சென்னை: சென்னையை தமிழக தென் மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய இரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் திகழ்ந்து வருகிறது. தற்போது சென்னையின் இட நெருக்கடியை காரணம்காட்டி எழும்பூர் நிலையத்தின் முக்கியத்துவம் குறைக்கப்படவுள்ளது. இனி மதுரை, திருச்சி போன்ற தெற்கு நோக்கிச் செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் படியான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது.
மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
1907-ம் ஆண்டு முதல் எழும்பூர் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இட நெருக்கடியை காரணம் காட்டி எழும்பூரில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களையும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் திட்டத்தை ரெயில்வே துறை தயாரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
ராயபுரம் ரெயில் நிலையத்தை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அடுத்தப்படியாக 3-வது ரெயில் முனையமாக்கினால் பயணிகள் அனைவரும் பயன் அடைவார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ரெயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம் அமைப்பின் சார்பில் 22-ந்தேதி (செவ்வாய்) காலை 10.30 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து தெற்கு கூவம் சாலை சித்ரா திரையரங்கம் லாங்ஸ் தோட்ட சாலை வழியாக எழும்பூர் பாந்தியன் சாலைக்கு நடை பயணம் நடைபெறும்.
இவ்வாறு விக்கிரமராஜா கூறி உள்ளார்
Want to write for Maniyosai?
Download our android app