லால்கார்: வன்முறையை கைவிட்டு அரசுடன் பேச்சு நடத்த மாவோயிஸ்டுகள் முன் வர வேண்டும் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த மேற்கு மித்னாபூரில் பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்று பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:
’மாவோயிஸ்டுகள் வன்முரையை கை விட்டு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும். மேதா பாட்கர், அக்னி வேஷ் ஆகியோர் மாவோயிஸ்டுகளை அமைதி பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்த வேண்டும். மாவோயிஸ்டு தலைவர் ஆசாத், காவல் துறையினரால் கொல்லப் பட்டிருக்க கூடாது. வன்முறை மூலம் அமைதியை நிலைநாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.
அமைதிக்கான முதல் படியை இன்றே எடுத்து வைப்போம். எங்கு, எப்படி பேசலாம் என்பதை மாவோயிஸ்டுகளே முடிவு செய்யட்டும். காவல் துறையை சேர்ந்தவர் இறந்தாலோ, பத்திரிகையாளர் இறந்தாலோ, அரசியல்வாதி இறந்தாலோ அனைத்தும் ஒன்றுதான். மரணத்தை வைத்து அரசியல் நடத்த நான் விரும்பவில்லை.
மேற்குவங்க மாநிலத்தில், 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வந்தாலும் பழங்குடியின மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக பழங்குடியின மக்களுக்கு, ஆண்டுக்கு 12 நாட்கள் வேலையை மட்டுமே, மாநில அரசால் கொடுக்க முடிகிறது.
ஐக்கிய முக்கிய கூட்டணி அரசில் எங்களுக்கு (திரிணாமுல் காங்.) வெறும் 19 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். நாங்கள் சொல்வதையெல்லாம் மத்திய அரசு கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மாவோயிஸ்டுகள் விவகாரத்தில் நான் என்ன தவறு செய்தேன் என சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரே ஒரு சம்பவத்தை சொன்னாலும் நான் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன்.’ இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
மாவோயிஸ்டுகள், மம்தா பானர்ஜிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அண்மையில் கடிதம் எழுதினர் என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?





