நான் மாமிசம் சாப்பிட குறித்து வைத்திருந்த நாள் வந்தது. திருடன் போல் ஆற்றங்கரைக்கு ரகசியமாக நண்பனுடன் சென்றேன். வாழ்க்கையில் அன்றுதான் முதன்முதலில் மாமிசத்தை பார்த்தேன். அந்த ஆட்டு இறைச்சியை என்னால் கடிக்க கூட முடியவில்லை. மிகவும் சிரமமாக இருந்தது. குமட்டிக் கொண்டு வந்ததால், அதை சாப்பிடுவதை பாதியில் நிறுத்தி விட்டேன்.
இந்த சம்பவம் நடந்த பின் சில நாட்களாக ஒழுங்காக தூக்கமே வரவில்லை. வயிற்றுக்குள் உயிருடன் இருக்கும் ஆடு நடமாடுவது போல் ஒரு உணர்வு ஏற்பட பாதி ராத்திரியில் தூக்கம் கலைந்து வந்தேன். என் நண்பன் பிடிவாதக் காரன். போனால் போகட்டும் என்னை விட்டு விடவில்லை. இப்போது, ஆட்டு இறைச்சியிலேயே வெவ்வேறு வித்தியாசமான உணவு பதார்த்தங்களை கொண்டு வர ஆரம்பித்திருந்தான். அதுவும், ஆற்றங்கரையில் அல்ல. பிரம்மாண்டமான பங்களாவில். சாப்பிட சாப்பிட, மாமிசம் மீது இருந்த வெறுப்பு மறைந்து, அதை ரசித்து சாப்பிட ஆரம்பித்திருந்தேன். இந்த மாமிசம் சாப்பிடும் பழக்கம் ஒரு வருடத்திற்கு மேல் தொடர்ந்தது.
அடிக்கடி மாமிசம் சாப்பிட்டு வந்ததால், எனக்கு இரவில் பசியெடுக்காது. வீட்டில் நான் சாப்பிடாததற்கு காரணத்தை என் தாய் கேட்கும் போதெல்லாம், பசியே இல்லை; ஏதோ ஜீரணக் கோளாறு போல் உள்ளது என்று கூறி விடுவேன். நான் கூறுவது பொய்தான். அதுவும் என் தாயிடத்தில் பொய் கூறுகிறேன் என்பதை நான் உணராமல் இல்லை. நான் அசைவம் உண்பது என் பெற்றொர்களுக்கு தெரிந்தால் அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது என்பதால் அவர்களிடம் உண்மையை சொல்லும் தைரியம் எனக்கு வரவில்லை.
‘மாமிசம் உண்பது சரியாகவே இருக்கலாம். நம் நாட்டின் உணவு பழக்கவழக்கங்களில் புரட்சி ஏற்படுத்துவது மிக அவசியமாகவே இருக்கலாம். ஆனால், தாய், தந்தையரிடம் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு அசைவம் சாப்பிடாமல் இருப்பது மேல்.அவர் வாழ்நாள் முடியும் வரை அசைவத்தை தொடக் கூடாது ' என எனக்கு தோன்றியது. இந்த முடிவை நண்பனுக்கும் சொல்லி விட்டேன். அன்று முதல் மாமிசம் பக்கம் திரும்ப கூடவில்லை.
பெற்றோரை ஏமாற்ற கூடாது என மாமிசத்தை விட்டு ஒழித்தேனே தவிர, என் நண்பனின் நட்பை நான் விடவில்லை. ஒரு முறை, அவன் சகவாசத்தால் என் மனைவிக்கு துரோகம் செய்ய இருந்தேன். ஆனால், தப்பித்தேன்.
ஒரு தடவை, என்னை, என் நண்பன் விபச்சார விடுதிக்கு அழைத்து சென்றான். அனைத்து வழிக்காட்டுதலும் செய்து என்னை உள்ளே அனுப்பினான். அதற்கான கட்டணத்தையும் அவனே கட்டியிருந்தான். பாவத்தில் எல்லை வரை சென்றேன். ஆனால், அளவிட முடியாத கருணையால் என்னை கடவுள், பாவம் செய்யாமல் தடுத்தார். அந்த பெண் அருகே, மெத்தையில், எதுவும் பேசாமல் அமர்ந்தேன். சிறிது நேரம் ஓடியது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து என்னை திட்டி அவமானப் படுத்தி வெளியே அனுப்பி விட்டாள். இது போல், நான்கு சம்பவங்கள் என் வாழ்வில் நடந்துள்ளன. இவற்றில், தெய்வாதீனமாக, என் முயற்சி இல்லாமலேயே நான் தப்பித்தேன். ஆன்மிக ரீதியில் பார்த்தால், இந்த சம்பவங்கள் அனைத்திலுமே நான் தவறு இழைத்து விட்டேன். மனதில் ஒரு சிறு சபலம் ஏற்பட்டால் அதுவே தவறுதானே. ஆனால், சாமான்யனின் பார்வையில் பார்த்தால், என் உடலை நான் கட்டுப்படுத்திக் கொண்டதால் தப்பித்ததாக கருதுகிறேன்.
இந்த சம்பவத்திற்கு பிறகும் என் நண்பன் பற்றி நான் புரிந்துக் கொள்ளவில்லை. இவன் சகவாசத்தால் நான் மேலும் பல பாவங்களை செய்தேன்.
தொழிலாளியை முதலாளி சந்தேகப் பட்டால், தொழிலாளி, வேலையை தூக்கி எறிந்து விட்டு வந்து விடலாம். தந்தை - மகனிடையே பிணக்கு ஏற்பட்டாலும் இஃதே நடக்கும். நட்பில் விரிசல் ஏற்பட்டால், நண்பனிடமிருந்து பிரிந்து விடலாம். ஆனால், கணவன் மனைவி இடையே சச்சரவு ஏற்பட்டால்? கணவன் மனைவியை சந்தேகப்பட்டு விரட்டியடிக்கலாம். மனைவி... வாய் மூடி மெளனியாக இருக்க வேண்டும். என் மனைவியை இத்தகைய சூழலுக்கு தள்ளிய இந்த நிகழ்ச்சிகள் இன்றும் என் மனதை உறுத்துகிறது.
| < Prev | Next > |
|---|






’இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...’ன்னு புரட்சிகவி மட்டுமல்லாம ‘தேன் தேன் தேன்...’னு இன்றைய...
தூக்கம் வராம இருக்கறதுதான் இன்னிக்கு பல பேரோட பிரச்சினையே. ரொம்ப ஓவரா தூங்கி வழியறது ...
அண்மையில் எங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல் எங்களை திடுக்கிட வைத்தது. அந்த பகீர் மெயிலின்...