புதுதில்லி: 26 ஆண்டுகளுக்கு முன் போபாலில் நடந்த விஷ வாயு கசிவு சம்பவத்தில் 15000 பேர் இறந்தனர். லட்சக் கணக்கானோர் உடல்நிலை பாதிக்கப் பட்டு இன்று வரை அவதி பட்டு வருகின்றனர். இந்த கொடிய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், விஷ வாயு கசிவால் உடல்நிலை முற்றிலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், சிறிதளவு பாதிக்கப் பட்டவர்களுக்கு தலா 3 லட்ச ரூபாயும் வழங்கலாம் என இந்த சம்பவம் பற்றி ஆய்வு செய்ய பிரதமரால் நியமிக்கப் பட்ட அமைச்சர் குழு பரிந்துரை செய்துள்ளது.
உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமை தாங்கும் இந்த அமைச்சர் குழுவின் அறிக்கை பற்றி வரும் வெள்ளி கிழமை (ஜூன் 25) அமைச்சரவை கூடி விவாதிக்கும் என தெரிகிறது.
விஷ வாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சனை சட்டம் முன் கொண்டு வருவது பற்றியும் அமைச்சர் குழு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், சம்பவ இடத்தின் இருக்கும் விஷத் தன்மை கொண்ட பொருட்களை பத்திரமாக அதே இடத்தில் புதைப்பது பற்றியும் அமைச்சர் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த பணியை மத்திய அரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மத்திய பிரதேச அரசு மேற்கொள்ளும் என தெரிகிறது. இந்தப் பணிக்கு மட்டும் 300 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப் பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பின் உருவாக்கப் பட்ட போபால் நினைவு அறக்கட்டளை மருத்துவமனையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, 230 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துவது பற்றியும் அமைச்சர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app




