சென்னை: போலி சாமியார் நித்தியானந்தாவின் நீலப் படத்தை தொடர்ந்து ஒளிப்பரப்பி வரும் ஊடகங்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 4) வெளியிட்டுள்ள அறிக்கை:
குற்றங்கள் நடைபெறுவதைவிட அந்தக் குற்றங்கள் எப்படி நடைபெற்றன, எங்கே யாரால் நடத்தப்பட்டன,எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதைச் சான்றாகக் காட்ட,வெளியிடப்படுகின்ற படங்களாயினும், செய்திகளாயினும் அவை அளவுக்கு மீறும்போது அவற்றை தொலைக்காட்சியிலோ பத்திரிகைகளிலோ படங்களாகப் பார்த்திடும் இளையோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும், அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதையும் எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் எண்ணிப் பார்த்து நடத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்வது ஓர் அரசின் கடமையாகும்.
ஒரு தீமையை விவரிப்பதன் மூலம், அது மற்றொரு பெரிய தீமைக்கு வித்திடுவதாக ஆகக்கூடாது.
அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும், அரசின் காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டுமேயல்லாமல், தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது.
''அருவருக்கத்தக்க செய்திகளை மற்றும் படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம் தானே'' என்று சில ஏடுகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் போதையேற்றும் கள்ளை அருந்தியவனை, மேலும் கள்ளையூற்றி திருத்த முடியுமா?.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
நித்தியானந்தாவின் நீலப் படத்தை சன் டி.வி. ஒளிப்பரப்பியது நினைவிருக்கலாம்.
Want to write for Maniyosai?



:?