அண்மையில் சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் வணிக வளாகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு சட்டையின் விலையே இரண்டாயிரத்து சொச்சத்திற்கு விற்று கொண்டிருந்தார்கள், உயர்ந்த ரக செண்டுகள், லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதன பொருட்கள் அமோகமாய் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன.. எத்தனையாவது மாடியில் இருக்கிறோம் , எப்படி உள்ளே வந்தோம் ,எப்படி வெளியே போவது என்று புரியாத அளவிற்கு பிரம்மாண்டமாயிருந்தது அந்த விற்பனை மையம் , நாடு எந்த அளவிற்கு முன்னேறிவிட்டது என்று பெருமையாகக் கூட இருந்தது, அப்பொழுது தான் ஒரு பிரச்சனை ஏற்பட்டது!
அந்த அவஸ்தை எனக்கு அப்படியொன்றும் அடிக்கடி ஏற்படாது, எதற்கு சுற்றி வளைப்பானேன்: எனக்கு திடீரென்று வயிறு புரட்டியது!. பில்லிங் கவுண்டரில் சற்று பெரிய க்யூ வேறு பொறுமையை சோதித்தது, சற்று வியர்க்கத் தொடங்கியவுடன் வேறு வழியின்றி விடுதலைத் தேட நினைத்தேன் . அத்தனைப் பெரிய நாகரிகக் கூடத்தில் கழிவறை எங்கே உள்ளது என்று வழிகாட்ட ஒரு பலகைக் கூடத் தென்படவில்லை/. ஏனோ தெரியவில்லை இன்னொருவரிடம் விசாரிக்கக் கூட கூச்சமாயிருந்தது. ஒரு வழியாக பொறுத்துக் கொண்டு விற்பனைக் கூடத்திலிருந்து வெளியே வந்தேன் என்பது வேறு விஷயம்!
அப்படி என்னதான் நம் கட்டிடக்கலை பொறியாளர்களுக்கும், மற்ற பொறுப்பாளார்களுக்கும், கழிவறையை யார் கண்ணிலும் படாமல் மறைத்து வைக்கும் கொடூர மனோ பாவமோ!
சற்றே நினைத்து பாருங்கள், பேருந்து நிலையத்திலோ, ரயில்வே ஸ்டேஷனிலோ, தி.நகர் உஸ்மான்ரோடு, பாண்டி பஜார் போன்ற இடங்களிலோ நான் மேற்கூறிய சங்கடம் ஏற்பட்டால் என்ன செய்வது. எதிர் பாராமல் அவசரம் ஏற்படுவது அவமானப் பட வேண்டிய விஷயமா!
ஒரு பிரபல ஓட்டலில் சாப்பிட அமர்வதற்கு முன் சிறுநீர் கழித்து வரலாம் என்று தேடினால் ஓட்டலின் காய்கறிகள் நறுக்கும் அறை ,கிரைண்டர் அறையெல்லாவற்றையும் கடந்து சென்றால் ஒரு தகர கதவு அடைந்தே கிடக்கிறது.; உள்ளே போனவர் போனவர்தான், வெளியே வருவதாகவே தெரியவில்லை! இன்னேரு ஏரியாவில் என் நண்பர் அவஸ்தைபட்டு அலைந்த போது சொர்க்கவாசல் போல் தென்பட்டது ஒரு மாநகராட்சிக் கழிப்பிடம்! ஆனால் பாருங்கள் தூரதிருஷ்டம் ! அங்கு ஒரு பெரிய பூட்டு தொங்கியது; ரிசர்வ் பேங்கு கஜானா போல்!
நன்கு பராமரிக்கப் படாத பொது கழிப்பிடங்களும், நோயை பரப்பும் கழிவறைகளும், நம் நாட்டின் தேசிய அவமானச்சின்னங்கள் அல்லவா!
- பிரபல எழுத்தாளர்
Want to write for Maniyosai?
Download our android app

