கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் ரான் நகரில், கன்னட குடும்பத்தில் 1922ம் ஆண்டு பிறந்தவர் இந்துஸ்தானி இசை மேதை பீம்சென் ஜோஷி. இவருடன் பிறந்தவர்கள் 16 பேர். அவர்களில் இவர்தான் மூத்தவர். இவர் தனது சிறு வயதிலேயே தாயை இழக்க, அவரது சித்திதான் அவரை வளர்த்தார்.
பண்டித் பீம்சென் ஜோஷி குழந்தையாக இருந்த போதே, வீட்டில் பஜனை நிகழ்ச்சிகளில் நடந்தால் அங்கு தவழ்ந்து சென்றாவது ஆஜராகி விடுவாராம். அதனை வைத்து அவரது இசை ஆர்வத்தை அவரது குடும்பத்தினர் கண்டுகொண்டனர்.
தன் சிறு பிராயத்தை தன் சொந்த ஊரிலேயே கழித்த பீம் சென் ஜோஷி, தன் 11வது வயதில் இசையை கற்கும் தாகத்துடன் பிஜாபூர் புறப்பட்டார்.அங்கிருந்து புனே. பின்னர், க்வாலியர் சென்ற ஜோஷி, க்வாலியர் மகாராஜாவால் நடத்தப் பட்ட மாதவா இசை பள்ளியில் சேர்ந்தார். சில காலத்துக்கு பிறகு, அவரது சொந்த ஊரான தார்வாடை சேர்ந்த சவாய் காந்தர்வாவிடம் சிஷ்யனாக சேர்ந்தார் பீம் சென் ஜோஷி. 1936 முதல் 1940 வரை 4 ஆண்டுகளுக்கு அவரது வீட்டிலேயே தங்கி குருகுல கல்வி போல இசையை பயின்றார் பீம்சென் ஜோஷி.
1941ம் ஆண்டு தன் 19ம் வயதில் தன் பாடல்களை அரங்கேற்றினார் பீம்சென் ஜோஷி. இந்தி மற்றும் கன்னட பக்தி பாடல்களைக் கொண்ட அவரது முதல் இசை ஆல்பத்தை ஹெச்.எம்.வி. நிறுவனம் முதன்முதலில் 1942ம் ஆண்டு வெளியிட்டது. தன் குருநாதர் சவாய் கந்தர்வாவின் 60வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் 1946ம் ஆண்டு பீம்சென் ஜோஷி நடத்திய கச்சேரி, அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.
இந்துஸ்தானி பஜன் பாடல்களை அனாயசமாக பாடும் தன் ஆற்றலாலும், ஒப்பற்ற தன் குரலாலும் இந்துஸ்தானி இசையுலகின் முடி சூடா மன்னனாக வளர்ந்தார் பீம் சென் ஜோஷி. இந்தி, மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் அவர் பாடிய பக்தி பாடல்கள் அடங்கிய ரிக்கார்டுகள் விற்று தீர்ந்தன. இன்றளவும் அவரது பாடல் சிடிக்களுக்கு இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
பண்டித் பீம் சென் ஜோஷி, பசந்த் பாஹர், பீர்பல் மை பிரதர், சந்தியா ராகா (கன்னடம்), நோடி ஸ்வாமி நாவு இரோது ஹீகே (கன்னடம்) உள்ளிட்ட சில படங்களில் பாடியுள்ளார்.
1985ம் ஆண்டு தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் 'மிலே சுர் மேரா தும்ஹாரா..' என்ற வீடியோ பாடல் வெளியிடப் பட்டது. அந்தப் பாடலில் பல முன்னணி பாடகர்கள் பாடியிருந்தனர். பல முன்னணி நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் திரையில் தோன்றி பாடலுக்கு வாயசைத்திருந்தனர். இந்தப் பாடல் பீம் சென் ஜோஷியின் குரலில்தான் தொடங்கும். அன்றைய தினம் தூரதர்ஷனில் அடிக்கடி ஒளிபரப்பப் பட்டு வந்த இந்த பாடல், பீம் சென் ஜோஷிக்கு திரைப்பட நட்சத்திரத்துக்கு ஈடான புகழைப் பெற்று தந்தது. இன்றும் இந்தி டி.டி.யில் இந்தப் பாடல் ஒளிபரப்பப் பட்டு வருகிறது!
கர்நாடக இசைக்காக சென்னையில் நடக்கும் இசை சீசனைப் போல, இந்துஸ்தானி இசை பிரியர்களுக்காக புனேயில் சவாய் கந்தர்வா இசை விழாவை, 1953ம் ஆண்டு நடத்தினார் பீம் சென் ஜோஷி. தன் குருநாதரின் முதல் நினைவு தினத்தையொட்டி 1953 டிசம்பரில் நடத்தப் பட்ட இந்த இசை விழாவுக்கு இந்துஸ்தானி இசை விரும்பிகள் ஏகோபித்த ஆதரவு அளித்தனர். அதனால், இந்த இசை விழா ஆண்டுதோறும் நடத்தப் பட்டது. 2002ம் ஆண்டு, தான் ஓய்வு பெறும் வரை இந்த விழாவை நடத்தி வந்தார் பண்டித் பீம் சென் ஜோஷி. அவரது குருபக்திதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது எனக் கூறலாம்.
பத்ம ஸ்ரீ (1972), பத்ம பூஷன் (1985), பத்ம விபூஷன் (1999), மகாராஷ்டிரா பூஷன் (2002), கர்நாடக ரத்னா (2005), பாரத் ரத்னா (2008), தில்லி அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது (2009) உள்ளிட்ட பல விருதுகள் பண்டித் பீம் சென் ஜோஷி அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.
சில நாட்களாக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த பண்டித் பீம் சென் ஜோஷி, தன் பிறந்த நாளுக்கு (பிப்.4) 11 நாட்களே இருந்த நிலையில் ஜனவரி 24ம் தேதி (2011) இறந்தார்.
மரணம் அவரது உடலுக்குதானே தவிர, இந்த உலகம் இருக்கும் வரை அவரது பாடல்கள் வாழும்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|
