வரலட்சுமி விரதம்: இந்த பண்டிகை இந்து காலண்டர் படி சிராவண மாதம் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது. ஆங்கில காலண்டர் படி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படுகிறது. திருமணமான சுமங்கலிப் பெண்கள் தங்கள் குடும்பம் நோய் நொடியின்றி செல்வ வளத்துடன் செழிப்பாக இருப்பதற்காக மகாலட்சுமியை வழிப்படுவதுதான் வரலட்சுமி விரதம்
மகத நாட்டில் வாழ்ந்து வந்த சாருமதி என்ற பெண் உயரியப் பண்புகளோடு தன் கணவனையும் அவனை பெற்றவர்களையும் அன்புடனும் அக்கறையுடனும் கவனித்து வந்தாள். அவளது இந்த குணங்களைக் கண்ட மகாலட்சுமி அவளது கனவில் தோன்றி வரலட்சுமி விரதம் இருக்குமாறு கூறினார். அதை சாருமதி தன் குடும்பத்தாரிடம் கூற அவர்களும் அகமகிழ்ந்து அவள் பூஜை செய்ய வேண்டிய உதவியை செய்தனர். அவளோடு அக்கம்பக்கத்து பெண்களும் இணைந்துக் கொண்டனர். விரதமிருந்து பூஜையை செம்மையாக நடத்தி முடிக்கும்போது அனைத்து பெண்களும் விலையுயர்ந்த நகைகள் அணிந்திருந்தனர். அவர்களது வீடும் செல்வ செழிப்பால் நிறைந்தது. அதைக் கண்ட அப்பெண்களும் மற்ற பெண்களும் ஆண்டுதோறும் வரலட்சுமி விரதம் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
அது மட்டுமின்றி சிவப்பெருமானே தன் மனைவி பார்வதி தேவியிடம் வரலட்சுமி விரதம் கொண்டாடுமாறு அறிவுறுத்தியதாகவும் ஒரு கதைக் கூறப்படுகிறது.
வரலட்சுமி விரதத்திற்கு முதல் நாளே திருமணமானப் பெண்கள் தங்கள் வீட்டை சுத்தப்படுத்தி, அலங்கரித்து விடுவர். மறுநாள் காலை விரதத்தன்று வாசலை நீர் தெளித்து மாக்கோலமிடுவர். மாவிலைத் தோரணங்கள் கட்டுவர். பின்னர் குளித்து சுத்தமான ஆடையுடுத்தி பூஜை செய்வர். பூஜையறையிலோ அல்லது நன்கு சுத்தமான வேறிடத்திலோ கிழக்கு நோக்கி அம்மனுக்கு மனை அமைப்பர். மனை என்றால் பூஜை செய்யும் இடத்தை கோலமிட்டு அலங்கரித்து அதன் மேல் பீடம் அமைக்க வேண்டும். பின்னர் பித்தளை அல்லது வெள்ளி கலசம் வைத்து அதில் நீர் அல்லது அரிசியை நிரப்ப வேண்டும். அவரவரது விருப்பப்படி கலசத்தை அலங்கரிக்கலாம். வரலட்சுமி விரதத்தன்று மகாலட்சுமி அந்த கலச சொம்பில் வீற்றிருப்பதால் நம் விருப்பப்படி நகைகள், புதுத் துணி அனைத்தும் அணிவித்து அழகுப் பார்க்கலாம்.
விநாயகர் வழிப்பாட்டுடன் பூஜையைத் தொடங்கவேண்டும். பின்னர் லலிதா சஹஸ்ரநாமம், லட்சுமி அஷ்டோத்திரம் என மகாலட்சுமியின் புகழ் பாடலாம். மாலையில் அக்கம்பக்கத்தில் இருக்கும் சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து தாம்பூலம் கொடுப்பது வழக்கம். இவ்விரதம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலும் மகாரஷ்டிரா மற்றும் ஒரிசாவின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
ஆவணி அவிட்டம்: இது பிராமண சமூகத்தினருக்கு மிக முக்கியமானப் பண்டிகையாகும். இப்பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலும் மகாரஷ்டிரா மற்றும் ஒரிசாவின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இது சிராவண மாதப் பௌர்ணமியன்று கொண்டாடப்படும். ஆவணி அவிட்டம் என தமிழ்நாட்டிலும் யஜூர் உபகர்மா என ஆந்திர கர்நாடக மாநிலங்களிலும் அழைக்கின்றனர். உபகர்மா என்றால் ஆரம்பம் என அர்த்தம். அதாவது இந்த ஆவணி அவிட்டத் திருநாளிலிருந்து வேதங்களை கற்க ஆரம்பிப்பதாக அர்த்தம். இந்த ஆவணி அவிட்ட நாள் மகாவிஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்த நாளாகும். ஹயக்ரீவர் பிரம்மதேவருக்கு வேதங்களை மீட்டுக் கொடுத்தவராவார்.
