நதிக்கரை நாகரிகம் என்று நாம் கேள்விப் பட்டதுண்டு. இப்பொழுதெல்லாம் நடுக்கூட நாகரீகம் என்று ஒன்று பரவி வருகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுப்பது தொலைக்காட்சி. பெயர்தான் தொலைக்காட்சியே தவிர, சொல்லப் போனால், ஐந்தடி தூரத்தில் அமர்ந்து ரசிக்கும் சாதனம் தொலைக்காட்சி பெட்டி. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களைக் கட்டிப் போடுவது, மயங்க வைப்பது, கிறங்க வைப்பது அவர்கள் நடுக்கூடத்தில் அமர்ந்து பார்த்து ரசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான்.
ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாய் செலவழித்தால் கூட எந்தக் குடும்பமும் எளிதில் வாங்கி விட முடியும் ஒரு தொலைக்காட்சி பெட்டியை. மக்கள் கவலைகளை மறக்க அரசாங்கமே தொலைக்காட்சி பெட்டிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
திரைப்படங்களுக்கு தணிக்கை விதிகள் ஏராளமாக உள்ளன. ஆடு, மாடுகள் போன்ற விலங்குகளை வைத்து படமெடுக்கப்படும் போது கூட, பிராணிகள் துன்புறுத்தப் படவில்லையா என்பதை உறுதி செய்துக் கொண்ட பிறகே தணிக்கை சான்றிதழ் வழங்கப் படுகிறது. இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் எடுக்கப் பட்ட போது, குதிரைகளை பயன்படுத்தி பல காட்சிகள் அமைக்கப் பட்டிருந்ததால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் இன்னல்கள் சந்திக்க வேண்டி வந்தது. ஒரு கதைக்கு மிக அவசியமானக் காட்சி என்று இயக்குனர் கருதும் காட்சிகளைக் கூட ஏதாவது நொண்டி சாக்கை சொல்லி வெட்டும் அளவு திரைப்பட தணிக்கை விதிகள் கடுமையானவை.
ஆனால், இந்த கடுமையான தணிக்கை விதிகள் யாவும் திரைப்படங்களுக்கு மட்டுமே. தொலைக்காட்சிகள் கேட்பார் யாருமின்றி வெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றன. அந்த அநியாயங்களை விலாவாரியாக எழுத முடியாது. இருப்பினும் நடுக்கூடங்களில் ஒளிப்பரப்பப்படும் தொலைக்காட்சிகளில் இடம்பெறும் நாகரீக சீர்கேட்டை ‘புல்லட்’ குறிப்புகளாக எழுதுகிறோம். அவைகள் எந்த சேனல்களில் வருகின்றன என குறிப்பிட விரும்பவில்லை. மக்களுக்கே நன்றாகத் தெரியும்.
- பருவம் கூட அடையாத எட்டு வயது சிறுமியும், பத்து வயது சிறுவனும் அரைகுறை ஆடைகளில், போட்டி நிகழ்ச்சிகளுக்காக ஆபாச நடனம் ஆடுவது. அந்தக் குழந்தைகளின் பெற்றோரும், தங்கள் பிள்ளைகள் ஏதோ மகத்தான சாதனையை படைத்தது போல பூரிப்புடன், பார்வையாளர்களாக உட்கார்ந்திருப்பது. ’ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி செட் ஆகலை’என ஜட்ஜ் (!) கமெண்ட் அடித்தால், குழந்தைகளின் பெற்றோர் துக்கம் தாங்காமல் கண்ணீர் சிந்துவது.
- இல்லத்தரசிகளும், கல்லூரி மாணவர்களும் வீட்டில் நடுக்கூடத்தில் ஹாயாக அமர்ந்து மது அருந்துவது. (மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்ற ஒற்றை வரி எச்சரிக்கை செய்தி எழுதி விட்டால் பாவ விமோசனம் உண்டு!)
- சாதாரண மாமியார், மருமகள் சண்டைகளுக்குக் கூட, கதாபாத்திரங்கள் ஒரு சர்வதேச தாதா தோரணையில் திட்டம் தீட்டி, தீர்த்துக் கட்டச் சொல்வது.
- காவல் துறை அதிகாரிகளை கைக்கூலிகளாகவோ, விபச்சார புரோக்கர்களாகவோ சித்தரிப்பது.
- பத்தாயிரம், இருபதாயிரம் சம்பளம் வாங்கும் சாதாரண வங்கி ஊழியர் கூட ஜடா முடி தாங்கிய அடியாட்களுடன் நகரில் வலம் வருவது.
- கதையில் வரும் கதாபாத்திரங்கள், பெரிய வீடு, சின்ன வீடு, மனைவி, துணைவி என்றெல்லாம் வைத்துக் கொள்வது. அதையும் குடும்ப உறுப்பினர்கள் சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்வது.
- புலன்விசாரணை செய்வது போல் பாசாங்கு செய்து போலி சாமியார்களின் நீலப் படங்களை செய்திகளில் ஒளிப்பரப்புவது.
எதிர்கால இந்தியா, குறிப்பாக தமிழகம் எப்படித்தான் இருக்கப் போகிறதோ? சமுதாய பொறுப்பற்ற தொலைக்காட்சி வியாபாரிகளுக்கே வெளிச்சம்!!
Want to write for Maniyosai?
Download our android app




விளம்பரப் படங்களில் வரும் அசிங்கங்களை சொல்ல மறந்துவிட்டீர்களே!. பெரும்பாலான விளம்பரங்கள் சுவையாக இருந்தாலும் ஒருசில விளம்பரங்கள் முகஞ்சுளிக்க வைக்கிறது. டிவிக்கும் நிச்சயம் தணிக்கைத் தேவை.