கணவனாக :
என் திருமணமான சமயத்தில் பால்ய விவாகம் குறித்த பிரச்சார துண்டு பிரசுரங்கள் சமூகத்தில் அதிக புழக்கத்தில் இருந்தன. எனக்கு கிடைக்கும் பிரசுரங்களை வரி விடாமல் படிக்கும் ஆர்வம் எனக்கு இருந்தது. இந்த பிரசுரங்களில் ஒரு கணவன் மனைவியிடம் எவ்வாறு துரோகம் செய்யாமல் இருப்பது என்பது பற்றியே அதிகம் குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த கருத்து என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அது மட்டுமில்லாமல் நான் உண்மை விளிம்பியாக வேறு இருப்பதால் மனைவிக்கு துரோகம் செய்வது குறித்து நான் யோசித்து கூட பார்த்ததில்லை.
‘நான் மனைவிக்கு துரோகம் செய்யாமல் இருக்க வேண்டுமானால், மனைவியும் எனக்கு துரோகம் செய்யாமல் இருக்க வேண்டும்' என எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொள்வேன். இந்த எண்ணம் என்னை உடைமை உணர்வு உடைய சராசரி கணவனாக மாற்றி விட்டது. ஆனால், நான் சந்தேக படும் அளவு என் மனைவி நடந்துக் கொண்டதில்லை. அவள் எப்பொழுதும் என் பார்வையிலேயே இருக்க வேண்டும். என் அனுமதி பெறாமல் அவளை எங்கும் செல்ல அனுமதித்ததில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் வரும். தனக்கு தோன்றும் போது சுதந்திரமாக வெளியே போக வேண்டும் என கஸ்தூரிபா நினைத்தாள். நான் அவளை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த அவளுக்கு சுதந்திரமாக வெளியே போக வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. பாவம், ஒரு சின்ன பெண்ணால் எப்படி கோயிலுக்கு செல்லாமலோ, தோழிகளுடன் விளையாட செல்லாமலோ வீட்டுக்குள் அடைந்து கிடக்க முடியும்? அவளை கட்டுப்படுத்த எனக்கு உரிமை இருக்கிறது என்றால், எனக்கு கட்டுப்படுத்த அவளுக்கும் உரிமை உண்டு அல்லவா? இந்த புத்தி எனக்கு இன்று வருகிறது. ஆனால் அன்று ஒரு கணவனாக என் ஆதிக்கத்தை செலுத்தவே நினைத்தேன்.
அதற்காக, எங்கள் திருமண வாழ்க்கை ஏதோ சச்சரவுகள் நிறைந்தது என எண்ண வேண்டாம். நான் அறிந்த, படித்த அனைத்தும் கஸ்தூரிவாவுக்கும் அறிய வைக்க வேண்டும் என நினைத்ததே நான் செலுத்திய ஆதிக்கத்தின் காரணம்.
கஸ்தூரிபா படிக்காதவள். இயற்கையிலேயே அவள் எளிமையானவள், இனிமையானவள். அவளுக்கு பல உலக விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு தீராத ஆசை.
எனக்கு அவள் மீது வாஞ்சை அதிகம். பள்ளியிலிருக்கும் போதும் அவள் நினைவாகவே இருப்பேன். பிரிவை பற்றி நினைத்து கூட பார்க்க முடியாது, அந்த அளவு பிரியம் அதிகம். அர்த்த ராத்திரி வரை பேசி பேசியே அவளை தூங்க விடாமல் செய்வேன். ஆனால், என் கடமையும் செய்ய நான் தவறியதில்லை.
அவளுக்கு உலக விஷயங்கள் அதிகம் சொல்லித் தர வேண்டியிருந்தது, அதுவும் இரவில்! பகல் நேரத்தில், வீட்டில் பெரியவர்கள் முன் அவளுடன் பேசவே எனக்கு கூச்சமாக இருக்கும்! நாளடைவில் நான் பொது வாழ்க்கைக்கு வந்ததால் அவ்வளவாக அவள் கூட என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை. தற்போது கஸ்தூரிபாவுக்கு எளிமையான கடிதங்கள் மட்டுமே எழுத வரும். குஜராத்தியில் பேசினாள் புரிந்துக் கொள்வாள்.
எங்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளில் (13 முதல் 18 வயது வரை) மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தோம். மற்ற நாட்களில் கஸ்தூரிபா அவள் பிறந்த வீட்டில் இருப்பாள். எனக்கு 18 வயது இருக்கும் போது படிக்க இங்கிலாந்து சென்றேன். அது தாங்க முடியாத பெரிய பிரிவு. ஒரு வழியாக இந்தியாவுக்கு திரும்பினால், மீண்டும் தென் ஆப்ரிக்காவுக்கு போக வேண்டிய சூழல்...
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



