2 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நம்மைப் போல் சாதாரணமானவனாகதான் இருந்தான் அஜ்மல் கசாப். 26/11 என்று ஊடகங்களால் அழைக்கப் படும் மும்பை தீவிரவாத தாக்குதலை அரங்கேற்றிய கொடிய பாக். தீவிரவாதிகளில், அனைவரும் சாக, துரதிருஷ்ட வசமாக உயிருடன் போலீஸில் மாட்டிக் கொண்டவன் கசாப். அதன் பிறகு, ஒன்றரை ஆண்டுகளாக அதி பாதுகாப்பான சிறையில் அடைக்கப் பட்ட அஜ்மல் கசாப்பை பராமரிக்க அரசுக்கு ஆன ஒரு நாள் செலவு 1.5 லட்சம். இது வரை ஆகியிருக்கும் மொத்த செலவு 34 கோடி.
பாக்கிஸ்தானின் பின் தங்கிய ஃபரீத்கோட் கிராமத்தில் தஹி புரி விற்கும் ஏழை தந்தைக்கு மகனாக ஜூலை 13,1987 அன்று மகனாக பிறந்தவன் அஜ்மல் கசாப். இவனுக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா, ஒரு தம்பி, ஒரு தங்கை உள்ளனர். அண்ணன் அஃப்சல், லாகூரில் கூலி வேலை செய்கிறார்.
சிறிது காலம் அண்ணனுடன் கூலி வேலை செய்து வந்த அஜ்மல் கசாப், உழைத்து வேலை செய்ய பிடிக்காததால் மீண்டும் தன் சொந்த கிராமத்துக்கே திரும்பியுள்ளான். திரும்பியவன் ஒழுங்கான வேலை வெட்டி இல்லாமல் ஊதாரியாக ஊர் சுற்றி வந்துள்ளான்.
ஒரு பக்ரீத் தினம்தான் கசாப்பின் வாழ்க்கையையே மாற்றியது. பக்ரீத்துக்கு புது துணி வேண்டும் என தன் தந்தையிடம் கேட்டுள்ளான் அஜ்மல் கசாப். ஏழை தந்தையால், கசாப்பின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. குடும்ப சூழ்நிலையை விளக்கி சொன்னால் புரிந்துக் கொள்வான் என நினைத்த அப்பாவி தந்தை, அவனிடம் பக்குவமாக எடுத்துக் கூறியுள்ளார். புது துணி வாங்கித் தராத ஏமாற்றம் கசாப்புக்கு. தஹி புரி விற்கும் தந்தை, கூலி வேலை செய்யும் அண்ணன் என இவர்களை நம்பி எவ்வளவு காலம் இருப்பது. தான் பணக்காரன் ஆக வேண்டாமா, பணம், பங்களா, கார், பாலிவுட் கனவுகன்னிகள் சகிதம் தனக்கென்று ஒரு ஆடம்பர வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டாமா என எண்ணிய கசாப், தன் 18வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினான். அந்த வீட்டுக்கு அவன் மறுபடியும் போக முடியாமலேயே போய்ய் விடும் என அவன் எதிர்பார்க்கவில்லை.
அஜ்மல் கசாப்பின் ஃபரீத்கோட் கிராமத்தை பற்றி சொல்ல வேண்டும். கல்வி வாசனையே அறியாத, வறுமை கோட்டுக்கு மிக கீழே இருக்கும் மக்கள் மிக அதிகமாக வசிக்கும் கிராமம் ஃபரீத்கோட். அந்த வானம் பார்த்த தரித்தர பூமியில் இருக்கும் இளைஞர்களிடம் ஆசை வார்த்தைகள் சொல்லி தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதற்காக லஷ்கர்-இ-தொய்பா, அங்கு சிறப்பு கிளையே நடத்தி வருகிறதாம். புனித போர் என்ற பெயரில் நாச வேலைகளில் ஈடுபட அப்பாவி இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகிறதாம்.
வீட்டை விட்டு வெளியேறிய அஜ்மல் கசாப், சில காலம் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தான். பின்னர், ராவல்பிண்டிக்கு ஆயுதம் வாங்க போன போது, லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் சார்பாக நடத்தப் பட்ட பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டான். பொது கூட்டத்தில் பேசியவர்கள், காஷ்மீர் பகுதியில் இந்தியா செய்யும் அராஜகங்கள் பற்றியும், இந்தியாவில் இஸ்லாமியர்களின் இன்னல்கள் பற்றியும் விரிவாக பேசினார்களாம். அந்தப் பேச்சுகளில் நியாயம் இருப்பதாக கசாப்புக்கு தோன்றவே, அந்த இயக்கத்துடன் ஐக்கியம் ஆனான்.
