யோகா கலை பயிற்றுவித்து மக்களின் உடலும், உள்ளமும் நலம் பெற உழைத்து வரும் பாபா ராம்தேவ், ஊழலை அகற்றி நாடு வளம் பெற உழைத்து வருகிறார். ஊழலை அகற்றி, கறுப்பு பணத்தை மீட்க அவர் குரல் கொடுத்து வருவதால் ஆட்சியாளர்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகி இருப்பவர் பாபா ராம்தேவ்.
ஹரியானா மாநிலம் அலிபூர் கிராமத்தில், ராம் நிவாஸ் யாதவ், குலாபோ தேவி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ராம்தேவ். இவரது இயற்பெயர் ராம் கிருஷ்ணா யாதவ். இவர் தன் சிறு வயதிலேயே, இந்திய சுதந்திரத்துக்காக பாடு பட்ட ராம் பிரசாத் பிஸ்மில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரிடம் ஈர்க்கப் பட்டார். எட்டாம் வகுப்பு வரை பள்ளி கல்வி பயின்ற ராம் கிருஷ்ணா யாதவ், பின்னர், கான்பூர் ஆசாரி பிரதம் அவர்களிடம் சமஸ்கிருதம் மற்றும் யோகக் கலை பயின்றார்.
பின்னர், ஆசாரி பால்தேவ்ஜி அவர்களிடம் ஏற்பட்ட தொடர்பைத் தொடர்ந்து சன்னியாசம் பெற்றுக் கொண்ட ராம் கிருஷ்ணா யாதவ், தன் பெயரை ஸ்வாமி ராம்தேவ் என மாற்றிக் கொண்டார்.
சில காலம் ஹரியானாவின் ஜிந்த் மாவட்ட கிராம மக்களுக்கு இலவசமாக யோகக் கலை கற்று தந்த ராம்தேவ், ஹரித்வாரில் ஆசிரமம் அமைத்தார்.
2003ம் ஆண்டு முதல் பிரபல வட இந்திய ஆன்மீக சேனலில் யோகக் கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்றவர் பாபா ராம்தேவ்.
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் சமுதாய சீர்திருத்தத்திற்காக தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக முழங்கி வருகிறார் பாபா ராம்தேவ். கட்டாய ஓட்டளிப்பு, இந்திய பொருட்களை மட்டும் உபயோகித்தல் உள்ளிட்ட மக்கள் நல பிரச்சனைகளுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வருபவர் பாபா ராம்தேவ். குடுவை குளிர்பானங்கள் மூலம் மக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் இவர் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க கடந்த பிப்ரவரி மாதம் (2011) சில யோசனைகளை இவர் தெரிவித்தார். 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தல், ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை அளித்தல், அயல்நாட்டு தொடர்பு இல்லாமலேயே அந்நாட்டு வங்கிகள் அளித்துள்ள கடன் அட்டைகளை வைத்திருப்பவர்களை கண்காணித்தல் போன்ற இவரது யோசனைகளை செயல்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.
இதனால், ஜூன் 4, 2011 முதல் புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக பாபா ராம்தேவ் அறிவித்தார். திட்டமிட்ட படியே அன்றைய தினம் காலை தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார் ராம்தேவ். ஜூன் 4 நள்ளிரவு ராம்லீலா மைதானத்தில் புகுந்த தில்லி போலீஸார் அவரது ஆதரவாளர்களை விரட்டியடித்து, அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று, அவரது ஆசிரமம் இருக்கும் ஹரித்வார் அனுப்பி வைத்தனர்.
இந்திய ஜனநாயகத்துக்கு எதிரான தில்லி போலீஸாரின் செயல் பல தரப்பினரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
எனினும், ஊழலுக்கு எதிரான தன் போராட்டம் தொடரும் என பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|

