திவாரம் இல்லாமல் எழுப்பப்பட்ட சீட்டுக்கட்டு மாளிகைப் போல படம் சாய்ந்துவிடும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இன்று சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. அதனால் ஓடும் குதிரை மீதுதான் பணத்தை கட்டவேண்டும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான இயக்குனர்கள் முதலில் ஹீரோவின் கால்ஷீட்டை வாங்கி வைத்துக் கொண்டுவிட்டு பிறகு அவர்களுக்காக கதை செய்கின்றனர். கதையிலிருந்து திரைக்கதையை உருவாக்கலாம். ஆனால் கதைக்கருவையே உருவாக்கக்கூடாது. கதைக்கரு என்பது ஒருவரி மட்டுமே. இந்த ஒருவரி வலுவாக இருந்து அதன்மேல் எழுப்பப்படும் திரைக்கதையும் சுவையாக இருந்துவிட்டால் படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும்.
தங்களைப் பெற்று, அன்புக்காட்டி வளர்த்த பெற்றோருக்காக தங்கள் காதலையே காதலர்கள் துறக்க, அதில் நெகிழ்ந்து பெற்றோர்களே அவர்கள் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். இந்த ஒருவரி காதலுக்கு மரியாதை மட்டும் செய்யவில்லை. படத்திற்கு மாபெரும் வெற்றியையும் ஈட்டித் தந்தது.
’என் காதலி உனக்கு மனைவியாகலாம்; உன் மனைவி என் காதலி ஆகமுடியாது...’ என்ற வித்தியாசமான இந்த ஒருவரிதான் ‘அந்த 7 நாட்கள்’ திரைப்பட வெற்றிக்கு முகவரி.
இதுப் போன்ற ஒருவரி கதைக்கருவை பின்னர் விரிவுப்படுத்தி கதையாக்கலாம்.
எந்த மொழியானாலும், திரைப்பட வரலாற்றை கவனித்துப் பார்த்தால் வெற்றிப் பெற்றத் திரைப்படம் என்றால் நல்ல கதை இல்லாமல் இருக்காது. இன்று தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகின் பல நாடுகளும் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரஜினிக்காந்த் வெறும் பஞ்ச் டயலாக்குகளாலும், விரல் வித்தையாலும் மட்டுமே அந்த உயரத்தை அடைந்து விடவில்லை. சொல்லி வைத்தாற்போல அவரது ஒவ்வொரு திரைப்படங்களும் வெற்றிப் பெற்றதற்கு காரணம், மசாலாப் படமாக இருந்தால் கூட அடிப்படையாக ஒரு கதை இருந்ததுதான்.
தனது ஒரே உறவாக, உயிராக நினைக்கும் தங்கை தனது எதிரியை காதலிக்கும்போது பரிதவிக்கும் அண்ணன்..., ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும், ‘பாசமிகு’ தம்பிகளின் அண்ணன்..., தான் செய்யும் சில்லறைத் திருட்டுகளை தன்னைப் போன்ற உருவ ஒற்றுமையுடன் இருப்பவன் மேல் போட்டு தப்பித்துவிட்டு, கடைசியில் அவன் செய்யும் கொலையின் பழி தன்மேல் விழ மாட்டிக்கொண்டு விழிப்பவன்..., முதல் மனைவி இறந்துவிட்டதாக நம்பி இரண்டாவது திருமணம் செய்துவிட்டு இரண்டு மனைவியருடன் முழிப்பிதுங்கி நிற்கும் கணவன்... என எத்தனை விதமான கதாப்பாத்திரங்கள், கதைக் கருக்கள்...
இதுப் போன்ற பலமான அஸ்திவாரத்தின் மீது உறுதியான தூண்களாக திரைக்கதை அமைத்து, பிறகு அதில் சூப்பர் ஹிட் பாடல்கள், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள், விரல் வித்தைகள் போன்ற அலங்கார சமாச்சாரங்களை சேர்த்து எடுத்த படங்கள் அனைத்தும் வெற்றிப் பெற்றன. குடுமிப்பிடி சண்டையெல்லாம் போடாமலேயே சூப்பர் ஸ்டார் பட்டம் தானாகவே தேடி வந்து காலில் விழுந்தது.
கதை என்பது வரலாறாக இருக்கலாம். அல்லது சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கலாம், அல்லது குடும்பக் கதை, திரில்லர், காமெடி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சுவையாக இருக்க வேண்டும்.
கதை என்றால் எங்கேப் போவது? எல்லாரும் ஏற்கெனவே எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டார்களே என நினைப்பவர்களுக்காக ஆங்கில எழுத்தாளர் ஒருவர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். கதை என்பது நூலக அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களைப் போல. நிரம்பி வழியும் அந்த அலமாரியில் புது புத்தகத்தை சேர்க்க வேண்டுமென்றால், சற்று சாய்ந்துக் கிடக்கும் பழைய புத்தகங்களை நிமிர்த்தி அட்ஜஸ்ட் செய்து வைத்து புதியதை புகுத்துவதைப் போலத்தான் புதியக் கதையை கற்பனை செய்வதும்...
அவ்வகையில் உருவான கதைகள் என்னென்ன?
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



