துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு போட்டு துவைத்து, அலசி, பிழிந்து காயப்போட்டால் நமக்கு திருப்தி ஏற்பட்டுவிடுவதில்லை.சட்டை காலரில் அழுக்குப் போகவில்லையே! உடனே காலர் பிரஷ் எங்கே என தேடுகிறோம். ஏனெனில் பிரஷ் போட்டு தேய்த்தால்தான் சில அழுக்குகளை நீக்க முடியும். யோசித்துப் பாருங்கள். தூசித் தட்ட, பொருட்களை சுத்தப்படுத்த, பாத்திரம் தேய்க்க என எல்லாவற்றிற்கும் பிரஷ் தேவைப்படுகிறது. அவ்வளவு ஏன் பல்தேய்க்கும்போது கூட சுத்தத்திற்கு பிரஷ் தேவைப்படுகிறது. (பழையக் காலத்தில் உபயோகித்த வேப்பங்குச்சி போன்றவை கூட ஒருவகை பிரஷ் தானே!) இப்படிஒவ்வொன்றையும் சுத்தப்படுத்த நாம் பிரஷ்ஷை நாடும் போது நம் வயிற்றை சுத்தப்படுத்த என இருக்கும் பிரஷ்ஷை பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் நம்மில் பலர் சரியாக அறியவில்லை.
நாம் உண்டு களிக்க விதவிதமான உணவு வகைகள் உள்ளன. காலை, மதியம், இரவு மூன்று வேளை உணவுகள் மற்றும் நடுநடுவே தின்ன நொறுக்குத் தீனிகள், தினமும் அறிமுகமாகும் புதுவகை பிஸ்கெட்கள், சாக்லேட்டுகள் என நமது நாவின் ரசனையைத் தூண்டத்தான் எத்தனை வகைகள்! இவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் வயிற்றை அவ்வப்போது சுத்தப்படுத்தி அடுத்த வகை உணவை சுவைக்க தயார்படுத்தி வைக்க வேண்டாமா? அதற்கும் இறைவன் சுவையாகவே ஒரு வழியை நமக்கு வரமாக அளித்துள்ளார். அதுதான் நார்ச்சத்து. அதன் பெயருக்கேற்றாற் போலவே அவை நம் வயிற்றை சுத்தப்படுத்தும் நார்கள்தான்.
நார்ச்சத்து முழுப்பயறு வகைகள், முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் மிகுந்துக் காணப்படுகின்றன. நார்ச்சத்து இரண்டு வகைப்படும். 1.கரையும் தன்மையுடையது. 2. கரையாத் தன்மையுடையது.
1. கரையும் நார்ச்சத்து: இவை ரத்தத்தில் கொழுப்புச்சத்து சேராமல் பார்த்துக் கொள்கிறது. வாய்வு பொருட்களை வெளியேற்றுகிறது. ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசிஉமி, பார்லி, சாத்துக்குடி, ஆரஞ்சு, ஆப்பிள், கோதுமை, வெந்தயம் போன்றவை கரையும் நார்ச்சத்து கொண்ட சில உணவுப் பொருட்கள்.
2. கரையா நார்ச்சத்து: இவை ஜீரணிக்கப்பட்டப் பிறகு உள்ள தேவையற்றப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது. மலச்சிக்கல்தான் பல நோய்களின் தாய் வீடு என்பதால் இதனால் பல நோய்களும் நம் உள்ளே நுழைய வழியில்லாமல் போகிறது, ஆப்பிள்தோல், முட்டைகோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், கேரட் போன்றவை இதற்கு சிறந்த உதாரணம்.
கரையும் தன்மையுடைய நார்ச்சத்து சாப்பிட்டப்பின் ரத்தத்தில் க்ளூக்கோஸ் கலப்பதை தடுக்கிறது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அவசியமாகிறது. குறைந்த அளவில் நிறைய பயன் தரும் நார்ப்பொருள் வெந்தயம். அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை நிறைய வெந்தயம் சேர்க்குமாறு கூறுகின்றனர்.
இது உடலில் கொழுப்புச்சத்து சேராமல் பார்ப்பதோடு ஏற்கெனவே இருக்கும் கொழுப்பையும் குறைக்கிறது, அதனால் இது கொலஸ்டிரால் நோயாளிக்கு பேருதவியாக இருப்பதோடு எடைக் குறைக்கவும் உதவுகிறது,
நார்ப்பொருட்கள் அதிகம் தண்ணீரை உறிஞ்சி குடலில் வைத்துக்கொள்வதால் நாம் உண்ணும் உணவு மிருதுவாகி குடல் சரியாக வேலை செய்ய உதவுகிறது. அதனால் மலச்சிக்கல் தடுக்கப்பட்டு பல நோய்களுக்கும் குறிப்பாக வயிற்றுக் கோளாறுகளுக்கும் தடா விதிக்கிறது.
அதிக நார்ச்சத்து உள்ள உணவுப்பொருட்கள் சிறிதளவு உண்டாலே வயிறு நிறைந்த திருப்தி தருவதால் தேவைக்கு அதிகமாக உண்பதற்கும் ஒரு முற்றுப்புள்ளியாக அமைகிறது.
ஒரு சராசரி மனிதன் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 35 கிராம் வரை நார்ச்சத்து சேர்த்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது,
நார்ச்சத்து அதிகமுள்ள ஒரு சிலப் பொருட்கள் (100 கிராம் அளவிற்கு)
வெந்தயம் - 7.2 கி
கொண்டைக்கடலை - 3.9கி
தினை (millet) - 8கி
கறிவேப்பிலை - 6.4கி
தேங்காயில் 3.6கி அளவிற்கு நார்ச்சத்து இருக்கிறது. ஆனால் அதில் கொழுப்புச்சத்தும் அதிகமிருப்பதால் வாரத்திற்கு ஒருமுறை சேர்த்துக் கொண்டால் போதும். கறிவேப்பிலையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் சாப்பிடும்போது அதை தூக்கியெறியாமல் உண்பது நலம்.
ருசிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உண்டு பல நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்காமல் என்ன உண்கிறோம் எதற்கு உண்கிறோம் என
அறிந்து உண்ண வேண்டும். நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் என்னென்ன சத்து இருக்கிறது என அறிந்து அவற்றை உண்ண பழகிக் கொண்டால் நாம்
நோய்கள் வருமுன் நம்மை காத்துக் கொள்ளமுடியும். நாம் உண்ணும் உணவே மருந்து.
Want to write for Maniyosai?
Download our android app
| Next > |
|---|


