சென்னை: மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு இன்று (ஆக.27) சென்னையில் தொடங்கியது. இந்த மாநாட்டை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் பேசியதாவது:
2006-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், கடந்த நான்கு ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி, வாக்குறுதியில் இடம் பெறாத பல புதிய திட்டங்களையும் உருவாக்கி தமிழக மக்களின் மனமார்ந்த பாராட்டுகளை இந்த அரசு தொடர்ந்து பெற்று வருகிறது. இந்தப் பணிகள் மேலும் தொடர வேண்டும். அதற்குரிய வகையில் இது வரை நிறைவேற்றப் பட்டுள்ள திட்டங்கள் மக்களுக்கு எந்தெந்த வகையில் பயன் அளிக்கின்றன, அவை, மேலும் பயனளித்திட எந்தெந்த வகையில் செயலாற்றிட வேண்டும், இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை எப்படி குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்றிட வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்வதற்கும், அதில் கள அனுபவங்களோடு நீங்கள் வழங்கும் ஆலோசனைகளைக் கேட்டு அறிவதற்கும் வாய்ப்பாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
தமிழ் செம்மொழி மாநாடு:
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம், எரிவாயு இணைப்புடன் அடுப்புகள் வழங்கும் திட்டம், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டம், வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம் என்பன போன்ற திட்டங்களையெல்லாம் மக்கள் பணியே மகேசன் பணி என்பதை கருத்தில் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறோம். கடந்த ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, கோவை மாநகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.
வண்ணத் தொலைக்காட்சி:
இந்தியத் துணைக் கண்டத்திலேயே அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியையும், குறைந்த விலையில் மளிகைப் பொருள்களையும் வழங்கி மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் பெட்டிகள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 35 லட்சத்து 86 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எல்லோர்க்கும் தொலைக் காட்சிப் பெட்டிகளை வழங்கி; வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலக்கை நிறைவேற்றிட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
குடிசைகள் இல்லா தமிழகம்:
தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லை எனும் நிலையை உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதிலும் உள்ள 21 லட்சம் குடிசைகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றிடும், 'கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தில், முதற்கட்டமாக இந்த நடப்பு நிதியாண்டில் 3 இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளது. முழுவதும் மாநில அரசின் நிதியில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளிலும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த மகத்தான திட்டத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மிகுந்த முன்னுரிமை அளித்து, முனைப்புடன் செயலாற்றி 3 லட்சம் கான்கிரீட் வீடுகளையும் 31.3.2011க்குள் கட்டி முடித்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்:
ஏழை எளிய மக்களுக்கு உயிர்காக்கும் உயர் சிகிச்சைகளை உடனடியாக அளித்திடும், 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' 23.7.2009 அன்று தொடங்கப்பட்டது. 19-8-2010 முடிய இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,33,60,439 குடும்பங்களில் இருந்து; 1,53,273 ஏழை மக்களுக்கு, 415.47 கோடி ரூபாய்ச் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளைச் செய்து சாதனை படைத்துள்ளது இந்த அரசு.
தமிழகம் முதலிடம்:
உணவு உற்பத்தி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தொழில் துறை, சிறுதொழில் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறோம். இவை காரணமாக, தமிழகத்தை மத்திய அரசு பாராட்டுகிறது. உச்சநீதிமன்றம் பாராட்டுகின்றது; அயல்நாட்டுப் பிரதிநிதிகள் பாராட்டுகிறார்கள்; அண்டை மாநில அரசுகள் பின்பற்றுகின்றன. இந்தப் பாராட்டுகளையெல்லாம் தொடர்ந்து நாம் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நம்முடைய பணியை மேற்கொள்ளத் திட்டமிடும் நிகழ்வாக இந்த மாநாடு அமைய வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்து, மாநாட்டை தொடங்கி வைக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
Want to write for Maniyosai?


