காமன்வெல்த் நாடுகளால் வழங்கப்படும் புக்கர் பரிசை பெற்று பல லட்சங்களைப் பரிசாகத் தட்டி சென்ற முதல் இந்தியன் அருந்ததி ராய். 2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசைப் பெற மறுத்து விட்டவரும் இவரே.
1961ல் ஷில்லாங்கில் கேரள தாய்க்கும், வங்காள தந்தைக்கும் மகளாகப் பிறந்தவர். ஆனால் அவர்களது திருமணம் நெடுநாள் நீடிக்காததால் தனது சிறுவயதிலேயே தாயுடன் கேரளா சென்றுவிட்டார். அதனால் தனது பள்ளிப்படிப்பை கோட்டயத்திலும், பின்னர் ஊட்டி லவ்டேலில் இருக்கும் லாரன்ஸ் பள்ளியிலும் தொடர்ந்தார்.
தனது 16வது வயதில் டெல்லியில் கட்டடக்கலைப் பயில ஆரம்பித்தார். அப்பொழுது அவரை சந்தித்த திரைப்பட இயக்குனர் பிரதீப் கிருஷன் தனது திரைப்படத்தில் ஆதிவாசிப் பெண்ணாக ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்குமாறு கேட்டார். சிறிது தயக்கத்திற்கு பின் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார் அருந்ததி ராய்.
சில ஆண்டுகளுக்கு திரைக்கதை எழுதி வந்த அவர் 1997ல் ‘ தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ என்ற நாவலை எழுதி அதற்கு புக்கர் பரிசுப் பெற்றதில் உலகின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. அதன் பிறகு அரசியல் விஷயங்களை ஆராய்ந்து கட்டுரைகள் எழுதுவதில் தன்னை முனைப்பாக ஈடுப்படுத்திக் கொண்டார். அதுவரை சிறந்தத் திரைக்கதைக்கான தேசிய விருது வாங்கியது, சிறந்த நாவலுக்கான புக்கர் பரிசு வாங்கியது என அருந்ததி நட்சத்திரமாக ஜொலித்த அவர் அரசியல் கருத்துக்கள் தெரிவிப்பதில் எரிநட்சத்திரமாக ஆனார்.
அமெரிக்காவின் ஆஃப்கானிஸ்தான் படையெடுப்பு, இந்தியாவின் அணுசக்தி கொள்கை போன்றவற்றில் காரசாரமான கருத்துகளைத் தாங்கி கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். இந்தியாவில் தற்போது தலையாயப் பிரச்சினையாக இருக்கும் மாவோயிஸ்ட் பிரச்சினையில் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். மாவோயிஸ்ட்டுகளை ’காந்தியவாதிகள்’ என அவர் குறிப்பிடுவதும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக அருந்ததி நடந்துக் கொண்டாலும் அவர்களது தீவிரவாதத்தை அவர் ஆதரிக்கவில்லை.
இந்திய பிரிவினையை ’பிரிட்டிஷார் நம் நாட்டை விட்டு வெளியேறும்போது கடைசியாக நமக்கு கொடுத்த உதை’ என குறிப்பிடும் அருந்ததி ராய் காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுவிக்க வேண்டும் என கோரி 2008ல் ஒரு மாபெரும் பேரணி நடத்தினார். இதுப்போன்ற பேரணிகள் நடத்துவது காஷ்மீர் மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் என்பதைக் காட்டத்தான் என்றார். அதுமட்டுமின்றி இப்பொழுதும் டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் காஷ்மீர் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பகுதியாக இருந்ததில்லை. அதனால் இந்தியா காஷ்மீரை விடுவிக்க வேண்டும் எனக் கூறினார். இது மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. இந்திய இறையாண்மைக்கு எதிரானக் கருத்து என்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|

