வட இந்தியா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய இடங்களில் மகர சங்கராந்தி பண்டிகை, தமிழகத்தில் பொங்கல் என கொண்டாடப் படுகிறது. பொங்கல் என்ற சொல்லை சொல்லும் போதே அதன் அர்த்தம் நமக்கு புரிந்து விடும். பொங்கல் என்றால் பொங்குதல் என பொருள். அறுவடை திருநாளாக கொண்டாடப் படும் பொங்கல் திருநாளன்று மண் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழக்கம்.
பொங்கல் பண்டிகை கொண்டாடும் மரபு எப்பொழுது, எப்படி தொடங்கியது என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகை, புதியீடு என்ற பெயரில் கொண்டாடப் பட்டது என்பதற்கு சான்றாக சில கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. திருமணமாகாத பெண்கள், விஷ்ணு பகவானை பொங்கல் திருநாளன்று விரதம் இருந்து வழிப்பட்டதாக சங்க இலக்கிய நூலான பரிப்பாடல் கூறுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகி பண்டிகை கொண்டாடப் படுகிறது. இந்நாளில், வீட்டில் தேவையில்லாத பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கு இணங்க, தேவையில்லாத பழைய குணங்களை ஒழித்து, புது வாழ்க்கையை துவக்க வேண்டும் என்பதன் குறியீடாகவே போகி பண்டிகை கொண்டாடப் படுகிறது.
தை பொங்கல்:
மகர சங்கராந்தி இந்தியாவின் பல பகுதிகளில் இந்து மத பண்டிகையாகவே கருதப் பட்டாலும், தமிழகத்தை பொருத்த வரை ஜாதி, மத, இன பாகுபாடின்றி அனைவராலும் கொண்டாடப் படுகிறது. வீட்டுக்கு வெளியே வண்ண கோலமிட்டு, வீடுகளுக்கு வெளியே வாழை கன்று நட்டு, புது மண் பானையில் பொங்கலிட்டு, பொங்கல் பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' என உற்சாகம் ததும்ப கூச்சலிட்டு, ஆண்டின் முதல் அறுவடையில் விளைந்த தானியங்களை சூரியனுக்கு படைக்கும் மரபு இன்றும் தமிழக கிராமங்களில் உள்ளது. சென்னை போன்ற நகரங்களை பொருத்த வரை, குக்கரில்தான் பொங்கல்!
பொங்கலன்று மதியம் ஆதவனுக்கு படைத்த சர்க்கரை பொங்கலை வீட்டில் இருக்கும் அனைவரும் உண்டு மகிழ்வர். கூடவே, வடை, பாயாசம் போன்ற உணவு வகைகளும் வீடுகளில் சமைக்கப் படும். மதியம் சாப்பிடும் வரை இடையிடையே நொறுக்குத் தீனி கரும்பு!
சித்திரை முதல் நாளன்று தொன்று தொட்டு கொண்டாடப் பட்டு வந்த தமிழ் புத்தாண்டு தினத்தை, தை முதல் நாளுக்கு மாற்றியுள்ளது தற்போது நடந்து வரும் கலைஞர் அரசு. இருந்தாலும், மக்கள் சித்திரை முதல் நாளைதான் இன்னமும் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.
மாட்டுப் பொங்கல்:
நம் தொழில் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் காரணமானவர்கள் யாராக இருந்தாலும்; அது விலங்காகவே இருந்தாலும், அதற்கு நன்றி செலுத்தும் பண்பு தமிழர்களுக்கு உண்டு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, மாட்டுப் பொங்கல். பால் மற்றும் அதனால் தயாரிக்கப் படும் பொருட்கள் நம் கிராமங்களின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. விவசாயம் என எடுத்துக் கொண்டால், ஏழ் உழுவதற்கு மாடு பயன் படுகிறது; மாட்டின் சாணம் உரமாக பயன் படுகிறது. ஆண்டுதோறும் நன்மைகள் புரியும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளே மாட்டுப் பொங்கல்.
இந்நாளில், மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கழுத்தில் மாலையிட்டு, நெற்றியில் திலகமிட்டு, வயிறார உணவளித்து தன் நன்றியை தெரிவிப்பது மரபு.
நம்மை கிண்டலடிக்க யாராவது 'ஹேப்பி மாட்டுப் பொங்கல்' என சொன்னாலும், நாம் கோபப் பட தேவையில்லை; மாறாக பெருமையே அடையலாம்!
மாட்டுப் பொங்கல் தினத்தன்று தென் தமிழகத்தில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெறும்.
காணும் பொங்கல்:
மாட்டுப் பொங்கல் தினத்தில், காணும் பொங்கலும் கொண்டாடப் படுகிறது. முதலில் விவசாயத்துக்கு ஆதாரமாக திகழும் ஆதவனுக்கு நன்ரி செலுத்தியாகிவிட்டது. விவசாயிகளின் உற்ற நண்பனாக கருதப் படும் மாடுகளுக்கும் நன்றி செலுத்தியாகி விட்டது. அறுவடைக்கு துணை புரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? நண்பர்கள், உறவினர்களை அவர்கள் இல்லங்களுக்கு சென்று காணுவதால் இந்நாள் காணும் பொங்கல் என அழைக்கப் படுவதாக கூறுகின்றனர்.
இந்நாளில், திருமணமான சகோதரிகளுக்கு, சகோதரர்கள் சீர் செய்யும் வழக்கம் உண்டு.
சென்னையை பொருத்த வரை, காணும் பொங்கலைக் கொண்டாட மக்கள் பெரும் திரளாக கடற்கரை பகுதிகளுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
தைப் பூசம்:
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தை பூசம். தை மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்தையே தை பூசமாக கொண்டாடி வருகின்றனர்.
அசுரனான சூரபத்மனுக்கும், தேவர்களுக்கும் இடையே தர்ம யுத்தம் நடந்தது. சூரபத்மனின் வலிமைக்கு எதிரே தேவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. பல முறை தோல்வியை தழுவிய பின், சூரபத்மனை வதம் செய்யும் அளவு ஆற்றல் மிகுந்த ஒரு படை தலைவனை தங்களுக்கு அளிக்குமாறு சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர் தேவர்கள்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், கந்த கடவுளை சூரபத்மனை வதம் செய்ய அனுப்பினார். அசுரன் சூரபத்மனை வதம் செய்ய வேலாயுதத்தை முருகப் பெருமானுக்கு, தாய் பார்வதி அளித்த நாளையே தைப் பூசம் என தமிழ் இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர்.
48 நாட்கள் விரதம் இருந்து, தைப் பூசத்தன்று காவடி எடுத்து பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற புகழ் பெற்ற முருகன் ஆலயங்களுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம்.
Want to write for Maniyosai?
Download our android app






