அண்மையில் எங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல் எங்களை திடுக்கிட வைத்தது. அந்த பகீர் மெயிலின் விவரம் வருமாறு: பெங்களூரை சேர்ந்த ஒரு சிறுவனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப் பட்டுள்ளான். அவனைப் பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி.
அந்த சிறுவனுக்கு HIV + நோய் கிருமி (எய்ட்ஸ் கிருமி) தொற்றியிருப்பது தெரிய வந்தது. உடனே, அந்த சிறுவனின் பெற்றோரை அழைத்து அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு எய்ட்ஸ் இல்லை. அப்படியிருக்க சிறுவனுக்கு எப்படி எய்ட்ஸ் வந்தது? பின்னர், அந்த சிறுவன், கடையில் அண்ணாசி பழம் வாங்கி சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. அந்த அண்ணாசி பழம் விற்றவரை தேடிக் கண்டுபிடித்து பார்த்த போது அவர் கையில் ஒரு வெட்டு இருந்ததாம். அவரை பரிசோதித்த போது, அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் கையில் இருந்த வெட்டுக் காயத்திலிருந்து ரத்தம் வெளியேறி, அந்த ரத்தக் கறை படிந்த பழத்தை சிறுவன் உட்கொண்டதால், அவனுக்கு எய்ட்ஸ் வந்து விட்டதாம். இதுதான் அந்த மெயிலின் சாராம்சம். அந்த சிறுவனைப் பற்றி பிரபல நாளிதழ்களில் எந்த செய்தியும் வரவில்லை. ஒரு வேலை, மெயிலில் யாராவது குறும்பு செய்திருக்கலாம். ஒரு வேளை, இதில் ஒரு சதவீதம் உண்மை இருக்கலாமோ என தோன்ற இது பற்றி விசாரிக்க தொடங்கினோம்.
இந்த விஷயத்தைப் பற்றி மும்பையை சேர்ந்த ஒரு டாக்டர் பெண்மணியிடம் சொன்ன போது, குபீரென சிரித்தார். ‘ஸார். எய்ட்ஸ் பற்றி பத்தாங்கிளாஸ் பயாலஜிலயே தெளிவா வருது. நீங்க ஜர்னலிஸ்ட்டுனு சொல்லிக்கிறீங்க. இதெல்லாம் போய் நம்பறீங்களே?' எனக் கேட்டு விட்டு தொடர்ந்தார், ‘எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இன்னும் நம் சமூகத்தில் முழுமையாக வரவில்லை. எய்ட்ஸ் பற்றி அரசு எவ்வளவு விளம்பரம் செய்தாலும் மக்கள் சில மூடநம்பிக்கைகளை விட மாட்டேன் என்கிறார்கள். எய்ட்ஸ் நோய், முறை தவறிய உறவாலோ, ஒரே ஊசி சிரிஞ்சை பல பேர் உபயோகப் படுத்தினாலோதான் பரவும். பெற்றோர்களுக்கு, முன்பே எய்ட்ஸ் நோய் இருந்தால், பிறக்கும் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் இருக்கும். சலூன்களில் ஒரே ரேசரை மாற்றாமல் பயன் படுத்துவதாலேயோ, எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு முத்தம் கொடுப்பதாலேயோ நிச்சயமாக எய்ட்ஸ் பரவும் வாய்ப்பில்லை. எய்ட்ஸ் கிருமி மிகவும் நோஞ்சான். ஒருவர் உடலில் இருந்து அது வெளியே வந்து விட்டால், அது 60 விநாடிகளுக்கு மேல் தாக்கு பிடிக்க வாய்ப்பே இல்லை. காற்றில் ஈரப்பதம் இருந்தால் இன்னும் கொஞ்சம் விநாடிகள் போனஸாக அது வாழும் வாய்ப்பு உண்டு. மற்றபடி, இந்த அண்ணாசி பழம், எய்ட்ஸ் இந்தக் கதைலாம் புருடா.' என சொல்லி முடித்துக் கொண்டார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|




it is very serius matter.pls consult more than doctors