maniyosai.com

You are here: Home பொது சிறுகுறிப்பு சிறுகுறிப்பு - அன்னை தெரசா

சிறுகுறிப்பு - அன்னை தெரசா

Share/Save/Bookmark

mother teresaஆடம்பரமும் பொய்யும் நிறைந்த சினிமா வெளிச்சம் விழுந்த சினிமா நட்சத்திரமும் இல்லை. தேர்தலுக்கு தேர்தல் மறக்காமல் (!) மக்களிடம் பாசமழைப் பொழியும் அரசியல்வாதியும் இல்லை. ஆனால் அவரை தெரியாதவர்கள் இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல. உலக நாடுகள் அனைத்திலுமே அன்னை தெராசாவைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். வாழும்போது மட்டுமல்ல இறந்து 13 ஆண்டுகளாகியும் மக்களிடையே நன்மதிப்பு இருக்கிறதென்றால் அது பூர்வ ஜென்ம புண்ணியமல்ல. இந்த ஜென்மத்திலேயே அவர் செய்த மகத்தான சேவைகள் அவருக்கு இன்னும் பல ஜென்மங்களுக்கு புண்ணியம் தேடித் தரும். ஆகஸ்டு 26,1910 ல் மேசிடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜி பகுதியில் பிறந்தவர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இதுதான் அன்னையின் இயற்பெயர். நிக்கல் மற்றும் டிரானா போஜாக்சியு தம்பதியினரின் மூன்று குழந்தைகளில் இளையவர்தான் ஆக்னஸ். அவருக்கு 8 வயதாகும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். தனது பன்னிரெண்டாம் வயதிலேயே வாழ்க்கையை தெய்வ நம்பிக்கையுடன் கூடிய சமூக சேவைக்கு அர்ப்பணிக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதனால்  வீட்டிலும், பள்ளியிலும், வெளியேயும் எப்பொழுதும் அதைப் பற்றியே பேசுவார். அப்பொழுது அவருக்கு சமூக சேவை செய்யும் லொரெட்டோ சகோதரிகளைப் பற்றி தெரியவந்தது. அதனால் தனது பதினெட்டாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி அயர்லாந்தின் ரத்ஃபர்ன்ஹாமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்தில் இணைந்துவிட்டார்.  அப்பொழுது அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அங்குள்ளவர்களுடன் உரையாட தேவைப்பட்டதால் சில நாட்களிலேயே ஆங்கிலம் கற்று சரளமாக பேசவும், படிக்கவும், எழுதவும் கற்றுத் தேர்ந்தார்.

இதற்கிடையே லொரெட்டோ சகோதரிகள் மேற்கு வங்கம் சென்று திரும்பியிருந்தனர். அவர்களிடம் இந்தியாவைப் பற்றி விசாரித்து அறிந்தார். அதனால் அவருக்கு இந்தியா மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு மேற்கு வங்கம் செல்ல விரும்பினார். நிர்வாகம் அவரை அனுப்ப தயங்கினாலும் அவரது பிடிவாதமே வென்றது. 1929 ஆம் வருடம் அவர் இந்தியாவை வந்தடைந்து இமய மலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். பின்னர் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். அங்கேயுள்ள சட்டத்தின்படி அங்கே புதிதாக வருபவர்கள் பெயர் மாற்றம் செய்துக் கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் சமூக சேவைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க நினைத்திருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா மார்டின் உடல்நிலை மோசமடைந்து தனது 24ம் வயதிலேயே மரணமடைந்ததால் ஆக்னஸ் அவரது பெயரையே தனது புதிய பெயராக தேர்ந்தெடுத்தார். அன்றிலிருந்து ஆக்னஸ், தெரசா ஆனார்.

கல்கத்தாவில் தங்கி சமூகத்தின் பல அவலங்களை அவர் கவனித்துக் கொண்டிருந்தவேளையில் அவருக்கு டார்ஜிலீங்கில் உள்ள லொரெட்டோ இல்லத்தில் ஆசிரியர் பணி வந்தது. அங்கேயும் உற்சாகமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இருப்பினும் கல்கத்தாவில் தன்னை சுற்றியிருந்த வறுமை, சுகாதார சீர்கேடுகள் ஆகியவை அவரை மீண்டும் கல்கத்தாவிற்கு செல்லத் தூண்டியது. 1943ல் பஞ்சம், 1948ல் இந்து முஸ்லீம் கலவரம் என பலவும் அவரது சேவை இந்தியாவிற்கு மிகவும் தேவை என உணர செய்தது. ஆனால் லொரெட்டோ இல்லத்தின் சட்டதிட்டங்கள் அவரை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. அதனால் 1948ல் அங்கு ராஜினாமா செய்துவிட்டு நீலக் கரைப் போட்ட வெள்ளைநிற சேலையணிந்து இந்தி பயின்று இந்திய குடியுரிமையும் பெற்று இந்திய மண்ணில் சேவைப் புரிய ஆரம்பித்தார்.

