நியூயார்க்: கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சீர்குலைந்து போயிருக்கும் ஹைத்தி நாட்டுக்கு இந்தியா 5 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த நிதி ஹைத்தி நாட்டின் ஐநா பிரதிநிதி லியோ மெரோர்ஸிடம் வழங்கப் பட்டுள்ளது.
அமெரிக்கா அருகில் இருக்கும் பின் தங்கிய நாடு ஹைத்தி. இங்கு பிரதான தொழிலே போதை மருந்து கடத்துவதுதான். காரணம், ஏழ்மை. இந்நிலையில், ஹைத்தி தீவில் கடந்த ஜனவரி மாதம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் லட்சக் கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் கை, கால் போன்ற உடல் உறுப்புகளை இழந்து, பசி மற்றும் தாகத்துடன் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹைத்தி தீவுக்கு இந்தியா 5 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக ஹைத்தியில் சீரமைப்பு பணிகளை இந்தியா மேற்கொள்ள இருக்கிறது.
முன்னதாக, ஹைத்தி தீவுகளுக்கு இந்தியா எவ்வாறெல்லாம் உதவலாம் என இரு நாட்டு ஐநா பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து ஐநா சபைக்கான இந்திய பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “ஹைத்திக்கு உதவுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. விரைவில், பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஜெய்பூர் செயற்கை கால்கள் வழங்கப் படவுள்ளது. நிலநடுக்கத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வீடுகளும் கட்டி தரப் போகிறோம்.” என்றார்.
இது குறித்து ஹைத்தி நாட்டு ஐநா பிரதிநிதி கூறுகையில், “இந்திய அரசின் தாராள உதவிக்கு என்றும் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.” என்றார்.
Want to write for Maniyosai?


