சிறு திருட்டுகள் செய்துக் கொண்டிருந்த நான் ஒரு பெரிய திருட்டை செய்தேன். அதை நினைத்தால் இன்றும் அவமானமாக உள்ளது. எனக்கு 15 வயது இருக்கும் என ஞாபகம். என் அண்ணனின் கை சங்கிலியிலிருந்து தங்கத்தை திருடிவிட்டேன். ஒரு முறை 25 ரூபாய் கடனை யாருக்கோ திருப்பி செலுத்த நினைத்த என் அண்ணன், தங்கம் காணாமல் போனதை பார்த்து விட்டான். பிறகு, எப்படியோ பணம் கட்டி சமாளித்தான். இந்த சம்பவத்திற்கு பிறகு திருடக் கூடாது என வைராக்கியமான முடிவெடுத்தேன். இந்த சம்பவத்தை என் தந்தையிட்டம் சொல்ல நினைத்தேன். ஆனால், சொல்ல தைரியம் வரவில்லை. என் தந்தை என்னை அடிப்பாரோ என்ற பயம் இல்லை. என் தந்தை என்னை அடித்ததே இல்லை. நான் சொல்லும் உண்மை அவரைக் காயப்படுத்தும் என நினைத்து சொல்லவில்லை. ஆனால், என் பாவத்தை போக்க நினைத்து நான் உண்மையை தந்தையிடம் சொல்ல துணிந்தேன்.
நான் சொல்ல நினைத்ததை கடிதமாக எழுதி தந்தையிடம் கொடுக்க முடிவெடுத்தேன். அந்தக் கடிதத்தில் மன்னிப்பை மட்டுமே நான் கோரவில்லை. என் தவறுக்கு தண்டனை அளிக்கவும் வலியுறுத்தியிருந்தேன். எனக்கு தண்டனை அளிக்க வேண்டுமேயன்றி அவருக்கு அவரே துன்புறுத்திக் கொள்ளக் கூடாது என எழுதியிருந்தேன்.
அந்தக் கடிதத்தை தந்தையிடம் கொடுக்கும் போது என் உடல் பயத்தில் நடுங்கியது. அப்போது, அவர் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். அந்தக் கடிதத்தை அவருக்கு கொடுத்து விட்டு எதிரில் உட்கார்ந்து கொண்டேன்.
அதை படிக்கும் போது கண்ணீர் முத்துக்கள் அவர் கன்னங்களை நனைத்தன. ஒரு நிமிடம், கண்ணை மூடிக் கொண்டு யோசித்தவர், அந்தக் கடிதத்தைக் கிழித்து எறிந்தார். கடிதத்தை படிக்க உட்கார்ந்தவர் மீண்டும் படுத்துக் கொண்டார். என் தந்தையின் வலியை என்னால் உணர முடிந்தது. நான் ஒரு ஓவியனாக இருந்தால் அந்தக் காட்சியை இன்று அப்படியே வரைந்து விடுவேன். அந்த அளவு, அந்தக் காட்சி என் நினைவில் பசுமையாக உள்ளது. அவரது கண்ணீர் என் பாவத்தைக் கழுவியது. அன்று அது தந்தையின் பாசமாக எனக்கு தோன்றியது. ஆனால், அதுதான் அகிம்சையின் சாரம் என இன்று புரிகிறது.
கடிதத்தை படித்து தலையில் அடித்துக் கொள்வார் என நினைத்தேன். ஆனால், நான் பாவமன்னிப்பு கேட்டதால், அவர் என்னை அமைதியாக மன்னித்து விட்டார். இந்த நிகழ்ச்சி என் மீதான் தந்தையின் பாசத்தை அதிகரித்தது.
| < Prev | Next > |
|---|











