பாட்னா: பீகாரில் மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்ற 4 போலிசாரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நக்சலைட்டுகளின் வெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. மத்திய அரசும் மாவோயிஸ்ட்டுகளும் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் எனக் கூறிக்கொண்டு மற்றவர்களை குறை கூறியவாறே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் கண்ணாமூச்சு ஆடி வருகின்றனர். இதில் அடிக்கடி போலிசாருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் துப்பாக்கி சண்டை நடப்பது வேறு சகஜமாகிவிட்டது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பீகார் மாநிலம் லக்சாராய் மாவட்டத்தில் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் நக்சல்களுக்கு துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 7 போலிசார் கொல்லப்பட 10 பேர் காயமுற்றனர். இதைத் தொடர்ந்து நக்சல்கள் சிறையில் இருக்கும் 8 நக்சல்களை விடுவிக்க 4 போலிசாரைப் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
அவர்களை விடுவிக்க பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை மாவோயிஸ்ட்டுகளுடன பேச்சுவார்த்தை நடத்துமாறு கடத்தப்பட்ட போலிசாரின் குடும்பத்தினர் வேண்டுக்கோள் விடுத்தனர். பீகாரும் அரசும் மாவோயிஸ்ட்களுடன் பேசி வருகின்றது. ஆனால் நேற்று (01/09/2010) மாலை 4 மணிக்குள் சிறையில் இருக்கும் 8 மாவோயிஸ்ட்டுகளையும் விடுதலை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் கடத்தி செல்லப்பட்ட போலீசார் கொல்லப்படுவர் என்று மாவோயிஸ்டுகள் விடுத்திருந்த கெடு முடிந்துவிட்ட நிலையில் அபய்யாதவ் எனும் போலீஸ்காரரை சுட்டுக் கொன்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் போலீஸ்தரப்பில் இது உறுதிசெய்யப்படவில்லை.
Want to write for Maniyosai?




