இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என செய்தி அடிப்படுகிறது. பலருக்கு யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள் என ஒரு சந்தேகம் உண்டு, மக்கள் நலப் பணியாளர்கள் அரசின் திட்டங்களை கிராம மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள்.
இவர்கள் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் பணிபுரிபவர்கள். கிராம மக்களிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, போலியோ சொட்டு மருந்தின் தேவையை புரிய வைப்பது, சிறுசேமிப்பு பற்றி எடுத்துக் கூறுவது, கால்நடைக் கணக்கெடுப்பு.மனநலம் குன்றியோர், மாற்று திறனாளிகளுக்கு உதவுதல், அரசு நலதிட்டங்கள் குறிப்பாக விவசாய நல திட்டங்களை அமல்படுத்துதல், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடனை வசூலித்தல் போன்ற பணிகளை செய்வதே மக்கள் நலப் பணியாளர்கள் வேலை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடைப்பெறும் பணிகளை கண்காணிக்கும் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு. இருப்பினும் இவர்கள் முழுநேர அரசு ஊழியர்கள் அல்ல.
1990ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது இந்த பணிகளை செய்வதற்காக 25000 பணீயாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ. 200 ஊதியமாக வழங்கப்பட்டது. பின்னர் 1991ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை பணிநீக்கம் செய்தார். பல போராட்டங்கள் நடைப்பெற்றது. இதைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் ஊதிய உயர்வோடு பணியமர்த்தப்பட்டனர், 2001ல் அதிமுக ஆட்சியில் மீண்டும் நீக்கப்பட்டனர். இவ்வாறு திமுக ஆட்சிக்கு வரும்போது அவர்கள் நியமிக்கப்படுவதும் அதிமுக ஆட்சிக்காலத்தில் நீக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
தற்போது 3வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றதும் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி 13500 மக்கள் நல பணியாளர்களை வேலை நீக்கம் செய்தார், இதை எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் வழக்குத் தொடர்ந்தது. வழக்கு விசாரணையின் போது மக்கள் நலப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்படவில்லை என்றும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த பணி நியமனம் நடைபெறவில்லை என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
மக்கள் நலப் பணியாளர்கள் என்பது கிராமப்புற அடித்தட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரவேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்ட பணியிடம்தான். 1959ம் ஆண்டு வேலைவாய்ப்பு சட்டப்படி இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரைத் தேவையில்லை. அடித்தட்டு மக்கள் தவிர வேறு யாரேனும் பணியமர்த்த பட்டிருக்கிறார்களா என கவனிக்க வேண்டுமே தவிர இவர்களுக்கு இட ஒதுக்கீடு முறையும் தேவையில்லை என நீதிபதி சுகுணா தீர்ப்பளித்தார்.
வேலைவாய்ப்பு அலுவலகம், இட ஒதுக்கீடு என ஒரு சில காரணங்களை தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறினாலும் இன்னும் வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர். அதாவது மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் அந்த வேலையை மட்டும் நம்பி இருப்பவர்கள் அல்ல. அவர்கள் மேல் வரும்படிக்காக மட்டுமே இந்த வேலையை செய்கின்றனர். மேலும் மக்கள் நல பணியாளர்களுக்கே தங்களது பணி இன்னது என்று சரிவர தெரியாது. அதனால் அவர்கள் யாரும் அவர்களது வேலையை ஒழுங்காக செய்வதில்லை. இதற்கிடையே, தற்போது மக்கள் நலப் பணியாளர்கள் செய்து வரும் பணிகளைக் கவனிக்க ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகள் அளவிலேயே போதுமான அலுவலர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவையெல்லாம் தவிர திமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட இவர்கள் தமிழக அரசின் திட்டங்களை கிராம மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு பதிலாக திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதிலேயே முனைப்பாக இருப்பதாகவும் அதனால்தான் அதிமுக இவர்களை பணிநீக்கம் செய்வதில் அதிக அக்கறை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை கடந்த ஜன.23 நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்கள்நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டது செல்லாது எனவும், அவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





