சென்னை: சென்னையில், தனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பொது கழிப்பிடங்கள் தற்போது திமுகவினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா இன்று (ஜூன் 15) வெளியிட்டுள்ள அறிக்கை:
வட சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு உட்பட்ட 10வது வட்டத்தின் நடைபாதைவாசிகளுக்காக எனது ஆட்சிக் காலத்தில் 1,511 மனைகள் உருவாக்கப்பட்டதோடு, இவர்களுக்காக 96 பொது கழிப்பிடங்களும் குடிசை மாற்று வாரியத்தால் கட்டித்தரப்பட்டன.
ஆனால், மேற்படி குடியிருப்புதாரர்கள் தங்கள் மனைகளுக்கு உள்ளேயே கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொண்டதால் பொதுக் கழிப்பிடம் பயனற்றுப் போனது. எனவே, இந்த பொதுக் கழிப்பிடத்தை அகற்றிவிட்டு மனைகளாக மாற்ற எனது ஆட்சிக் காலத்திலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2006ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, 96 பொதுக் கழிப்பிடங்கள் அமைந்திருந்த குடிசை மாற்று வாரிய இடத்தை திமுகவினர் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்து வருகிறார்கள். இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மைனாரிட்டி திமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்ட நிலம் தேவைப்பட்டதால், அங்கு குடியிருந்தவர்களுக்கு வேறு குடியிருப்புகள் ஒதுக்கும் பொருட்டு, பாரதி நகர் பகுதி-2ல் 108 வீடுகள் எனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன. 2006ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மேற்படி குடியிருப்புகளை உரியவர்களுக்கு ஒதுக்காமல், திமுகவினருக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகின்றது. திமுக அரசின் இது போன்ற முறையற்ற செயல் காரணமாக கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகர், பாரதி நகர் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்தாமல், ஆக்கிரமிப்பு, முறைகேடு ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருக்கும் மைனாரிட்டி திமுக அரசைக் கண்டித்தும், பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கழிப்பிடங்கள் திமுகவினரால் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாரதி நகர் பகுதி-2ல் கட்டப்பட்ட 108 குடியிருப்புகளை உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை (ஜூன் 16) காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
Want to write for Maniyosai?
Download our android app