ஆவணி அவிட்டத்தன்று முதலில் ‘பிராயச்சித்தம்’ செய்வர். அதாவது அந்த ஆண்டு முழுவதும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களைப் போக்க வேண்டி பிரார்த்தனை செய்வர். ஹோமம் வளர்த்து பூணூல் மாற்றுவர். இதன் மூலம் தான் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அது சுத்தப்படுத்தப்பட்டு, இந்த பூணூலை அணிவதன் மூலம் பிராமணர்களின் உயரிய கடமைகளை செய்யத் தன்னை தகுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.
மறுநாள் காயத்திரி ஜபம் ஓதுவர்.
கிருஷ்ண ஜெயந்தி: அசுரர்களை அழித்து மக்களைக் காக்க மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் 8வது அவதாரம்தான் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரம். இந்த அவதாரத் திருநாள்தான் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இது ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என பலப் பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்து காலண்டரில் சிராவண மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் ஆவணியிலும் ஆங்கில மாதங்களில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரிலும் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண பகவான் ரோகினி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தார். அதனால் இது இருவிதமாகக் கொண்டாடப்படுகிறது.ஆவணி மாதம் ரோஹினி நட்சத்திர நாளில் கோகுலாஷ்டமி வருகிறது. கிருஷ்ணர் அஷ்டமி திதியன்று நள்ளிரவில் பிறந்ததால் என்று அஷ்டமி நள்ளிரவில் வருகிறதோ அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.ரோகினி நட்சத்திரமும் அஷ்டமியும் சேர்ந்து வந்தால் அது இரட்டிப்பு கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
இது தமிழ்நாடு, குஜராத், உத்தரப்பிரதேசம் என இந்தியாவின் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த மதுராவில் படு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
கிருஷ்ணர் செல்வத்தை அள்ளித் தரும் கடவுள் என்பதாலும் கிருஷ்ணர் அலங்காரத்தில் பிரியம் கொண்ட அழகுக் குழந்தை என்பதாலும் இப்பண்டிகையை மக்கள் வண்ணமயமாகக் கொண்டாடுகிறார்கள். கிருஷ்ண ஜெயந்தியன்று தங்களது வீட்டை சுத்தப்படுத்தி, அலங்கரித்து மாக்கோலமிடுகின்றனர். மாவிலைத் தோரணங்கள் காற்றில் அசைந்தாட கிருஷ்ணரை வரவேற்க வாசலிலிருந்து பூஜை செய்யும் இடம் வரை அரிசி மாவினால் குழந்தையின் பாதசுவடுகள் வரைகின்றனர். கிருஷ்ணர் தனது அழகானப் பிஞ்சு பாதசுவடுகள் தரையில் பதியப் பதிய தங்கள் வீட்டிற்கு வருகைத் தருவதாக நம்பிக்கை. பூஜை செய்யுமிடத்தில் கிருஷ்ணர் விக்ரகத்தையோ, படத்தையோ நடுநாயகமாக வைத்து நிறைய மலர்களால் அலங்கரிக்கின்றனர்.
