தென்னங் கீற்றுகள் தென்றலில் ஆடிட
தெரிந்தது நிலவின் தெவிட்டா அழகு!
இன்னும் கொஞ்சம் இன்னமும் கொஞ்சம்
எழிலைப் பருக விழைந்தது நெஞ்சம்!
முன்னும் பின்னும் தென்னை அசைய
முகிலும் துகிலாய் முகர்ந்திட அவளை
என்னுள் மிகுந்தது ஏக்கமும் தாக்கமும்
ஏங்கினேன் இரவெல்லாம் காண்கிலேன் தூக்கமும்!
திரையும் மறைவும் தானவள் அழகோ!
இரகசியம் என்பதே மறைபொருள் தானோ!
மறைத்திட மறைத்திடத் தானே பெண்ணெழில்!
விரித்திட விரித்திட வெட்கக் கேடுதான்!
ஒரு துளித் தேனே நாவினில் இனிக்கும்;
ஒரு படித் தேனை பருகவும் கூடுமோ!
அருங்கனிக் கூட்டும் அமிர்தச் சுவையும்
ஒரு படித் தாண்டினால் திரியுமே நஞ்சாய்!
விளம்பரப் பெண்களும் திரைப்படப் பெண்களும்
வெட்கம் என்பதை விற்றே விட்டனர்!
அளவுடன் அழகைக் காண்பதே அழகு.
இலைமறைக் காய்மறை என்றுமே அழகு!
வெளிச்சம் போடும் பெண்கள் சற்றே
வெட்கம் என்பதை பழகிட வேண்டும்!
அளவுடன் காட்டி வளமுடன் வாழ்வதே
நிலைக்கும் என்பதை நினைத்திட வேண்டும்!!
-கவிஞர் ஆட்கொண்டேசன்
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|


