
வீரம் மிகுந்த தேசத்தை - நாம்
சோரம் போக விடுவோமா! - காஷ்மீரம்
எங்கள் தேசம்தான் - அதை
யாரும் சிறையிட விடுவோமா!!
நாட்டை மீட்டவர் ஒரு காந்தி - அதில்
பூட்டைப் போட்டவர் மறுகாந்தி! - வெட்கக்
கேட்டை யாரிடம் சொல்லுவது - அவர்
போட்டக் கோட்டிலா செல்லுவது!!
வந்தே மாதரம் என்றிடுவோம் - யார்
முந்தானையையும் நாம்பிடியோம்! - பெரும்
தந்திரக் காரரை நாமறிவோம் - நாம்
இந்தியர் என்பதை தான் மறவோம்!!
நாட்டின் மகுடம் காஷ்மீரம் - அது
ஏட்டில் மட்டுமா நம் தேசம்! - அது
மூட்டப் பனியில் உறைந்திட்டால் - நாம்
சூட்டைக் காட்டி மீட்டிடுவோம்!!
எல்லை மீறுதல் தான்குற்றம் - நம்
எல்லை வரையில் நம் கொற்றம் - அட
எல்லா மக்களும் நம் சுற்றம் - அது
இல்லை என்றால் விடமாட்டோம்!!
கண்களை விற்று சித்திரமா - நம்
மக்களை விற்று மணிமுடியா!
தங்குத் தடைகளை எதிர்கொள்வோம் - நாம்
எங்கணும் நம் கொடி ஏற்றிடுவோம்!!
பட்டாய் கொடியை பறக்கவிட்டு - உடன்
மிட்டாய் களையும் தின்றுவிட்டு
விட்டால் போதும் என்றேதான் - நாம்
சிட்டாய் பறப்பது தான்முறையா!!
தாயின் மணிக்கொடி என்றிட்டால் - அது
தொப்புள் கொடிக்கு நிகராமே - ஒரு
கையில் பிடித்த மணிக்கொடியை - நம்
குமரன் உயிராய் மதித்தானே!!
அமைதி அமைதி என்றவர்கள் மிக
அஞ்சி அஞ்சிப் பேசுகிறார்
அமைதி வேண்டும் என்பதனால் ஒரு
அறைக்குள் மணிக்கொடி ஏற்றுவதா!!
இதயம் இணைத்திடும் பாதைகளில் - ஒரு
இம்மிக் கல்லும் கூடாது - சரி
அதையும் கொஞ்சம் அனுமதித்தால் - நம்
இதயம் ஒருகணம் தாங்காது!!
- கவிஞர் ஆட்கொண்டேசன்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





