தீபாவளி: ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினத்தில் கொண்டாடப்படுவது தீபாவளி. இப்பண்டிகை இந்தியா மட்டுமின்றி நேபாள், சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், இலங்கை, மியான்மர், பிஜி போன்ற நாடுகளிலும் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராவணனனை வதம் செய்துவிட்டு அயோத்தி திரும்பிய நாள் என்பதாலும், கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனைக் கொன்ற நாள் என்பதாலும் இந்த நாளில் இந்துக்கள் வீடுகள் தோறும் விளக்கு ஏற்றி வைத்து புத்தாடை உடுத்தி, தோரணங்கள் கட்டி, பட்டாசு கொளுத்தி வண்ணமயமாகக் கொண்டாடுகிறார்கள். மகாவீரர் மோட்சமடைந்த நாள் என்பதால் சமணர்களுக்கும், ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்ட 52 இந்து மன்னர்களை விடுவித்துவிட்டு சீக்கிய மதகுரு ஹர் கோபிந்த் சந்த் குவாலியரிலிருந்து அமிர்தசரஸ் திரும்பிய நாள் என்பதால் சீக்கியர்களும் தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.
லக்ஷ்மி குபேர பூஜை: தீபாவளி திருநாள் அறுவடை காலத்தில் வருவதால் விவசாயிகள் இந்த நாளில் முந்தைய ஆண்டு ஈட்டிய லாபத்திற்கு நன்றி நவில பயன்படுத்துகிறார்கள். வணிகர்கள் புது கணக்குத் தொடங்கவும் இதே நாள் உகந்ததாகக் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி வீடுகளிலும் லக்ஷ்மி பூஜையும், லக்ஷ்மி குபேர பூஜையும் செய்கின்றனர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்தப் போது இதே நாளில்தான் மகாலக்ஷ்மி தோன்றியதாக ஐதீகம். அதனால் தீபாவளியன்று லக்ஷ்மி பூஜை செய்தால் மகாலக்ஷ்மியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
செல்வத்தை அள்ளி வழங்குவதில் வஞ்சனைக் காட்டாதவர் மகாலக்ஷ்மியின் சகோதரனாகக் கருதப்படும் குபேரர். அவரை வழிப்பட உகந்த சமயம் அக்டோபர் 15லிருந்து நவம்பர் 15லிருந்து வரை (ஐப்பசி மாதம்). இப்பூஜை செய்ய குபேரர் படம் மட்டும் குபேர யந்திரம் வைத்து வழிப்பட வேண்டும். பூஜை செய்யும் போது வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்வது இன்னும் விசேஷம்.
ஸ்கந்த சஷ்டி சூரசம்ஹாரம்: முருகப் பெருமான் அசுரன் சூரபத்மனை வதம் செய்த தினம்தான் சூரசம்ஹாரம். வருடந்தோறும் ஐப்பசி திங்கள் தீபாவளிக்கு மறுநாள் பிரதமை திதியில் ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்கும்.
முருகன் சூரபத்மனுடன் போரிட்ட ஆறு நாளும் ஸ்கந்த சஷ்டி விரதம் அனுசரித்து விட்டு அசுரனை வதம் செய்த தினத்தை சூரசம்ஹாரத் திருநாளாகக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வர்.
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் இந்த ஆறு நாளும் ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு விரதமிருப்பர். முடியாதவர்கள் சூரசம்ஹாரமன்று மட்டும் விரதமிருப்பர்.
Want to write for Maniyosai?
Download our android app




