’என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை. வித்யாவா அது? கோயில் பிரகாரத்தில் கணவன், மாமனார், மாமியார், நாத்தனார் என குடும்பத்தோடு அமர்ந்து சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறாள். அட! உலகில் அதிசயங்கள் பல நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்....’
நானும் வித்யாவும் ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தவர்கள். சற்றே நெருங்கிய தோழிகள். வித்யா நன்றாகப் படிப்பாள். விளையாட்டிலும் அவள்தான் ஃபர்ஸ்ட். சில பேச்சுப் போட்டிகளில் கூட கலந்துக் கொண்டு முதல் பரிசு வாங்கியிருக்கிறாள். எல்லாவற்றிலும் தான் தான் முதலாவதாக இருக்கவேண்டும் என்ற பிடிவாதம். படிப்பு முடிந்த கையோடு அவளது திருமணம் நடந்தது. எனக்கு மும்பையில் வேலைக் கிடைத்தது. போன வருடம் விடுமுறைக்கு வந்தப்போது, அவளைப் பார்க்க அவள் வீட்டிற்கு சென்றேன்.
‘யாரு? வித்யா ஃப்ரெண்டா?...... ம்...ம்..... அவ எங்க இங்க இருக்கா? அவ அம்மா வீட்டுக்கு ஓடிட்டா.... போ....போ... போய் அங்கேயே போய் பாத்துக்க...’ எனக்கூறி அவள் மாமியார் முகத்தில் அறைந்தவாறு கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
‘என்னடி ஆச்சு...... ஏன் அம்மா வீட்டுக்கு வந்துட்ட? அங்க உன்னை ஏதாவது கொடுமைப்படுத்தினாங்களா? வரதட்சண பிராப்ளமா இல்ல அவருக்கு வேற ஏதாவது கெட்ட பழக்கம்....’ என்று இழுத்தேன் மறுநாள் வித்யாவின் அம்மா வீட்டிற்கே சென்று.
‘வரதட்சண கொடுமைல்லாம் இல்லடி. அவருக்கும் சிகரெட், குடின்னு ஒரு கெட்டப் பழக்கமும் கிடையாது. ஆனா சரியான அம்மா பிள்ளை. எதுக்கெடுத்தாலும் அம்மாவக் கேளு... அம்மாவக் கேளுன்னு சொல்றாங்க. அங்கே எனக்குன்னு ஒரு உரிமையும் கிடையாது. நா சும்மா அந்த வீட்ல ஒப்புக்கு பொம்ம மாதிரி இருக்க முடியாது. சரிதான் போய்யா..... நீயாச்சு.... உங்கம்மாவாச்சு...... குட் பை ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். டைவர்ஸ் வாங்கறதுக்கு வக்கீல பாத்து பேசியிருக்கேன்.’ என்று அவள் சொன்னப்போது அவளுக்கு என்ன அறிவுரை கூறுவது என்று தெரியாமல் விடைப்பெற்று வந்தேன். இந்நேரம் அவளுக்கு டைவர்ஸ் கிடைத்திருக்கும் என்று நினைத்திருந்தால்......... அவளோ மீண்டும் புகுந்த வீட்டினரோடு இத்தனை மகிழ்ச்சியாக..............
‘யாரு? வித்யா ஃப்ரெண்டா?..... வாம்மா. உன்ன ஒரே ஒரு தடவைப் பார்த்தது. எங்க மும்பைல வேலைப் பாக்குறியா?..... சரி, வித்யாவோட பேசிட்டு இரு உங்க ரெண்டு பேருக்கும் டீ போட்டு கொண்டு வர்றேன்............’ அன்று எரிந்து விழுந்த அதே மாமியார் இன்று இப்படி தலைகீழாய்..........
‘எப்படிடீ? என்ன மாயம் செஞ்ச? உன் வீட்டுக்காரர எப்படி உன் கைக்குள்ள போட்டுக்கிட்ட.........?’ ஆர்வம் தாங்காமல் கேள்வி மேல் கேள்வியாய் அடுக்கினேன்.
’இல்ல நீ தப்பா சொல்ற. நா என் வீட்டுக்காரர கைக்குள்ள போட்டுக்கல..... என் மாமியாரத்தான் என் கைக்குள்ள போட்டுக்கிட்டேன். இப்ப எல்லாம் சரியாய்டுச்சு...’
‘என்னது மாமியார கைக்குள்ள போட்டுக்கிட்டியா....?’
’ஆமா. விளக்கமா சொல்றேன் கேளு. நா டைவர்ஸுக்காக வக்கீலப் பார்த்து பேசிட்டு வந்தப்ப ஒருநாள் எங்கப்பா எங்கிட்ட பேசிட்டு இருந்தாரு. அப்ப என் பிடிவாத குணத்த பத்தி பேச்சு வந்தது. காலேஜ் படிக்கிறப்போ ஒரு தடவை ஓவியப்போட்டியில தோத்து போயிட்டேன். உடனே பிடிவாதமா அத ஒரு சவாலா ஏத்துக்கிட்டு பிராக்டிஸ் பண்ணி அடுத்த தடவ ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கினேன்ல. அதே மாதிரி வாழ்க்கையயும் ஏன் ஒரு சவாலா எடுத்துக்க கூடாதுன்னு கேட்டாங்க. எல்லாரும் பொண்ணுக்கு பிடிவாத குணம் இருக்கக்கூடாதும்பாங்க. ஆனா எங்கப்பா பிடிவாதம் இருக்கனும். ஆனா அத சும்மா சினிமாவுக்கு கூப்பிட்டு போகல, சேலை வாங்கித் தரல மாதிரியான அல்ப விஷயங்களுக்கு யூஸ் பண்ணாம இத மாதிரி நல்ல விஷயங்களுக்கு பாசிட்டிவ்வா யூஸ் பண்ண சொல்லி சொன்னாங்க. நானும் அவங்க சொன்னப்படியே செஞ்சேன். என் அணுகுமுறையால முதல்ல என் மாமியார என் கைக்குள்ள போட்டுக்கிட்டேன். அவங்களுக்கு எம்மேல நம்பிக்கை வந்ததும் குடும்ப பொறுப்ப என் கையில் கொடுத்துட்டாங்க. அப்புறமென்ன.... அம்மாவே என் பக்கம் சாஞ்சதும் பையனுக்கு என்ன ஆச்சு. இப்ப அவரும்............’ அவள் வாக்கியத்தை முடிக்காவிட்டாலும் அவளது வெட்கம் முடித்து வைத்தது.
’பெண்களே நிறைய பிடிவாதம் பிடியுங்கள்; வாழ்கையில் முன்னேற.......’சொல்லிவிட்டு கிளம்பினேன்.
Want to write for Maniyosai?
Download our android app




