
சென்னை: இரு கால்களும் பாதிக்கப் பட்ட 100 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்க்கு பேட்டரியால் இயங்கும் இலவச மூன்று சக்கர வாகனங்கள், பார்வையற்ற 50 மாணவ, மாணவியர்க்கு இலவச குறுந்தகடு இயக்கிகள் (சிடி பிளேயர்) மற்றும் பாடங்கள் அடங்கிய குறுந்தகடுகள், கை,கால் பாதிக்கப்பட்ட 60 பேருக்கு இடைநிலை ஆசிரியருக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் கருணாநிதி இன்று (ஜூன் 10) வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மோட்டார் பொருத்தப் பட்ட மூன்று சக்கர வாகனங்கள் கோரி விண்ணப்பித்துக் காத்திருப்போர் பட்டியலிலுள்ள மாற்றுத் திறனாளி அனைவரும் பயன்பெறும் வகையில், 2009-10ம் ஆண்டிற்கு 1 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் பேட்டரியினால் இயங்கும் 761 மூன்று சக்கர வாகனங்கள் வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஏற்கனவே ஆணையிட்டுள்ளார்.
இதில் முத்ற்கட்டமாக, சென்னை, காஞ்சிப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வாகனங்களை முதல்வர் கருணாநிதி இன்று (ஜூன் 10) வழங்கினார்.
இதே போல, கடந்த 3 ஆண்டுகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்ற 124 மாணவ மாணவியர்க்கு, 3 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் பாடங்கள் அடங்கிய குறுந்தகடுகளும், குறுந்தகடு இயக்கிகளையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதன் முதற்கட்டமாக 50 பேருக்கு குறுந்தகடு இயக்கிகளையும், குறுந்தகடுகளையும் முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.
அதே போல, பூவிருந்தமல்லி அரசு பார்வையற்றோர்க்கான மேல்நிலை பள்ளி ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 60 மாற்றுத் திறனாளிகளுக்கு, இடைநிலை ஆசிரியருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் கருணாநிதி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இவ்வாறு தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?





