கள்ளச் சாராயத்தை ஒழிக்கவே சத்தியமாய்
கடைகளைத் திறந்தார்கள்!
வள்ளுவரின் விசிறிகள் வசதியாய்
‘கள்ளுண்ணாமை’யை மறந்தார்கள்.
பணம் படைத்தவர்களுக்கு மட்டும் பர்மிட்டா?
பாவம்! ஏழைகள் என்ன செய்தார்கள்
பாவம் எனவெல்லாம் சமதர்மம் பேசினார்கள்
மூதறிஞரை முக்காடிடச் செய்தார்கள்.
கடைகளைத் திறந்தாயிற்று ஒருவழியாய்
கடைமடைகள் வரை தண்ணீர் விரைந்தாயிற்று.
அடிஉதை வாங்கிடத் தாய்குலம் பழகியாயிற்று.
அடுப்பில் உறங்குவது பூனைகளுக்கு எளிதாயிற்று;
குடிபோதைத் தெளிந்தது போல் திடீரென கடைகளை
மூடினார்கள்!
அதையிதைக் காரணம் காட்டி மறுபடியும் கடைகளைத்
தேடினார்கள்!
பல குடிகளைக் கெடுத்து வந்தப் பாவப்பணம்
சிலபலத் தனியாருக்கு போகலாமா
பொறுப்போடு சிந்தித்தத் தலைவர்களை
பொறுப்பின்றி மறந்துநாம் போகலாமா!
அரசுக் கடைகள் வந்துவிட்டன
அரசின் கருவூலங்கள் நிறைந்துவிட்டன.
மீன் விற்றக்காசு நாறுவதில்லை
நாய் விற்றக்காசு குரைப்பதுமில்லை!
அந்நாளைய காந்தியும் பின்னாளைய
தென்னாட்டு காந்தியும் பிழைத்து வரவா போகிறார்கள்!
அவர்கள்தான் பிழைக்கத் தெரியாமல் போய்விட்டார்கள்!
மூதறிஞரும், பேரறிஞரும், தேசப்பிதாவும்
ஒருவேளைப் பிழைத்து வந்தால்,
தமிழ்நாட்டில் பிறந்து அரசு மதுக்கடை வாசல்களில்
ஆடை நழுவியதுகூடத் தெரியாமல்
வீரவசனம் பேசிக் கொண்டிருப்பார்களோ என்னவோ!
கவிஞர் ஆட்கொண்டேசன்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





