புதுதில்லி: எரிவாயு விலை ஏற்றம் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மேலும், டீசல் விலை தற்போது உயர்ந்திருப்பதை விட மேலும் உயரும் என அவர் தெரிவித்தார்.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்று விட்டு நாடு திரும்பும் வழியில் விமானத்தில் மன்மோகன் சிங், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தற்போதைய சூழ்நிலையில் மிக அவசியமான ஒன்றாகும். அரசு வழங்கி வரும் மானியத் தொகை மிக அதிகமாக இருப்பதால், எரிவாயு உருளை மற்றும் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப் பட்டுள்ளது.
பெட்ரோல் விலையை இனி மத்திய அரசு நிர்ணயிக்காது. டீசல் விலையை கட்டுப்படுத்துவதையும் விரையில் மத்திய அரசு கை விட்டு விடும். இதனால், டீசல் விலை மேலும் ரூ.1.50 வரை உயரும். மிக கடுமையான பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள அரசு தயாராகி வருகிறது.
பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி விலை அதிகரித்திருப்பதாலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப் பட்டுள்ளது.
அடுத்து என்ன பொருளாதார புரட்சி செய்யப் போகிறோம் என்பதை இப்போதே சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்.
இந்த விலை ஏற்றம் பொதுமக்களால் சமாளிக்க கூடிய ஒன்றே.”
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?


