சிறுவர்களிடையே ஒரு தொலைநோக்கு பார்வை உருவாக்கப் பட வேண்டியது அவசியம். குறுகிய கண்ணோட்டமும், ஆழமற்ற சிந்தனைகளும், சுருக்கு வழிகளும் இன்று பல குழந்தைகளிடையே நிலவி வருகிறது.
மூன்றாம் பிறையை பார்த்திருக்கிறாயா தம்பி என்று கேட்டால் இன்றைய குழந்தைகளிடம் என்ன பதில் வரும்?
“நான் பழைய சினிமாக்களைப் பார்ப்பதில்லை அங்கிள்.” என வேகமாக சொல்லி விட்டு பதிலுக்கு காத்திருக்காமல் ஓடி விடுவார்கள்.
திறந்த வெளிகளில், ஏரிக்கரைகளில், கோவில் பிரகாரங்களில், அவ்வளவு ஏன் மொட்டை மாடிகளிலாவது விண்வெளியை உற்று நோக்கியும், ரசித்தும் சிந்தனையை விரித்துக் கொள்ளும் பாக்கியம் இன்று பல சிறுவர்களுக்கு கிடைப்பதில்லை.
மில்கி வே (Milky Way) என்றால் எப்படி இருக்கும், சப்த ரிஷி மண்டலம் எப்படி தெரியும், கண் சிமிட்டும் நட்சத்திரங்கள், கண் சிமிட்டாத கிரகங்கள், உதிரும் விண் கற்கள், இப்படி பல விண்வெளி விநோதங்களை பார்க்கும் வாய்ப்பை இன்று சிறுவர்கள் இழந்து வருகிறார்கள். நகரங்களில் வாழும் சிறுவர்களுக்கு வானத்தை அண்ணாந்து பார்க்கும் வாய்ப்பே கிடைப்பதில்லை.
ஐந்தடி தூரத்தில் தொலைக்காட்சிப் பெட்டி, கண்ணிற்கு அருகாமையில் மொபைல் ஃபோன் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் சிறுவர்கள் பழகி விட்டார்கள். மல்லிகைப் பூ போன்ற இட்லியையும், மிளகாய் பொடி, கொத்து மல்லி சட்னி வகையறாக்களையும், இரவு முழுதும் ஊறிய நீராகாரத்தையும், தயிர் சோற்றையும், மாவடு போன்ற ஊறுகாய் வகைகளையும், குழந்தைகளின் நாவிற்கும், ரசனைக்கும் கொண்டு செல்ல வேண்டியது பெற்றோரின் கடமை.
பிட்ஸாவையும், நூடுல்ஸையும், SMSஐயும், மிஸ்டு காலையும் விட்டு விடச் சொல்லவில்லை.
மழையின் ஊடே வரும் அந்தி வெயில் மாலையும், சில நொடிகள் மட்டுமே தோன்றி மறையும் வண்ணமிகு வானவில்லையும், மண் வாசனையையும் ரசிக்க சிறுவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அப்பொழுதுதான், இன்றைய சிறுவர்கள் நாளை சிறந்த விஞ்ஞானிகளாகவும், எழுத்தாளர்களாகவும், பக்திமான்களாகவும் உருவெடுப்பார்கள்.
Want to write for Maniyosai?
Download our android app