முதலில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். முதல் ஆண்டில் வருமானமும் ஏதுமில்லாமல் சமூக சேவை செய்வது மிகவும் கடினமாக இருந்தது. அப்பொழுது சில சமயங்களில் மீண்டும் கன்னிமடத்திற்கே திரும்பிவிடலாமா என சஞ்சலப்பட்டதாக அவரே தனது டயரியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விரைவிலேயே அவரது சேவை பிரதம மந்திரி உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.
young age mother teresa
-1950-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் என பிற்காலத்தில் மிகப்பெரிய ஸ்தாபனமாக உருவெடுக்கப் போகிற  அறக்கட்டளையை துவங்கினார்.
- 1952 ல் கல்கத்தா நகரத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிலிருப்போருக்கு, முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். அதற்கு காளிகாட் இல்லம் என பெயரிட்டார். அங்கே அனைத்து மதத்தினருக்கும் கௌரவமான இறப்பு நிகழும்படி செய்தார்.
- 1955 ல் அவர் நிர்மலா சிசு பவனையும், தி சில்ட்ரென்'ஸ் ஹோம் ஆப் தி இமாக்குலேட் ஹார்ட்டையும் அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளைஞர்களுக்காகவும் தொடங்கினார்.
-1957-ல் முதல் முறையாக தொழுநோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார்.

இவ்வகயில் தனது முழுநேரமும் ஏழைகளின் நல்வாழ்வுக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்தார். அதனால் ‘குடிசை சகோதரி’ என்றழைக்கப்பட்ட  அன்னை தெரசாவின் ஸ்தாபனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உலகெங்கும் விரிவடையத் தொடங்கியது.

கிடைத்த விருதுகள் :
•  1962 – பத்ம ஸ்ரீ விருது
•  1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
•  1971 – குட் சமரிட்டன் விருது
•  1971 – கென்னடி விருது
•  1972 – பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
•  1973 – டெம் பிள்டன் விருது
•  1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
•  1979 – அமைதிக்கான நோபல் பரிசு
•  1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
•  1985 – சுதந்திரத்துக்கான பிரசிடென்ஷியல் விருது
• 1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை

அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இன்று தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கும் நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ல் வெளியிடப்பட்டது.

இறுதி நாட்கள்:
அன்னை தெரசாவுக்கு முதன்முதலில் 1983ல் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் 1989ல் இரண்டாம் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. 1996ல் கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தது. தொடர்ந்து மலேரியா மற்றும் இதய நோயினால் அவதிப்பட்டார். மார்ச் 13, 1997 ல் அவர் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுபட்டு செப்டம்பர் 5, 1997-ல் மரணமடைந்தார்.

அவர் ஏழை மக்களுக்காக இத்தனை சேவைகள் செய்திருந்தாலும் பட்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அவர் பற்றி அவதூறு பரப்பாதவர்களும் இல்லை. கல்கத்தாவின் கலாச்சாரத்தையே அழித்துவிட்டார் எனவும் அவர் என்றுமே கிறித்தவ மதத்திற்கே முன்னுரிமைத் தருகிறார் எனவும் பல விமர்சனங்கள் எழுந்தன.அவரது இறுதி நாட்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டப்போது தனது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாமல், கலிபோர்னியாவின் அனைத்து வசதிகளுமுடைய மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் எனவும் பல சர்ச்சைகள் அவரை இறுதி வரைத் தொடர்ந்தது.

பாரதிய ஜனதா கட்சிக்கு அன்னை தெரசாவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரது இறுதிச்சடங்கிற்கு தனது பிரதிநிதியை அனுப்பியதுடன் அவர் இந்தியாவில் தங்கி சேவை செய்ததற்கு பரிகாரமாக முழு ராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகளை நடத்தியது.

அவர் இறந்து 13 வருடங்கள் ஆகியிருந்தாலும் இப்பொழுது அன்னை தெரஸாவின் சேவைகளை நினைவு கூரும் வகையில் அமெரிக்க அஞ்சல் துறை அவரது அஞ்சல் தலையை செப்டம்பர் 5ம் தேதி வெளியிடவுள்ளது.






Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits