புதுடெல்லி: தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லாக் குறித்து குடியரசுத் தலைவருக்கு முன்னாள் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி எழுதிய புகார் கடிதத்தில் எழுதியிருந்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. நவீன் சாவ்லா தேர்தல் கமிஷனராக இருந்தப்போது அவரைப் பணி நீக்கம் செய்யக்கோரி அப்போதைய தலைமைத் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தை வெளியிட நவீன் சாவ்லா எதிர்ப்பு தெரிவித்ததால் ஜனாதிபதி மாளிகை கடிதத்தை வெளியிட மறுத்துவிட்டது. ஆனால் இப்பொழுது அதை சட்ட அமைச்சகம் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
93 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் நவீன் சாவ்லா நடுநிலையாக இல்லையென்றும், அவர் ஒரு அரசியல் கட்சிக்கு மிகவும் ஆதரவாக செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தான் ஆதரவாக இருப்பது மட்டுமின்றி மற்றொரு தேர்தல் கமிஷனர் குரேஷியையும் அந்தக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட செய்யப் பார்க்கிறார். தேர்தல் கமிஷனராக இருக்கும்போதே நவீன் சாவ்லா தன் குடும்பத்தினருடன் இணைந்து நடத்தும் அறக்கட்டளைக்கு அக்கட்சியிடம் இருந்து நன்கொடையும் பெற்று வருகிறார். இதுக்குறித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி மற்றும் 179 எம்.பி.,க்களும் தன்னிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் நவீன் சாவ்லாவைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
| < Prev | Next > |
|---|







