பாட்னா: மாவோயிஸ்ட்டுகள் கடத்தி வைத்துள்ள 3 போலீசாரை மீட்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து விவாதிக்க இன்று (04/09/2010) அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதன் முடிவில் பிணைக் கைதிகளாக இருக்கும் 3 போலீசாரை மீட்க மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அனைத்து கட்சிகளும் சம்மதித்தன. இம்முடிவை அறிவிக்கும்போது போலீசாரைத் துன்புறுத்த வேண்டாம் எனவும் முதல்வர் மாவோயிஸ்ட்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் 3 காவலர்களும் பத்திரமாக இருப்பதாகவும் அதற்கான ஆதாரத்தை விரைவில் அளிப்பதாகவும் மாவோயிஸ்ட்டுகளின் பேச்சாளர் அவினாஷ் தெரிவித்துள்ளார். அதனால் காலம் தாழ்த்தாமல் கடத்தப்பட்ட காவலர்களை மீட்க, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டு, அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே 4 போலீசார் கடத்தப்பட்டதற்கு மூலக்காரணமாக இருந்த மாவோயிஸ்ட்டுகளின் முக்கியப் புள்ளி பிரமோத் கைது செய்யப்பட்டுள்ளான்.
Want to write for Maniyosai?


