சட்டென்று தொடர்வண்டி நடுவழியில் நிற்க
சன்னலின் வெளியே எட்டிப் பார்த்தேன்;
சுட்டெரிக்கும் வெய்யில்,
சோர்ந்து நின்ற மரக் கிளைகள்!
சுற்றம் நாடும் காக்கைகளும்,
சுறுசுறுப்பு குருவிகளும்
முற்றும் களைத்து முடங்கிப் போன நேரம்.
சட்டைக் காலரை உதறிய படியே
வெறித்து பார்த்தேன் வெய்யிலை!
வறண்டிருந்த மைதானம்;
பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன்
தொப்பித்தலையுடன் ஒரு பந்தை வீச
பட்டம் படிக்கும் மாணவன் ஒருவன்
மட்டையை சுழற்ற,
எட்டையே எட்டாத சுட்டிச்சிறுவன்
சட்டெனக் குனிந்து பந்தைத் தடுக்க;
'எரிக்கட்டும் வெய்யில்; பொருட்டல்ல' என்று
கிரிக்கெட்டு ஆட்டத்தில் கிறங்கி நின்ற சிறுவர்கள்!
குலமென்ன கோத்திரமென்ன ஓரளவும் தெரியாது.
வயதென்ன வசதியென்ன வேற்றுமைகள் கிடையாது.
ஆற்றங்கரை ஓரத்திலும், அரண்மனை கூடத்திலும்
வீற்றிருக்கும் விளையாட்டுப் பிள்ளையார் போல்
சிறுவர் முதல் பெரியோர் வரை யாவரையும்
கிரிக்கெட்டு கவர்ந்து நிற்கும் பெருமையினை அசை போட்டேன்!
'சல்யூட்' அடித்த காவலரிடம்
'சேர்மேன்' நின்று 'ஸ்கோர்' கேட்க
சந்தோஷத்தில் சிறகடித்த காவலரை நானறிவேன்!
பகலிரவு ஆட்டங்கள், ஒரு நாளின் ஆட்டங்கள்
வகைவகையாம் மாற்றங்கள், திகட்டாத கிரிக்கெட்டிலே!
மாறாத இளமையுடன் மெருகேறிய கிரிக்கெட்டை
பாராத கண்களில்லை, பேசாத வாய்களில்லை!!
நாட்டுப் பற்றையும், காட்டி நிற்கும்
நட்புணர்வையும் போற்ற வைக்கும்
சீரோடும் சிறப்போடும் கிரிக்கெட்டும் வாழட்டும்;
தீராத வேற்றுமைகள் கிரிக்கெட்டால் தீரட்டும்!
சட்டென்று தொடர்வண்டி சிலிர்ப்போடு நகர
சன்னலுக்கு நன்றி சொல்லி தொடர்ந்தேன் என் பயணத்தை!!
கவிஞர் ஆட்கொண்டேசன்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





