முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் ஒட்டு மொத்த கோபத்துக்கு ஆளாகியுள்ளார் கேரள முதல்வர் உம்மண் சாண்டி.
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும், முதல்வராக யாரை நியமிப்பது என்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் நிலவியது. பின்னர் உம்மண் சாண்டி கேரளத்தின் முதல்வராக நியமிக்கப் பட்டார். அவர் அம்மாநிலத்தின் முதல்வராக பதவி வகிப்பது இது இரண்டாவது முறை.
கே.ஓ.சாண்டிக்கும், பேபி சாண்டிக்கும் 1943ம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் மகனாக பிறந்தவர் உம்மண் சாண்டி. புதுப்பள்ளியில் பள்ளியில் படிக்கும் போதே உம்மண் சாண்டிக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டு விட்டது. கோட்டயத்திலும், செங்கணசேரியிலும் தன் கல்லூரி படிப்பை முடித்த உம்மண் சாண்டி, எர்ணாகுளம் அரசினர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1967 முதல் 1969 காலக்கட்டத்தில் கேரள மாணவர் அணியின் தலைவராக பதவி வகித்தார். 1970ம் ஆண்டு கேரள மாணவர் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
தன் சொந்த தொகுதியான புதுப்பள்ளியில் 1970 முதல் 2011 வரை 10 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் உம்மண் சாண்டி. இதில் 4 முறை அமைச்சராக பதவி வகித்துள்ளார் சாண்டி.
2004 நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் அப்போது முதல்வராக இருந்த ஏ.கே.அந்தோணி, காங்கிரஸின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 31,2004ல் உம்மண் சாண்டி கேரள மாநில காங்கிரஸின் தலைவராக ஆக்கப் பட்டு, முதல்வர் பதவியும் வழங்கப் பட்டது. 2006 சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையவே தன் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் உம்மண் சாண்டி.
இந்த ஆண்டு (2011) நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றியடையவே, மீண்டும் முதல்வராக ஆகும் வாய்ப்பு உம்மண் சாண்டிக்கு கிடைத்துள்ளது.
1991-92 காலக்கட்டத்தில் கருணாகரன் முதல்வராக இருந்த போது நிதியமைச்சராக இருந்தவர் உம்மண் சாண்டி. அப்போது மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ததில் அரசின் தவறான நடவடிக்கைகள் காரணமாக, கேரள அரசுக்கு இரண்டரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான சர்ச்சையில்தான் தேசிய கண்காணிப்பு துறை தலைவர் பதவியை இந்த ஆண்டு பி.ஜே.தாமஸ் இழந்தார் என்பது நினைவிருக்கலாம்.
2010 இறுதியில் கருணாகரன் மறைவுக்கு பிறகு இந்த வழக்கு நீர்த்து போனது. இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் இந்த வழக்கு மீண்டும் தூசு தட்டப் பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்பதால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக உம்மண் சாண்டி அறிவித்தார். ஆனால், காங்கிரஸ் செயற்குழு வற்புறுத்தியதன் பேரில் தன் ராஜினாமா முடிவை தள்ளிவைத்துள்ளார் கேரள முதல்வர் உம்மண் சாண்டி.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|

