நடுநிலைபள்ளியில் படிக்கும் போது இரண்டு நெருங்கிய நண்பர்கள் எனக்கு இருந்தனர். இந்த இரண்டில் ஒருவனின் நட்பு அதிக நாட்கள் நிலைக்கவில்லை. நான் இன்னொருவனிடமும் நட்பாக பழகியது பிடிக்காமல் ஒருவன் கழன்று கொண்டான். இன்னொரு நட்பு அதிக நாட்களுக்கு நீடித்தது.
இந்த நண்பன் என் அண்ணனின் நண்பனும் ஆவான். அவன் குறைகள் தெரிந்திருந்தும் அவனிடம் மரியாதையாக பழகினேன். என் வீட்டில் அனைவரும், அவன் சகவாசத்தை ஒழிக்கும் படி வற்புறுத்தினர். என் மனைவியின் எச்சரிக்கையை தட்டுவதில் எனக்கு ஒரு அற்ப சந்தோஷம். இருந்தாலும், என் தாயின் அபிப்ராயத்துக்கு விரோதமாக நடக்க எனக்கு மனம் இல்லை. அவன் திருத்திக் கொண்டால் மிக சிறந்த இடத்துக்கு உயர்வான் என நான் கூறினேன். என் விளக்கத்தில் திருப்தி அவருக்கு ஏற்படவில்லை. இருப்பினும், எக்கேடோ போ என நினைத்து சம்மதித்தனர்.
நான் தப்பாக கணித்து விட்டதாக பிற்காலத்தில் கருதினேன். ஒத்தக் கருத்துடையவர்களிடையே ஏற்படும் நட்பே நிலைக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன். இருவர் நட்பாக இருந்தால், ஒருவரை ஒருவர் திருத்துவது என்பது முடியாமல் போய் விடுகிறது.
ராஜ்காட்டில், எங்கள் ஆசிரியர்களும், ஊரில் பல முக்கியஸ்தர்களும், ரகசியமாக மாமிசம் உண்பதாகவும், மது அருந்துவதாகவும் அவன் என்னிடத்தில் கூறியுள்ளான். இது எனக்கு ஆச்சரியத்தையும் வேதனையையும் தந்தது.
‘நீ மாமிசம் சாப்பிடாமல் இருப்பதால் நோஞ்சானாக இருக்கிறாய். ஆங்கிலேயர்கள் அசைவம் சாப்பிடுவதாலேயே நம்மை ஆட்சி செய்கிறார்கள். நானும் ஒரு ஓட்டப்பந்தய வீரனாக இருக்க மாமிசமே காரணம். ஆசிரியர்கள் அசைவம் சாப்பிடுவது அவ்வளவு தவறு ஒன்றும் இல்லை. நீயும் ஒரு முறை அசைவம் சாப்பிட்டு பாரேன்.' என்றான்.
இந்த தர்க்கம் ஒரே நாளில் நிகழவில்லை. நீண்ட நாட்களுக்கு இது பற்றி என்னிடம் விவாதித்துள்ளான். என் அண்ணன் ஏற்கனவே அசைவம் சாப்பிட ஆரம்பித்திருந்தான். அதனால், தன் நண்பனுக்கே ஆதரவாக பேசுவான். என் அண்ணன் மற்றும் நண்பன் அருகில் நின்றால், நான் மிக நோஞ்சானாக காட்சி அளிப்பேன். அவர்கள் இருவரும் நல்ல கட்டுமஸ்தான உடலை கொண்டிருந்தனர். என் நண்பன் சோர்வடையாமல் நீண்ட தூரம் ஓடுவான். உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளிலும் அவன் திறமைசாலி. எனக்கும் அவனை போல் இருக்க வேண்டும் என்ற கடுமையான ஆசை ஏற்பட்டது. அவன் போல ஓடவோ குதிக்கவோ என்னால் முடியவே முடியாது. ஏன் நானும் அவன் போல் இருக்க கூடாது?
நான் மிகுந்த பயந்த சுபாவி வேறு. திருடன், பேய், பூதம் என எல்லாவற்றுக்கும் பயப் படுவேன். இரவில் வெளியே போக பயம். இருட்டை பார்த்தால் எனக்கு திகில். நான் தூங்கும் போது அறையில் ஒரு சின்ன விளக்காவது இருக்க வேண்டும். என் அச்சத்தை நான் எப்படி மனைவியிடம் சொல்வது? என்னை விட அவள் தைரியசாலி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். என் நண்பன், தனக்கு பேயை கண்டால் பயமே இல்லை என சொன்னான். ஒரு வேலை, மாமிச உணவு காரணமாக இருக்குமோ? அசைவம் உண்பது நல்லது என நானே நம்ப ஆரம்பித்தேன்.
இதை எப்படியாவது ஒரு நாள் செய்து விட வேண்டும் என துடித்தேன். அதுவும் ரகசியமாக. காந்தி இனத்தவர்கள் வைணவ நம்பிக்கையை பின்பற்றுபவர்கள். அதிலும், என் பெற்றோர் மிகுந்த ஆசாரம் வேறு. குஜராத்தில் ஜெயின மதம் வேறு பிரபலம் என்பதால் அவர்களின் கொள்கையை பலரும் பின்பற்றினர்.
நான் அசைவம் சாப்பிடுவது தெரிந்தால் என் பெற்றோர் அதிர்ச்சி தாங்காமல் இறந்து விடுவார்கள். வாய்மை மீது எனக்கு இருக்கும் பற்று என்னை கவனமாக இருக்க வைத்தது. புத்தி மறுத்தாலும் அசைவம் சாப்பிட மனம் அலை பாய்ந்தது. அசைவம் சாப்பிட்டால் ஆங்கிலேயர்களை சுலபமாக எதிர்கொள்ளலாம், விரட்டலாம் என்பது என் நினைப்பு.
அசைவம் சாப்பிட நான் குறித்து வைத்த அந்த திருநாள் வந்தது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