ஓராண்டு கால கடுமையான பயிற்சிக்கு பிறகு மிகப் பெரிய அஸைன்மெண்ட் அவனுக்கு வழங்கப் பட்டது. அது, இந்தியாவை கதி கலங்க வைக்கும் அதிரடி பணி. ரயில்களில் குண்டு வைப்பது, மார்க்கெட்டில் குண்டு வைப்பது என செய்துக் கொண்டிருந்தால், இரண்டொரு நாட்களில் இந்தியர்கள் மறந்து விடுகிறார்கள். பணக்காரர்களும், வெளிநாட்டவரும் புழங்கும் இடங்களில் கை வைத்தால்? மும்பை, தாஜ் ஓட்டல், சத்ரபதி ரயில் நிலையம், ஓபராய் ஓட்டல் ஆகியவற்றை தாக்குவதே இந்த தீவிரவாதிகளுக்கு அளிக்கப் பட்ட அஸைன்மெண்ட். இதற்கு சம்பளமாக ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை, கசாப் குடும்பத்துக்கு கொடுப்பதாக, கசாப்பிடம் லஷ்கர்-இ-தொய்பா வாக்குறுதி அளித்ததாம்.
26/11. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் புயலாக நுழைந்த கசாப்பும், அவனது சகாக்களும் கண்ணை மூடிக் கொண்டு சுட்டனர். சில நிமிடங்களில் ரயில் நிலையமே ரத்த வெள்ளத்தில் மூழ்கியது.
அடுத்து, காமா மருத்துவமனைக்கு விஜயம் செய்தது கசாப் அண்டு கோ. அங்கு, வெள்ளை நிற குவாலிஸ் வாகனத்தில் வந்துக் கொண்டிருந்த 3 காவல் அதிகாரிளை சுட்டுத் தள்ளினான் கசாப். அப்போது, போலீஸுக்கு வழங்கப் பட்டிருந்த குண்டு துளைக்காத கவசத்தை கசாப் கிண்டல் அடித்ததாக சொல்லப் படுகிறது. பின்னர், காரில் பயணம் செய்த கசாப் குழுவினர், மெட்ரோ சினிமா தியேட்டர் முன்பு இருந்த மக்களைப் பார்த்து சிரித்த படியே சுட்டுத் தள்ளியுள்ளான்.
இப்படி, அந்த இரவில் கசாப் நடத்திய வன்முறை வெறியாட்டம் அதிகம்.
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கும் படி, கசாப்பின் தந்தைதான் அறிவுறுத்தியதாகவும் கூறப் படுகிறது. இது பற்றி நிருபர்கள் அவன் தந்தையிடம் கேட்டதற்கு, 'நான் என் மகனை விற்க வேண்டிய அவசியம் இல்லை.” எனக் கூறியுள்ளார்.
கசாப்பின் அடாவடி அவனை கைது செய்த பிறகும் ஓயவில்லை. சிறையில், சதா சர்வ காலமும் ஏதாவது இந்தி பாடலை சத்தமாக பாடிக் கொண்டிருப்பானாம். அவன் தனக்கு உயர் ரக பற்பசை, வாசனை திரவியம், தினமும் படிக்க உருது செய்தித்தாள் ஆகியவை வேண்டும் என ஒரு முறை மனுவும் அளித்திருந்தான். விசாரணைக்கு ஒத்துழைக்க, மட்டன் பிரியாணி கேட்கும் அளவு அடாவடியின் உச்சக் கட்டமாக திகழ்ந்துள்ளான் கசாப்.
அவனுடைய வழக்கு 2010 மே முதல் வாரம் நீதிமன்றத்துக்கு வந்த போது, அவனுடைய வழக்கறிஞர், அவனுக்கு ஆதரவாக எடுத்து வைத்த வாதங்களும், அவற்றை என்னவெல்லாம் சொல்லி நீதிபதி மறுத்தார் என்பதன் தொகுப்பு இதோ:
வழக்கறிஞர்: கசாப்பின் இளம் வயதை கருத்தில் கொண்டு அவனுக்கு குறைந்த பட்ச தண்டனை அளிக்க வேண்டும்.
நீதிபதி பதில்: சம்பவம் நடக்கும் போது அவனுக்கு 21 வயது.
வழக்கறிஞர்: கசாப்பை மூளை சலவை செய்து தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துள்ளனர்.
நீதிபதி: தானே விருப்பப் பட்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக அவனே கூறியுள்ளான்.
வழக்கறிஞர்: கசாப் திருந்த வாய்ப்பளிக்க வேண்டும்.
நீதிபதி: தான் செய்த குற்றத்திற்கு அவன் இது வரை வருத்தம் தெரிவிக்கவில்லை. அவன் திருந்த வாய்ப்பே இல்லை.
ஏழ்மையும், கல்வியின்மையும் ஒரு சாமானியனை எந்த நிலைக்கு தள்ளக் கூடும் என்பதற்கு கசாப், ஒரு (தற்போதைக்கு) வாழும் உதாரணம்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|

Kill that f..k or else leave him in public we will do it if you cont..