புவனேஸ்வர்: மாவோயிஸ்டு இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஆசாத், ஆந்திர மாநிலத்தில் காவல் துறையினரின் என்கவுண்டரில் அண்மையில் கொல்லப் பட்டதைக் கண்டித்து, மாவோயிஸ்டு இயக்கம் அழைப்பு விடுத்துள்ள 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தால், ஒரிஸா, ஜார்கண்ட், பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
மாவோயிஸ்டு இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஆசாத் என்பவரும், மற்றொரு மாவோயிஸ்டு போராளியும் அண்மையில் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இதனைக் கண்டிக்கும் விதத்தில் ஒரிஸா, ஜார்கண்ட், பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஜூலை 6ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி (அதாவது, ஜூலை 7) 48 மணி நேரம் முழு அடைப்பு போராட்டத்திற்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்தனர். பந்த்தின் முதல் நாளான நேற்று (ஜூலை 7) 5 மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
ஒரிஸாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த கோராபுத், ராயகாடா, கஜபதி, மல்காங்கிரி, சுந்தர்காத் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப் பட்டுள்ளன. ஒரிஸா மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை.
ராயகாடா பகுதியில் இருக்கும் சோதனை சாவடியில் விடிய விடிய வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்களை, மாவோஸ்டுகள் தாக்கக் கூடும் என்பதால், இந்த சர்ச்சைக்குரிய மாநிலங்கள் வழியே செல்லும் ரயில்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?


