துளசி விவாகம் (உத்வான துவாதசி): கார்த்திகை மாதம் வளர்பிறை 11ம் நாள் வருவது துளசி விவாகம். இந்துக்கள் துளசியை (செடி) தெய்வமாகப் போற்றுகின்றனர். துளசிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் திருமணம் நடக்கும் நாள்தான் துளசி விவாகம். மத்வ மதத்தினர் உத்வான துவாதசி என்கின்றனர்.
துளசி, மகாவிஷ்ணுவிற்கு இரண்டு சுவாரஸ்யமான கதைகளும் இருக்கிறது. அதில் ஒரு கதையில் துளசி மகாலட்சுமியின் தங்கை. துளசிக்கோ மகாவிஷ்ணு மீது பிரியம். ஆனால் மகாலட்சுமிக்கு ஏற்கெனவே மகாவிஷ்ணுவுடன் திருமணம் நடந்துவிட்டது. தங்கையே தனக்கு பாதகமான எண்ணங்களுடன் வலம் வருவதைக் கண்டு வெகுண்டெழும் மகாலட்சுமி செடியாக மாறுமாறு தங்கைக்கு சாபமிடுகிறாள்.
சாபத்தினால் துளசி செடியாக மாறினாலும் அவளது அன்பை ஏற்கும் மகாவிஷ்ணு தான் சாலிகிராம கல்லாக இருக்கும்போது துளசியை தன்னுடனே இருக்குமாறு செய்தார். அதனால்தான் இன்றும் நாம் வீட்டில் சாலிகிராமம் வைத்து வழிப்படும்போது கூடவே துளசி இலைகளும் வைத்து வழிப்படுகிறோம்.
இன்னொரு கதையில் துளசி ஜலந்தர் எனும் அரக்கனின் மனைவியாக இருக்கிறாள். இருப்பினும் அவள் விஷ்ணுவின் பரம பக்தை. அவளது பக்தியும், பதிவிரதைத்தனமும் ஜலந்தர் பல கொடுமைகள் செய்து வந்தாலும் யாரும் அவனை அழித்துவிட முடியாதப்படி காக்கிறது. அழிக்கும் கடவுளான சிவப்பெருமானால் கூட அவனை ஒன்றும் செய்ய முடிவதில்லை. அதனால் அவர் கடைசியில் மகாவிஷ்ணுவிடமே யோசனை கேட்கிறார்.
வில்லாதி வில்லனாகிய மகாவிஷ்ணுவோ வில்லனுக்கு வில்லனாக சிந்தித்து திருவிளையாடல் புரிகிறார். அதனால் அவர் அவள் கணவன் ஜலந்தரின் உருவம் கொண்டு வந்து அவளுடன் உறவுக் கொள்கிறார். அதனால் அவளது புனிதத்தன்மை பாதிக்கப்பட்டதால் ஜலந்தர் கொல்லப்படுகிறான். இதை அறிய வரும் துளசி மிகுந்த கோபம் கொண்டு கரிய நிற கல்லாக மாறுமாறும் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து அவர் மனவேதனை அடைவாரென்றும் மகாவிஷ்ணுவுக்கு சாபமிடுகிறாள். பிறகு ஜலந்தருடன் அவளும் உடன்கட்டை ஏறி தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.
அவளிடம் சாபம் பெறும் விஷ்ணுவோ சாலிகிராமக் கல்லாக மாறுகிறார். கூடவே தன் மீது பக்தி கொண்டிருந்த துளசியை அடுத்தப் பிறவியில் செடியாகப் பிறக்க வைத்து கார்த்திகை மாதம் வளர்பிறை 11ம் நாள் பிரபோதினி ஏகாதசியில் அவளை மணமுடிக்கிறார்.
இப்பண்டிகை ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து வரும் வளர்பிறையில் துவாதசியன்று வரும். இந்நாளில் துளசிக்கும் மகாகவிஷ்ணுவுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடத்தி வைக்கிறோம். வீடுகளில் துளசி பிருந்தாவனம் வைத்திருப்பவர்கள் அதற்கு அலங்காரம் செய்து பூச்சூட்டி மஞ்சள் குங்குமம் வைத்து மாங்கல்யம் அணிவித்து பூஜை செய்வர். பாயாசம் செய்தும் நைவேத்தியம் செய்வர்,
கார்த்திகை தீபம்: இது கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கொண்டாடப்படுகிறது. இது திருவண்ணாமலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒருமுறை பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் உயர்ந்தவர் என போட்டி எழுகிறது. அப்பொழுது சிவப்பெருமான் தனது தலை எது கால் எது என கண்டுப்பிடிக்குமாறு இருவரிடமும் கூறுகிறார். ஆனால் அவ்விருவருமே அதில் தோற்றுவிடுகின்றனர். அப்பொழுது அவர்களுக்கு தீபஜோதியாய் சிவபெருமான் காட்சியளித்த இடம் திருவண்ணாமலை என்பதால் அண்ணாமலை தீபம் என்றே இதை அழைகிறோம்.
இதே நாளில் பார்வதி தேவி ஆறு குழந்தைகளாக இருக்கும் முருகப்பெருமானை ஒரே உருவமாக மாற்றி ஆறுமுகத்தானை உருவாக்கியதால் கார்த்திகை தீபத் திருநாள் முருகன் கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீடுகள் தோறும் அகல்விளக்குகள் ஏற்றி வைத்து கொண்டாடுகின்றனர். கோயில்களில் ஜோதி ஸ்வரூபமாய் இருக்கும் இருக்கும் சிவனைக் குறிப்பிடும் வகையில் சொக்கப்பனைக் கொளுத்தி வழிப்படுகின்றனர்.
Want to write for Maniyosai?
Download our android app



