அசைவம் சாப்பிட்டு வந்த காலக் கட்டத்தில் நான் செய்த இன்னும் சில அக்கிரமங்களை நான் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
நானும், என் உறவினர் ஒருவரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமை ஆனோம். வாயிலிருந்து மேகமூட்டம் போல் புகை விடுவதில் ஒரு பரவசம். புகை பிடிக்கும் எங்கள் மாமாவை பார்த்து இந்த ஆசை எங்களை தொற்றிக் கொண்டது. ஆனால், சிகரெட் வாங்க எங்களிடம் காசு இருந்ததில்லை. அதனால், எங்கள் மாமா புகைத்து விட்டு எறியும் மிச்ச மீதி சிகரெட்டுகளை நாங்கள் சேகரித்து பயன் படுத்தி வந்தோம்.
அந்த பயன் படுத்திய சிகரெட்டுகள் எப்பொழுதுமே எங்களுக்கு கிடைக்காது. அதிலிருந்து, அவ்வளவாக புகையும் வராது. இதனால், சிகரெட் வாங்க, வேலைக்காரன் வைத்திருக்கும் காசை திருட ஆரம்பித்தோம். சில நாட்களுக்கு இந்த திருட்டு பழக்கத்தால், எங்கள் புகைக்கும் ஆசை நிறைவேறியது. ஒரு குறிப்பிட்ட மரத்தின் இலைகளை காய வைத்து சிகரெட் போல் பயன் படுத்தலாம் என கேள்விபட்டு அதை செய்ய ஆரம்பித்தோம்.
பெரியோர்களின் அனுமதி இல்லாமல் எவ்வளவு நாட்களுக்கு புகைப்பது? சுதந்திர வேட்கை எங்களை படுத்தவே, விரக்தியில், தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தோம்.
ஆனால், எப்படி தற்கொலை செய்வது? எங்கிருந்து விஷம் எங்களுக்கு கிடைக்கும்? அரளி விதை விஷத் தன்மை உடையது என்று கேள்வி பட்டு, காடுகளில் அந்த விதைகளை தேடி அலைந்தோம். எங்கள் தேடுதலின் பலனாக அரளி விதை கைக்கு எட்டியது. தற்கொலை செய்து கொள்ள, மாலை வேளையே உகந்த நேரம் என முடிவு செய்தோம். கேதார்ஜி ஆலயத்திற்கு சென்று நெய் விளக்கேற்றி தரிசனம் பண்ணினோம். ஆனால், தற்கொலை செய்து கொள்ள தைரியம் வரவில்லை. ஒரு வேளை, உடனே சாகவில்லையென்றால்..? தற்கொலை செய்து கொள்வதால் என்ன பயன்? இப்படி பல குழப்பங்களுக்கு ஆளானோம். இருந்தும், 3 அரளி விதைகளை விழுங்கி விட்டோம். அதற்கு மேல் சாப்பிட தைரியம் வரவில்லை. ராமர் கோயிலுக்கு சென்று தற்கொலை எண்ணத்தை கை விட எண்ணினோம்.
தற்கொலை செய்து கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதை அப்போது நான் உணர்ந்தேன். அந்த சம்பவத்திற்கு பிறகு யாராவது தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால் நான் அசட்டை செய்து விடுவேன்.
தற்கொலை செய்யும் எண்ணம் எங்களை சிகரெட் புகைக்கும் ஆசையை கை விட வைத்தது. வளர்ந்த பிறகும், புகைக்கும் ஆசை எனக்கு வந்ததில்லை. புகைப்பது, அசிங்கமான, காட்டுமிராண்டி தனமான செயல் என்பது என் அபிப்ராயம். புகைக்கும் பழக்கம் எப்படி உலகம் முழுதும் பரவியது என எனக்கு தெரியவில்லை. ரயில் பயணத்தின் போது சக பயணி புகைத்தால் கூட மூச்சு முட்டும்.
சாதாரண சில்லறை காசுகளை நான் திருடி வந்ததை விட மோசமான திருட்டில் நான் ஈடுபட்டேன். தங்கத்தை திருடினேன்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