செல்லக் குழந்தை கிருஷ்ணருக்கு வெண்ணெய் என்றால் மிகவும் இஷ்டம் என்பதால் ஆயர்பாடியில் ஒவ்வொரு வீடாக சென்று வெண்ணெய் திருடித் தின்றக் கதையை எத்தனை தடவைக் கேட்டாலும் அலுக்காது. அதன் அழகே தனியழகு. அதனால் கிருஷ்ண ஜெயந்தியன்று வெண்ணெய் நிச்சயம் உண்டு. அதேப் போல குசேலர் தந்த ஒருபிடி அவலுக்கு கிருஷ்ணர் செல்வத்தை அள்ளித் தந்ததால் அன்று அவலுக்கும் தனியிடம் உண்டு. மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் சாக்லேட், ஐஸ்கிரீம், இனிப்பு பண்டங்கள் என இனிப்பு வகைகள் நிறைந்திருக்குமல்லவா? கிருஷ்ணர் அனைவருக்கும் பிடித்த செல்லக் குழந்தை என்பதால் அன்று வீட்டில் சீடை, முறுக்கு வகையறாக்களோடு நிறைய இனிப்பு பதார்த்தங்களும் இடம்பெறும்.
எல்லாம் இருந்தாலும் பொதுவாக கிருஷ்ண ஜெயந்தியன்று ஒருசிலர் விரதம் மேற்கொள்கின்றனர். நாள் முழுவதும் விரதமிருந்து பூஜை செய்து பக்திப் பாடல்கள் பஜனைப் பாடல்கள் பாடி நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்த நேரத்தில் தங்கள் விரதத்தை முடித்துக்கொள்வர். இப்பண்டிகை கிருஷ்ணர் கோயில்களில் படுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி: முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் விநாயகர் சதுர்த்திக் கொண்டாடப்படுகிறது.
மற்ற எல்லாக் கடவுளையும் விட பிள்ளையார் மிகவும் தோழமையானவர் என்று ஒரு நம்பிக்கை உண்டு. நாம் விநாயகரை மனதில் நினைத்து சாணியை உருட்டி வைத்தாலும் அதில் விநாயகர் எழுந்தருள்வார் என்பது மக்களின் நம்பிக்கை. அதை உணர்த்தும் விதமாக விநாயகர் சதுர்த்தியில் நாம் செய்யும் அனைத்து விஷயங்களுமே மிக எளிமையானவை.
களிமண்ணில் செய்யப்படும் பிள்ளையார் சிலைகள் மிகக் குறைந்த விலையிலேயேக் கிடைக்கும். அவரை அலங்கரிக்க எருக்கம்பூ, அருகம்புல், செம்பருத்தி, அரளி என மிக சுலபமாகக் கிடைக்கக் கூடியப் பொருட்களையே வைத்துப் பூஜை செய்கிறோம்.
விநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தப்படுத்தி பூஜை செய்ய மண்டபம் அமைக்க வேண்டும். பெரும்பாலும் வீட்டில் உள்ள ஸ்டூல் சிறிய பெஞ்ச் என எதையாவது மண்டபம் அமைக்கப் பயன்படுத்துகிறார்கள். ஸ்டூலை சுத்தப்படுத்தி அதை சுற்றி மாவிலைத் தோரணமும் சிறிய வாழைமரமும் கட்டி அலங்கரித்து அதன் நடுவே குடையுடன் கூடிய பிள்ளையார் சிலையை வைத்து பூஜை செய்வது வழக்கம். பிள்ளையாருக்கு சந்தனம் குங்குமம் பொட்டிட்டு மலர்களால் அலங்கரித்து வயிற்றில் ஒரு ரூபாய் நாணயத்தை ஒட்ட வைத்து பூஜை செய்வர். அன்று விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம்,சுண்டல் போன்றவை நைவேத்தியமாக வைக்கப்படும்.
10 நாட்கள் கழித்து ஆனந்த சதுர்த்தியன்று பிள்ளையார் சிலைகள் ஆற்றிலோ, கடலிலோ கலக்கப்படும்.
1893ம் ஆண்டு வரை பிள்ளையார் சதுர்த்தி எளிமையாக வீட்டளவில் கொண்டாடப்பட்டு வந்தது. பாலகங்காதரத் திலகர் மக்களிடையே ஜாதி மத வேற்றுமைகளை ஒழித்து ஒற்றுமை நிலவ செய்வதற்காக இதை தேசிய விழாவாக கொண்டாட மக்களைத் தூண்டினார். பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை நிறுவி அதை கடலில் கடக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதும் திலகரே. யார் வேண்டுமானாலும் பிள்ளையாரை வழிப்படலாம் என்பதால்தான் விநாயகர் சதுர்த்தி வழிப்பாட்டு முறையும் மிக எளிமையாக இருக்கிறது.
Want to write for Maniyosai?



